கன்யாகுமரி கடிதங்கள்

index

இனிய ஜெயம்,

கன்யாகுமரி குறித்து, தோழி சுசித்ராவின் கடித வரிசை பிரசுரம் ஆகத் துவங்கி இருக்கிறது. முழுதும் வாசித்து விட்டு வருகிறேன். இருப்பின்ம் அதில் சொல்ல ஒன்றுண்டு.

கதை நேரடியாக ரவி எங்கே உளத் திரிபடைகிறானோ அங்கே துவங்குகிறது. உண்மையில் இன்றைய யதார்த்தத்தில் புது மணத் தம்பதிகளில் எத்தனை மாப்பிள்ளை ”பரிசுத்தமாக” தனது மனைவியை சேர்கிறான்?

ரவியின் படைப்பாற்றலின் உரசலாக விளங்கும் கன்னிமையை ரவியும் கடை பிடிக்கிறான். விமலாவுக்கு முன் பெண் தொடர்புகள் ஏதும் அற்றவன். விமலாவுக்கு தன்னை தூய்மயானவனாகத்தான் தருகிறான்.  முதல் தொடர்பில் பழக்கமின்மையால் முத்தங்கள் கூட தவறுகிறது. பெண்ணுடல் அளிக்கும் பரவசம், சங்கமம் நிகழும் முன்பே அவனை ஆற்றல் இழக்க வைக்கிறது. விமலா மெல்ல நகைத்தபடி ”பரவா இல்ல” என்கிறாள். அங்குதான் ரவியின் முதல் திரிபு நிகழ்கிறது.

தூய்மையாக அவனை அணுகும் ரவியின் பரிசுத்தம் விமலாவுக்கான பரிசல்லவா? அந்தப் ”பரவா இல்லை” ரவிக்குள் ஏளனமாக விழும் என விமலா அறிய வில்லை.அவளும் சிறு பெண் தானே.

பரவா இல்லை என்பதற்கு பதில் , இதைப் புரிந்து கொள்கிறேன். உன் பரிசை ஏற்றுக் கொள்கிறேன் என அவள் அவனுக்கு உணர்த்தி இருந்தால் ரவி அடையும் அந்த இறுதி இழப்பு அவனுக்கு நேர்ந்திருக்காது.

யோசித்துப் பார்த்தால் உலகில் நிகழும் அத்தனை வன் புணர்வு குற்றவாளிகளையும் இந்த ”முதல் சரிவு” உளவியலுக்குள் கொண்டு வந்து விட முடியும். ஆம் இங்கே பெண்ணுக்கும் புரிதல் வேண்டும்.

கடலூர் சீனு

*

அன்புள்ள ஜெ

கன்யாகுமரி நாவலைப்பற்றி சுசித்ராவின் வாசிப்பு அற்புதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து அந்நாவலுக்கு இப்படி ஒரு விரிவான வாசிப்பு நிகழுமென நீங்களே கூட எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள். 1998ல் வெளிவந்த நாவல் அது. விஷ்ணுபுரத்திற்குப்பின் ‘இளைப்பப்றுவதற்காக’ நீங்கள் எழுதிய நாவல் அது என்று சொன்னிர்கள். அதுவே அந்நாவலைக்கொஞ்சம் கீழே கொண்டுவந்துவிட்டது வாசகர்களின் பார்வையில் என நினைக்கிறேன். ஆனால் அன்றே நான் உங்களுக்கு அந்நாவல் முக்கியமான படைப்பு என்று கடிதம் எழுதியிருந்தேன். அது காமம் ஆணவம் இரண்டுக்கும் இடையே உள்ள ஊடாட்டத்தைப்பற்றிப்பேசும் முக்கியமான நூல். காமகுரோதமோகம் என்றுதான் நம் மரபு சொல்கிறது. மூன்று அழுக்குகளும் ஒன்றாகக் குடியிருக்கும் ஒரு உள்ளத்தின் சித்திரம். மூன்றும் சேர்ந்து எப்படி மனிதமனங்களை நெசவுசெய்திருக்கின்றன என்று காட்டுவது அந்நாவல்

சண்முகம்

***

அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நாளில் உங்கள் மற்ற ஆக்கங்கள் எல்லாமே கிட்டத்தட்ட மறைந்துபோய்விட்டன. நான் ஒருமுறை ஒரு சந்திப்பிலே சொன்னேன். ஜெமோ கன்யாகுமரி மட்டுமே எழுதியிருந்தால் அவரை அதைவைத்தே ஒரு பெரிய எழுத்தாளர் என்று சொல்லியிருப்பார்கள். இன்றுகூட கன்யாகுமரிக்குச் சமானமான  உளவியல் ஓட்டம் கொண்ட ஒரு படைப்பை ஓர் இளம்படைப்பாளி எழுதியிருந்தால் அவரை கொண்டாடியிருப்பார்கள் என்று. அத்தனை வாசிப்பு நுண்மைகள் கொண்டது அது.

சுசித்ரா அதை கொற்றவை உட்பட உங்கள் அனைத்துப்படைப்புகளையும் எடுத்துக்கொண்டு பேசியிருப்பது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது

சரவணன்

முந்தைய கட்டுரைஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2
அடுத்த கட்டுரைசாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்