லங்காதகனம் – கடிதம்

hanuஇணையத்தில் சிறுகதைகளை பற்றிய ஏதோ ஒரு கட்டுரையில் ஜெயமோகனின் லங்கா தகனம் மிக சிறந்த சிறுகதை என்று படித்தேன். ஜெயமோகனின் வலைத்தளத்திலும் சரி இணையம் முழுதும் சல்லடை போட்டு தேடியும் அந்த சிறுகதை கிடைக்கவில்லை. எந்த சிறுகதை தொகுப்பில் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது.

இணையத்தில் இன்னுமொரு கட்டுரையில் அது கதகளி ஆட்டத்தை பற்றியது என்று குறிப்பு வேறு. ஏற்கனவே கதகளி நாடகம் ஒன்றில் கர்ணன்-குந்தி சந்திப்பு காட்சியை விவரிக்கும் கலைக்கணம் என்ற ஜெயமோகனின் கட்டுரையை படித்த பின்னரே எனக்கு பித்து பிடித்து விட்டது. இப்போது இது மேலதிக தகவல் ஆகி போனதும் தாங்கவில்லை. திசைகளின் நடுவே என்னும் சிறுகதை தொகுதியில் இந்த கதை உண்டு என்று அதை இணையத்தில் வாங்க முயற்சித்தேன், அச்சில் இல்லை என்று பதில்! அப்புறம் எங்கோ ஜெயமோகனின் குறுநாவல்கள் தொகுதியில் உண்டு என்று படித்ததும் மெரீனா புக்ஸ் தளத்தில் வாங்கினேன்.

அதை படித்த பின் கொஞ்சம் ஆன்டிகிளைமாக்ஸ் என்றே சொல்ல வேண்டும். ஜெமோவின் படைப்புகளில் வரும் நாகர்கோவிலில் காணப்படும் கேரள பின்னணி. அவரே கதை சொல்வது போன்ற அமைப்பு. நுணுக்கமான விவரிப்புகள், இயல்பான மற்றும் செறிவான கதை மாந்தர், கலைக் கணங்கள் எல்லாமே இருந்தன. அப்புறம் நான் தேடுவது என்ன……

சினிமாவின் அசுர வளர்ச்சி நாட்டுப்புறக் கலைகளை அழித்ததையும் அந்தக் கலைஞர்கள் நலிவுற்றதையும் எவ்வளவோ கதைகள் சொல்லி இருக்கின்றன. ஒரு முகைநரண் போல அவதாரம் என்னும் சினிமாவே அந்த அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால், எவ்வளவு சொன்னாலும் அது பத்தாது…. அவ்வளவு சீரழிவு நடந்துள்ளது!!

இந்த கதைக்கு எனக்கு இரண்டு கோணங்கள் புலப்பட்டது. நசிந்த கலையை பற்றிய கலைஞனின் ஏக்கம் ஒன்று. அந்த கலை உச்சத்தில் இருந்த போதும் சரி நசிந்து விட்ட நிலையிலும் சரி, என்றுமே எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காத, கேலிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு கலைஞனின் கோணம் இன்னொன்று. சிறு குழந்தைகள் அதிகம் குறும்பு செய்கையில் சொல்வது, “குரங்கு மாதிரி ஆடாதே” என்று தானே. சேட்டைக்கும் கேளிக்கைக்கும் நாம் எடுத்துக்காட்டாக வைத்திருக்கும் குரங்குக்கு இன்னொரு முகம் அனுமன்.

சூரியனையே நோக்கி பறந்தவன், சஞ்சீவி மலையை பெயர்த்து கையில் தூக்கி பறந்தவன், ஒரே எட்டில் சமுத்திரத்தை கடந்தவன், தன் வால் நுனியால் லங்கையை தகனம் செய்தவன்….. அந்த வேடம் கட்டும் ஒருவனை சமூகம் வெறும் குரங்கு என்றே அடையாளம் காட்டுகிறது. இராம தூது நாடகம் நடக்கும் பொதுமட்டுமே அவனுக்கு லங்கா தகனகொடுப்பினை. மற்ற நேரத்தில் கோமாளிவேடம். அனுமனின் உக்கிர ரூபம் கண்டு கொள்ளவே படவில்லை, கதகளி பெரும்பாலும் கரி வேடம் கொடுத்து கோமாளி கூத்து நடத்துகிறதே என்று ஒரு ஆற்றாமை.

பெரும்பாலும் நாம் அலுவலகத்தில் என்ன செய்கிறோம். மேலதிகாரி குறை கண்டுபிடிக்காத வகையில் வேலை செய்கிறோம். அதை விடுத்து, செய்யும் வேலையை திறம்பட செய்வோர் வெகுசிலரே. அதனினும் சிலர் அதில் மூழ்குபவர்கள். பெரும்பாலும், இது கலையிலேயே சாத்தியம்.மற்ற துறைகளில் அபூர்வம்!

லங்கா தகனம் அனந்த நாயர், கலையில் தன்னை மூழ்கிக் கொண்டவர். அனுமனை உக்கிர ரூபியாக மட்டுமே பார்ப்பவர். அவனை ராமனுக்கு தாசனாக மட்டுமே காட்டும் வால்மீகியையும், கம்பனையும் எழுத்தச்சனையும் திட்டுபவர். அந்த வேடம் கட்டுவதற்காக பிரம்மச்சரியம் பூண்டவர்.

வேடம் கட்டுவதோடு நிறுத்திக் கொள்ள முடியாதவர், அதனால் வருவது வினை என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால் அவருக்கோ அது…… எப்படி விவரிப்பது பூரணத்தை தேடுகிறார்.தன்னை கோமாளியாக நடத்துவதையும், சோற்றுக்கு காக்க வைப்பதையும் எதற்காக பொறுத்து கொள்கிறார். வயிற்று பாட்டிற்காக தானே. சும்மாவா சொன்னார் AP நாகராஜன், “சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்…..”

சச்சின் டெண்டுல்கரின் புகழ் உலகம் அறிந்தது. அனால் அதே சமயம் ராகுல் திராவிடை யோசித்து பாருங்கள். அவர் தேடியது என்ன. கிரிக்கெட் ஆட்டம் அறிந்தவர்கள் சொல்வார்கள், பேட்ஸ்மானுக்கு முக்கிய தேவை. மூன்று — டெக்னிக், டைமிங், டெம்பரமென்ட். ராகுல் திராவிடின் ஆட்டத்தை பார்த்தவர்கள், அவர் பேட்டிகளை படித்தவர்களுக்கு தெரியும். அவர் தன்னை அந்த கணத்தில் முழுதுமாக ஒப்படைத்து விட்டிருந்தார். He wanted to move towards perfection. பூரணத்துவம்.

சாதாரணமாகவே பூரணத்துவம் தேடி அலைபவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம், அவர்கள் முக்கியமானவர்களாக இருக்கும் போதிலும் கூட. அதற்கு தான் திராவிட உதாரணம் காட்டினேன். அப்படி ருக்கையிலே, குரங்கு வேடம் கட்டும் அனந்தன் நாயர் எம்மாத்திரம் எப்போதும் போல ஜெமோவின் விவரணைகள் உண்டு.

கட்டிடங்களை இவ்வளவு அழகாக விவரிப்பவர்கள் குறைவு. அதுவும் தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிந்திராத கேரளா பாணி கட்டிடங்களை நாம் புரிந்து கொள்ளும்படியாக விவரிப்பது சிறப்பு. கதை ஒரு கதகளி கலைஞனின் மன உளைச்சலை பற்றியது. அனால் அதன் ஓட்டத்தின் நடுவே கொட்டார(அரண்மனை) வாழ்வையும், தம்பிரானையும், அங்கே புழங்கும் பலதரப்பட்ட மனிதர்களையும் படம் பிடித்து காட்டி விடுகிறார்.

தம்பிரான் பருப்புச் சாதம் போட்டு வளர்க்கும் அல்சேஷன் நாய்களை கூட!! கதகளி கலைஞர்களுக்கு மத்தியில் நடக்கும் சம்பாஷணைகள் மிகவும் மிகவும் நுட்பமானவை. எல்லா துறையிலும் மூத்தவர்களின் நம்பிக்கைகளை, பயிற்சிகளை கேலி செய்யும் இளையோர் உண்டு. கலை என்பதெல்லாம் காலாவாதியாகிவிட்டது, வயிற்று பாட்டை ஒழுங்காக பார்த்தல் போதும் என்று என்னும் இளைய தலைமுறை….ஆடப் போவதில்லை என்று கூறும் ஆசான் திருவுள சீட்டு போட்டு பார்த்து திடீரென்று ஆட முடிவு செய்கிறார்.

அதிலிருந்து ஒரே சாதகம். அதை பலர் கழண்டு விட்டது என்று கேலி செய்ய சிலருக்கோ அதன் வீரியம் புரிகிறது. கதை சொல்லிக்கோ விபரீத எண்ணங்கள் மட்டுமே தோன்றுகின்றன. ஆசான் பூரணம் என்று எதை தேடுகிறார்……..நான் கடைசியில் என்ன தேடுகிறேன்……

தகனம் என்று இடுகுறி பெயர் போல கதை தலைப்பு. காற்று பலமாய் அடிப்பதால் வாண வேடிக்கை வேண்டாம் என்று முடிவு செய்தாகிவிட்டது. மேடையில் உள்ள குத்து விளக்குகளை அணைத்து விட்டு லாந்தர் மட்டுமே வைக்கலாமா என்று பதறும் காரியதரிசி…. லங்கா தகன நாடகத்திற்கு மேடை ஏறுகிறார் ஆசான்….

இல்லை இல்லை ஏறவில்லை… வேறேதோ செய்கிறார்….. ஆடுவது என்று முடிவெடுத்த பின்னர் அல்லும் பகலும் அனவரதமும் அதனுள் மூழ்கி கிடைக்கும் ஆசான், வேடக் குறை இருக்க கூடாது என்று பிரயத்தனப்படும் ஆசான், உடலசைவில் குரங்காகவே மாறிவிட்ட ஆசான், யாரிடமும் பேசாமல் தன்னுள் மூழ்கி கிடக்கும் ஆசான், பார்வை முகத்தின் உட்புறமாக திரும்பிவிட்ட ஆசான், சில நாட்களாக கிளை விட்டு கிளையும் மதில் சுவரும் தாவிக் கொண்டிருக்கும் ஆசான்….. அவர் அனாயசமாக தாவி மேடையில் ஏறும் இடத்தில் முடிந்து விடுகிறது கதை…..

நான் என்ன எதிர்பார்த்தேன்….. பூரணாகதி என்ற பெயரில் மேடையில் ஆசான் பற்றி எரிய வேண்டும் என்று தானே..கதை கிட்டத்தட்ட அதை தானே யூகிக்க வைக்கிறது….. அப்புறம் ஏன் அதை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்….ஒரு வேளை… ஒரு வேளை, அந்த பூரணத்துவம் தப்பி இருந்தால்….. அந்த கற்பனைக்கு இடம் விட்டு முடித்து விட்டார் ஜெமோ….. அதனால் தானோ என்னமோ மனம் பதறுகிறது….

ஸ்வேதா.எஸ்.

முந்தைய கட்டுரைவெற்றி கடிதங்கள் 10
அடுத்த கட்டுரைகுமரகுருபரன்-விஷ்ணுபுரம் கவிதைவிருது- காணொளிகள்