அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு
முன்பு வாரபத்திரிக்கைகளில் வந்த தொடர்கதைகள் போல் 24 அத்தியாயங்களுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவில் ஒரு சிறு திருப்பத்துடன் அமைந்த இரவு குறுநாவல் ஒவ்வொரு நாளும் இரவு சரியாக 12 மணிக்கு பதிவெற்றம் செய்ததிலிருந்து நீங்கள் இக்கதைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால் ‘முற்றும்’ வருவரை காத்திருந்து முழுவதும் ஒரே மூச்சில்தான் படித்து முடித்தேன். எங்குமே தோய்வில்லாமல் அடர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. நிறைய எழுதுவதை நீட்டி எழுதுவதாக சிலர் சொல்வதுண்டு. இந்த கதையில் எந்த பகுதியுமே தேவையில்லை என சொல்லமுடியாது. அப்படி அதிகம் அல்லது தேவையில்லை என எவரேனும் கூறினால் அது அவரின் அனுபவ குறைவையே குறிக்கும் என நினைக்கிறேன்.
வாசிப்பின் ஊடேயே கதை எங்கோ திருப்பம் கொள்ளப்போகிறது என்ற நினைப்போடே வாசிக்க முடிந்தது. இதுவே இக்கதையின் மிகப்பெரியா வெற்றியாக நினைக்கிறேன். கமலாவின் இறப்பிற்கு பின்னால் சற்று நாடகத்தன்மை கொண்டாலும், வர்ணணைகள், சித்தரிப்புகளை காணும்போது ஆழ்மனதின் மிகப் பக்கத்தில் நின்றே கதை முழுவதும் எழுதியிருக்கிறீர்கள் என தோன்ற வைக்கிறது. வாசகர்களையும் பக்கத்தில் அழைத்துவந்து உவகைகொள்ள வைத்துவிட்டீர்கள். மறக்கவே முடியாதபடி மனம் முழுதும் நிரம்பிவழிய வைத்துவிட்டீர்கள். இதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.
நுண்ணிய பகுதிகளை மனஎழுச்சியோடு எழுதிய இடங்களை, பல இடங்களை தவறவிட்டாலும், நாங்களும் கொண்டோமென உங்களுக்கு சொல்வதில் சற்று பெருமையாக உள்ளது, இதோ சில:
அந்தப்படிமங்கள் வழியாக அவர் உத்தேசிப்பதைத்தான் சொல்கிறாரா அல்லது அந்தப்படிமங்கள் அவரை யானைபோலச் சுமந்துகொண்டுசெல்கின்றனவா?
ஒரு முழுக்கச்சேரி முடிந்தபின்னர் உறையிடாமல் வைக்கப்பட்டிருக்கும் தம்புரா போன்று என் அகத்தை உணர்ந்தேன்.
தான் சொல்லும் விஷயங்களில் அபாரமான நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து மனதை விலக்குவது எளிதல்ல.
இந்த ஒருநாள்தான் நான் யாரென்பதை எனக்குக் காட்டும். என்னை பிறிதொருவர் வசியம் செய்ய முடியுமா என்று நானே அறியும் நாள் இது.
ஏஸியின் உறுமலைக் கேட்டேன். அதை கடலோசை என்று எண்ணியது என் மனம்.
இமைகள் சிறிய குருவியொன்றின் சிறகுகள் போலச் சரிந்திருந்தன.
பிரச்சினைகள் இல்லாத சலிப்பில் இருந்து வெல்ல திரும்பவும் தவறுகளுக்குச் செல்வான்.
நீலிமாவை என் உடலின் எல்லா மயிர்க்கால்களாலும் உணர்ந்தபடி அவளைப் பார்க்காமல் தாமஸை நோக்கி பார்வையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
எட்டாம் வகுப்பு மாணவனை நீங்கள் ஏழாம் வகுப்பில் உட்காரச் செய்ய முடியாது. அவன் உடம்பு கூசும்.
பலசமயம் மனிதனுக்கு துன்பம் தேவைபப்டுகிறது. வலி தேவைப்படுகிறது. அவமானம் தேவைப்படுகிறது. தேடிப்போய் அவற்றை அடைபவர்கள் உண்டு
நான் ”ஷட் அப்…” என்று கடுமையாக சொல்ல அவள் ஒரு கணம் யார் இவன் என்பதுபோல என்னை வெறித்துப்பார்த்தபின் அமர்ந்துகொண்டாள்.
பெண்ணை விரும்பக்கூடிய எவரும் அவளைப் பார்த்ததுமே அழகாக இருப்பதாகச் சொல்ல மாட்டார்கள்.
பிளேடின் லேசர்செதுக்கிய கூர்நுனியைப் பார்ப்பதுபோல ஒரு மெல்லிய பதற்றம் அவளைப் பார்க்கும்போது ஏற்பட்டது
ஆனால் என் பழைய உலகுக்கு என்னால் செல்ல முடியாதே. பழைய இடங்களுக்கு மட்டும்தானே செல்ல முடியும்?
இந்த முட்டாளை விட்டு அவள் சோரம்போகாமலிருந்தால்தான் ஆச்சரியம் என்று நினைப்பீர்கள்.
ஆழமான மனநெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் புறத்தோற்றத்தில் ஏதேனும் மாற்றத்தை அடைவதை அப்போது நினைவுகூர்ந்தேன்.
“மனநிலைகளை ஊகிக்க முடியும் ·பாதர். மனநிலை மாற்றங்களைத்தான் ஊகிக்க முடியாது”
இது ஒரு சாம்பிளுக்குதான் வேறுசில பகுதிகளை சொல்ல பாரா முழுவதும் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால் அவற்றை விட்டுவிட்டேன்.
கடைசி அத்தியாயத்தை தாமஸுக்கு சொல்வதாக அமைத்திருப்பது கதைகூறும் உங்கள் திறமையை காட்டுகிறது.
கடைசியாக இப்படி ஒரு கதை எழுதியமைக்கு, வாசகர்களின் சார்பாகவும், என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்.
கே.ஜே.அசோக்குமார்.
அன்புள்ள ஜெ,
இரவு என்னும் கதையை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். நிறைய இடங்களை நாலைந்து முறை வாசித்தேன். அதன்பின்னர்தான் என்ன சொல்லவருகின்றீர்கள் என்பது எனக்கு புரிந்தது. உதாரணமாக ஒரு வர்ணனை. சாதாரணமாக வரக்கூடியது.
”ஐம்பதுக்கும் மேலான ஆடுகளை அங்கே அன்று வெட்டினார்கள். பீச்சிய குருதி தரையில் தெறித்து அதன் மீது மனிதர்கள் நடந்து நடந்து கோயில் முழுக்க ரத்தத்தின் பச்சை வீச்சம். பெண்கள்கூட அந்தப் பச்சைக் குருதியை தொட்டு நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டார்கள். வெட்டப்பட்ட ஆடுகள் வரிசையாக தூக்கி கிடத்தப்பட்டிருந்தன. குருதி படிந்து உலர்ந்து திரிதிரியாக ஆன அவற்றின் சருமம் மீது ஈக்கள் ரீங்கரித்தன. கருவறைக்குள் பளபளக்கும் கிரீடமும், செம்பட்டும், வெறித்த விழிகளுமாக காளி அமர்திருந்தாள்”
இதிலே ‘குருதி படிந்து உலர்ந்து திரிதிரியாக ஆன அவற்றின் சருமம்’ என்ற வரி என்னை வெளியே தள்ளிவிட்டது. அதேமாதிரி ‘பச்சை வீச்சம்’ என்ற வார்த்தை. அது புதிதான வார்த்தை. ஆனால் ரத்த கவிச்சியை அது சொல்லிவிட்டது. வெட்டப்பட்ட ஆட்டின் சடலத்தை கண்முன்னே கண்டேன். இப்படி நீங்கள் எழுதிக்கொண்டே செல்கிறீர்கள்.
இந்த அளவுக்குச் செறிவாக எழுதினால் அதை வாசகர்கள் உள்வாங்க முடியுமா? இப்படி எழுதுவதனால் என்ன ஆகிறது என்றால் கதைக்கு வெளியே நாம் வந்துவிடுகிறோம். கதையை ஒரே ஓர்மையாக வாசிக்க முடிவதில்லை. வரிவரியாக நினைவு இருக்கும்போது நமக்கு கதையின் ஓட்டம் கிடைப்பதில்லை.
இதேபோல எழுதி தள்ளுகிறீர்கள். நீங்கள் எழுதிய ஈராறு கால்கொண்டெழும் புரவி கதையே இன்னும் வாசித்து சர்ச்சை பண்ணி முடிக்கவில்லை. அதற்குள் இது மூன்றாவது கதை. இது கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.
தப்பாக எடுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக இங்கே ஒரு நண்பர் இரவு கதையிலே சரவணனின் ஈடிப்பஸ் காம்பிளக்ஸ் இருக்கிறது என்று சொன்னார். அவன் அம்மாவைப்பற்றி நினைக்கும் இடங்களை அவர் சுட்டிக்காட்டினார். அவன் அதைப்பற்றி முக்கர்ஜி பேசும்போது கத்துகிறான். நான் அதை கவனிக்கவே இல்லை. காரணம் வேறு விஷயங்களை நான் கூர்ந்து வாசித்தேன்
வாசகனை கருத்திலே கொள்ளாமல் எழுதிக்கொண்டே போவது நல்லதா என்ன?
எஸ்.சுப்ரமணியம்
அன்புள்ள சுப்ரமணியம், அசோக் குமார்,
தங்கள் வாசிப்புக்கு நன்றி
என்னுடைய கதைகள் எனக்கு இணையானவர்களுக்காக அல்லது என்னைவிட மேலானவர்களுக்காக எழுதப்படுபவை. மிகப்பெரும்பாலும் அவர்களே வாசிக்கிறார்கள். மற்றவர்கள் அதிகபட்சம் ஒரு அத்தியாயத்தில் குழப்பமும் எரிச்சலும் அடைந்து விலகி எதையாவது சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்களை நான் கடந்த 20 வருடங்களாகக் கண்டு வருகிறேன் என்பதனால் தெளிவாகவே புரிந்துகொள்வேன்.
பெரும்பாலும் இவர்கள் கடினமான நடை என்பார்கள். என்னுடைய நடை மிக எளிமையானது என்பதை வாசகர்கள் உணர முடியும். சிறிய சொற்றொடர்கள், சிறிய பத்திகள் கொண்டவை. புரியவேண்டும், கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்படுபவை. நடை சிக்கலாக தோற்றம் அளிப்பது ஏனென்றால் எதுவுமே சுருக்கமாக, எது சொல்லப்பட வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி எழுதப்பட்டிருக்கும் என்பதுதான். ஆகவே ஒருவரிக்குப் பின் அடுத்தவரி அதே முக்கியத்துவத்துடன் வரும். ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் வாசகர்களே வாசித்துச் செல்ல முடியும், அவர்களுக்கே அது கிடைக்கும். கட்டுரைகளும் அப்படித்தான்.
அத்துடன் பொதுவாக நான் இதழியலில் வழக்கமாக எழுதப்படும் உத்திகள் , வழக்கமான சொற்றொடர்களை எழுதுவதில்லை. சொல்வதற்கான உதாரணமோ உவமையோகூட புதிதாக இருக்க வேண்டுமென்றே நினைப்பேன். ஆகவே ஒவ்வொரு வரிக்காகவும் மீண்டும் வாசித்தாகவேண்டும், சுயமாகக் கற்பனை செய்தாகவேண்டும்.
கடைசியாக, நான் மன ஓட்டத்தின் நுட்பமான தருணங்களைச் சொல்ல விரும்புகிறேன். மனிதமனம் எப்படி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிக்கொள்கிறது, எப்படி ஒன்றை மறைக்க இன்னொன்றை பயன்படுத்துகிறது, எப்படி எதிர்பாராத திருப்பம் அடைகிறது என்று. இது எப்போதுமே எழுத்தாளனுக்குப் பெரிய சவால். மரணம் போன்ற ஒரு பெரும் நெருக்கடியில் மனித மனம் என்ன செய்யும், என்னென்ன வகையில் கனவுகளையும் கற்பனையும் கையாண்டு அதைக் கடந்து வரும் என்பதெல்லாம் சாதாரண மொழியில் சொல்ல முடியாது. ஒன்றைச் சொல்வதற்குள் கூடவே நூறு விஷயங்கள் சேர்ந்து வரும்.
அவற்றை வாசிக்கும் வாசகனும் எங்கோ அவற்றை உணர்ந்திருக்க வேண்டும். எங்கோ அதே போல அகநெருக்கடிகளைச் சந்தித்திருக்க வேண்டும். அதைவிட, அந்த அகநெருக்கடிகளை கூர்ந்து கவனித்தும் இருக்க வேண்டும். அப்படிக் கூர்ந்து கவனித்த ஒருவரால் இந்த வரிகளை தொட்டு தன் அனுபவமாக ஆக்க முடியும்.
என்னுடைய எழுத்துக்கள் அளவில் அதிகம் என்று சொல்பவர்களும் சிலர் உண்டு என நான் அறிவேன். நான் முக்கியமாக நினைக்கும் பேரிலக்கியவாதிகள் அனைவருமே என்னைவிட அதிகமாக, என்னைவிட தீவிரமாக எழுதியவர்கள். ஒன்ற்றுக்கும் மேற்பட்ட தளங்களில் எழுதியவர்கள். காரணம் அவர்களுக்கு ஒரு கேள்வி, ஒரு தேடல் உண்டு. அதை அவர்கள் எல்லா ஞானத்தளங்களிலும் தேடுகிறார்கள். அவர்களில் பலர் எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதியவர்கள். எழுதித்தீராதவர்கள்.
உதாரணமாக தஸ்தயேவ்ஸ்கி எல்லாவற்றையும் பல தடவை எழுதியிருக்கிறார். கதைமாந்தர்களை கதைச் சந்தர்ப்பங்களை மையப்பிரச்சினையை. வேறு வேறு கோணங்களில், அவ்வளவுதான். அவரை அவரது தீவிரத்தைப் பகிர்ந்துகொண்டுதான் வாசிக்க முடியும். அந்த தீவிரமில்லாதவர்கள் கரமஸோவ் சகோதரர்களை முடிக்க முடியாது. அதில் உள்ள எல்லாமே ஏற்கனவே அவரால் எழுதப்பட்டவை என்றறிந்தும் அதைப்படிக்க இன்னும் தீவிரம் தேவை.
என்னுடைய எழுத்து என்னுடைய தேடலின் தீவிரத்தாலேயே ஒழிய எவர் கூட வருவார் என்ற கணக்குடன் எழுதப்படுவதல்ல. ஆனால் தமிழில் மிக அதிகமான தீவிர வாசகர்களால் ஒரு எழுத்துகூட தவறவிடப்படாமல் வாசிக்கப்படும் எழுத்தாளன் இன்று நானே. இதை எவரும் தங்கள் சுற்றத்தை கவனித்தாலே அறியலாம்.
அவர்களில் ஒருதரப்பினர் என்னை நிராகரிக்க முயல்வார்கள். சிலர் என்னை வெறுக்கவும் கூடும். அது அவர்களின் அறிதல், அவர்களின் நுண்ணுணர்வு சார்ந்தது. ஆனால் என்னுடன் அவர்கள் இடைவெளியில்லாமல் அந்தரங்கமாக உரையாடிக்கொண்டும் இருப்பார்கள். என்னிடம் சொல்ல நான் எழுதிய அளவுக்கே சொற்களை அவர்களும் வைத்திருப்பார்கள்.
எந்த எழுத்தாளனும் தன் சூழலில் அவ்வாறே பங்களிப்பாற்ற முடியும். தீவிரத்தாலேயே அவன் உரையாடுகிறான். பாரதியும் புதுமைப்பித்தனும் செயல்பட்ட வருடங்களின் அளவை வைத்துப்பார்த்தால் அவர்கள் எழுதிய அளவு மிக அதிகம். அதிலும் பாரதியின் அளவு விகிதத்தை எந்த தமிழ் எழுத்தாளனும் இன்னமும் தொடவில்லை. அந்த தீவிரமில்லாவிட்டால் நம் காலகட்டத்தின் ஆகச்சிறந்த மனங்களுடன் உரையாட முடியாது.
அத்தகைய வாசகர்களுக்காகவே இவை எழுதப்படுகின்றன. சாதாரண அறிவுத்திறனும் சாதாரண கற்பனைத்திறனும் கொண்டவர்களுக்காக அல்ல. அவர்கள் தங்களுக்கான வாசிப்புகளைச் செய்யலாம். ஒரு சிறு விஷயத்தை நீர்த்து பல பக்கங்களுக்கு எழுதுதல், நேர்ப்பேச்சில் பேசுவதுபோல செயற்கையான விளையாட்டுத்தன்மையுடன் நீர்க்க எழுதுதல் ஆகியவையே இவர்களுக்கு உரிய எழுத்து. அவர்களுக்கா அவ்வாறு எழுதக்கூடியவர்கள் பலர் உள்ளனர். அத்தகைய வாசகர்கள் சொல்லும் குறைகளை அல்லது கஷ்டங்களை நான் பொருட்படுத்துவதில்லை.
நீங்கள் வாசித்திருக்கிறீர்கள், கூடவே வருகிறீர்கள். அதுவெ போதும்.
நன்றி
ஜெ
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
வணக்கம். நலம்தானே.
உங்கள் இணையத்தளப் பக்க்ம போவதில்லை என்ற பிடிவாதத்துடன் இருப்பேன். எப்படியும் இரண்டு வாரம் செல்வதற்கிடையில் மறுபடியும் மனம் தளர்ந்து உள்ளே நுழைந்துவிடுவேன். ‘இரவு’ முழுவதும் படித்துவிட்டேன். நாவல் உச்சத்தை தொட்டுவிட்டது. இனி எப்படி முடிந்தாலும் எனக்கு பரவாயில்லை. முடியாமல் இப்படியே நின்றால்கூட ஒன்றுதான். அது உன்னதத்தை அடைந்துவிட்டது. நான் எத்தனையோ நூறு ஆங்கில நாவல்களும் தமிழ் நாவல்களும் மொழிபெயர்ப்பு நாவல்களும் படித்திருக்கிறேன் ஆனால் இப்படியான ஒரு கற்பனையை எங்கேயுமே படித்ததில்லை. அருமையான கவிதை தலைப்புகளும் அதற்கு ஏற்ற மாதிரி புகைப்படங்களும் நம்பமுடியாத தரத்தில் வருகிறது. மற்றவர்களுக்கு ஒருவாரம் எடுக்கும் வேலையை ஓரிரு மணிநேரத்தில் செய்து முடித்துவிடுகிறீர்கள்.
மாப்பஸான் காலத்தில் அவர் எழுதுவதையெல்லாம் ரோல்ஸ்ரோயும் துர்கனேவும் நீட்சேயும் படிப்பார்களாம். செக்கோவ் படிக்கத் தயங்குவார். அவருடைய கலை நேர்த்தி செக்கோவை ஆட்டிவிடும். அவரால் ஒன்றுமே படைக்கமுடியாமல் போகும். அந்த நிலைதான் எனக்கும். வாசிப்பும் எழுத்தும் தடைபடுகிறது. ஆனால் உங்கள் எழுத்து தரும் கலை அனுபவத்துக்கு ஈடு ஒன்றுமே இல்லை.
அன்புடன்
அ.முத்துலிங்கம்
அன்புள்ள அமு சார்,
நலம்தானே?
இவௌ வாசித்தீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி. ஒரு சிறு சுய அம்சம் கூடும்போதுதான் படைப்புக்கு தீவிரம் வருகிறது. தனிப்பட்ட முறையில் நானும் ஒரு இரவு உபாசகன். இன்றும் இரவின் எழிலை விரும்புபவன். சமீபத்தில் ரிக் வேதத்தில் ராத்ரி சூக்தங்களை வாசித்தபோது இரவின் எழில் பற்றி பரவசமாக எண்ணிக் கொண்டேன். ஆனால் அன்றிரவு இன்னொரு எண்ணம். அம்மா அப்பா இறந்த நாட்களில் இதே இரவுகள் பெரும் சித்திரவதையாக இருந்திருக்கின்றன! ஆக, எது கனவோ அந்த தளம் கொடுங்கனவாகவும் ஆகலாம். அதையே எழுத எண்ணினேன். தத்துவார்த்தமான ஒரு தேடல். அதை வர்ணனைகள் மூலம் அழகாக கொடுப்பதற்கான முயற்சி
நன்றி