பாரதி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

பாரதி பற்றிய விவாதங்களைக் கவனித்து வருகிறேன். நான் பாரதியை வாசித்தவனல்ல. சொல்லப் போனால் உங்களைத் தவிர வேறு யாரையும் சொல்லும் அளவிற்கு வாசித்தது இல்லை. உங்களின் கலை அளவுகோல்கள் அபாரமானவை. நான் உங்களுக்குக் கோபம் என்ற கடிதத்தில் ‘ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எரியும் நெருப்பு ஒன்றுதானோ’ என்று எழுதினேன். எனக்கு இந்த வரி மிகவும் ஆச்சரியமூட்டியது. உங்களின் கலை அளவுகோல்கள் பற்றிப் புரிந்து கொள்ள எனக்கு உதவியது என்றால் மிகையல்ல. ஒரு மகாகவி என்றால் அவன் வரியில் எதை அடைவான் என்று உணர்கிறேன்.

கலையின் மூலம் மானுடன் அடையும் உச்சமே கலையில் ரத்தினங்கள். தான் வாழும் கால இட சூழ் நிலை ஜாலங்களைக் கிழித்துத் தன் அசல் சிந்தனையின் மூலம் மெய்யான ஒன்றைக் கலையில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துபவனே மகாகவியாக இருக்க இயலும்.

ஏறத்தாழ இரண்டாயிர வருட தமிழ் இலக்கியம், பண்பாட்டு உருவாக்கங்கள், மாற்றங்கள், வரலாற்றுப் பின்புலம் பற்றிப் புரிதல் இல்லாமல் எப்படி இந்த விவாதத்தில் பங்கு கொள்ள இயலும்? இது குறைந்தபட்ச தேவை. மேலும் நீங்கள் இந்தியா மற்றும் உலக இலக்கியப் பின்புலத்தில் வைத்து விவாதிக்கிறீர்கள்,

நன்றி
ராஜா

அன்புள்ள ராஜா

நான் விவாதிப்பதன் நோக்கத்தை சிலரே புரிந்துகொண்டிருக்கிறார்கள். நாம் நம்முடைய ரசனையை விவாதித்துத் தீட்டிக்கொள்வதன் மூலம், நம் எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வதன்மூலம் மட்டுமே நம் கவி மரபை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும். இன்று எழுதப்படும் முக்கியமான கவிதைகளை ரசிக்கவும் முடியும்.

பாரதி விவாதத்தில் நான் எதிர்பார்த்ததே பேசப்பட்டது. ஒருபக்கம் மரபைப்பற்றிய பேச்சே இல்லை. மரபு பற்றிய அறியாமையும் கண்மூடித்தனமான ஒரு பக்தியும். இன்னொரு பக்கம் நவீனத்தமிழில் உள்ள கவிதைகளைப்பற்றிப் பரிபூர்ணமான அறியாமை, இளக்காரம்,நிராகரிப்பு. இந்த மூட பாரதி பக்தி உருவாக்கியது அதையே. கவிதை என்பது நுண்ணிய மொழிவெளிப்பாடு என்பதையே மறந்து மேடைக்கவிதைகளுக்கு அப்பால் செல்லமுடியாமல் அது ரசனையைக் கட்டிப்போடுவதை இப்போதுதான் கவனித்தேன். இந்த விவாதமே பின்னால் பாருங்கள் என்று கோருவது. முன்னால் பாருங்கள் என அறைகூவுவது

இந்த விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பல பாரதிவரிகளை விட எவ்வளவோ நுண்ணிய வரிகளைத் தமிழில் நவீன கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.சிலராவது தங்கள் ரசனையை விரிவாக்கிக்கொண்டால் அதுவே விவாதத்தின் வெற்றி

ஜெ

ஜெயமோகன்,

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து …கடைசியில்.. என்று கிராமங்களில் பேசக்கேட்டிருக்கிறேன். இப்போது அந்த திசையில்தான் உங்கள் பாரதி விவாதம் பயணிப்பதாக நான் கருதுகிறேன்.அதேசமயம் நீங்கள் மட்டும் அதே இடத்தில் அசையாமல் நிற்பதையும் காண்கிறேன்.இந்த விவாதம் இன்றைய தலைமுறைக்கு எவ்விதத்திலும் பயனளிக்கத்தக்கது என்று தோன்றவில்லை.இதுபோன்ற ஆய்வுகள் இந்த சமூகத்துக்குப் புகழ் சேர்ப்பதைக் காட்டிலும் கடந்த தலைமுறை மீது அலட்சியமும் அவநம்பிக்கையையுமே ஏற்படுத்த வழி வகுக்கும்.

பாரதி மகா கவியா அல்லது சாதா கவியா என்ற விவாதம் முன் எப்போதோ முடிந்து போனதாகக் கருதியிருந்தேன். இன்று உங்கள் பங்குக்கு நீங்கள் தரநிர்ணயத் தராசைக் கையில் எடுத்திருக்கிறீர்கள்.

பாரதி ஒரு மகாகவி என்று போற்றப்பட்டபோது பாரதி மகாகவியல்ல அவர் வெறும் சாதா கவிதான் என்று பேராசிரியர் கல்கி சொல்லிக்கொண்டிருந்ததையும் காலப்போக்கில் அவர் தன் கருத்துக்களை மாற்றிக்கொண்டு பாரதி மகாகவிதான் என்று ஒத்துக்கொண்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.பின்னாளில் கல்கி தன் பேச்சுக்கு வருந்தி பாரதிக்கு மணிமண்டபம் எழுப்பி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது கூட நினைவிருக்கக்கூடும்.
பொதுவாக எதிர்வினை ஆற்றுவதன் மூலமே தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்று பேசுகிற எழுதுகிற நடக்கிற ஒரு சாராரை நான் அறிந்திருக்கிறேன்.ஒருவேளை உங்களின் சமீபத்திய வெடிகுண்டுக்கும் இதுதான் காரணமோ என்னவோ.
பாரதி வாழ்ந்த காலம் சாதிகளாலும் சமயங்களாலும் இந்த தேசம் சிதறிக்கிடந்து.ஆனால் அதற்கு மாறாக இந்த நாடே அன்னியருக்கு ஒற்றுமையுடன் தலைதாழ்த்தி இருந்தது.அப்போது..

ஆயிரம் உண்டிங்கு சாதி இதில் அன்னியர் வந்து புகல்வதென்ன நீதி … என்று வெகுண்டெழுந்தவன் பாரதி.இந்த தேசத்துக்குத் தேவை ஏற்பட்டபோது தோன்றியவன் பாரதி.அவன் மக்களின் வாழ்வின் சந்தோஷம் சுதந்திரம்தான் என்று கருதினான்.சுந்திரம் பெற்றுவிட்டால் இந்த தேசம் அனைத்தையும் பெற்றுவிடும் என்று நம்பியவன் பாரதி.அவனுடைய எழுத்துக்களில் அன்னிய எழுத்துக்களின் தாக்கங்கள்இருந்திருக்கக்கூடும். அவன் அன்னிய மொழிகளை நேசித்தவன் அறிந்தவன் என்ற காரணமாகக்கூட இருக்கலாம்.

இந்த தேசத்தின் புராண இதிகாசங்களின் சாயல்கள் தென்பட்டிருக்கலாம்..புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஒருமுறை குறிப்பிட்டது போல அவை அவன் தந்தையிடமிருந்து கற்றவை.இருந்தபோதிலும் அவனுடைய பெரும்பாலான எழுத்துக்களில் விடுதலை விடுதலை என்ற மூச்சுக்காற்று சீறி வெளிப்பட்டதை மறந்திட இயலாது.ஒவ்வொரு படைப்பாளியைப் போன்றே அவனுடைய படைப்புகளும் படிப்படியாகத்தான் உச்சத்தைத் தொட்டன.மகாபாரதத்தின் சாயலென்றாலும் விடுதலை மூச்சைக் கலந்து உணர்வு தெறிக்கப் படைக்கப்பட்ட காவியம் பாஞ்சாலி சபதம். சிந்து நதியின் என்ற கவிதையில் வருங்கால பாரதத்தின் தேவைகளை அன்றே கனவு கண்டவன் பாரதி.
ஒரு கதையையோ ஒரு கவிதையையோ எழுதியதன் மூலம் நோபல் பரிசு பெற்ற ஒருவரை நீங்கள்தான் கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள்
பாரதி வடித்தெடுத்த கவிதைவரிகளில் 80 விழுக்காட்டுக்கு மேலாகஇன்னும் இந்த நாட்டில் உரக்கப் பேசப்பட்டு வருவதைப் பாருங்கள்.இது போன்ற ஏராளமான வரிகள் மக்களிடையே கலந்த வேறொரு கவிஞன் இல்லையென்றே கருதுகிறேன்.அவன் இந்த மண்ணைப் பொறுத்தமட்டில் மகா கவியல்லவா. அன்புள்ள ஜெயமோகன்!
உங்கள் வாசிப்புத் திறனும் அதற்கு நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற உழைப்பும் அசாத்தியமானது.

அதை உணர்கிறேன்.ஆனால்..

தேசிய அளவில் பாரதிமீதும் தேசப்பிதா காந்தி மீதும் நான் கொண்டிருக்கிற நேசம் உயர்வானது.பட்டிமன்றங்களிலும் வழக்காடுமன்றங்களிலும் கூடப் பேசப்படுகிற பொருளின் நிறை குறைதான் பேசப்படுமே தவிர எடுத்துக்கொண்ட பொருளைத் தாழ்த்த எவரும் முயற்சிப்பதில்லை.

இன்று போற்றிப்புகழப்படும் பாரதி அன்று ஒரு மனநோயாளியாக ஒரு பயித்தியக்காரனாகத்தான் பேசப்பட்டான்.அவன் சந்திக்க நேர்ந்த சிரமங்கள் எவரும் சந்தித்திருக்க முடியாது.ஆனால் இன்று அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற உயரம் மகத்தானது. அந்த அஸ்திவாரத்தின் அடிக் கற்களை அசைக்க முயற்சிக்காதீர்கள்.
பாரதியார் பாடிய ஆயிரக்கணக்கான பாக்களில் தமிழர் நாகரீகம் எதனையும் பாடவில்லை,அது அவர்அறியாதது என்று பேசும் பாரதிதாசன் கேட்டிருக்கவேண்டும் உங்கள் கூற்றின் முகவரியை …நார்நாராகக் கிழித்திருப்பார்.

பாரதியை மகாகவியாக உருவெடுக்க உதவிய தலையாய கவிதைகள் எவையெவை என்ற திசையில் உங்கள் விவாதம் திரும்பட்டும்.தகுந்த நேரத்தில் அவதரித்த ஒரு தேசிய கவியைத் தரம்தாழ்த்த முயற்சிக்காதீர்கள்.

அடுத்து..
நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி தேசப்பிதாவா அல்லது சாதா பிதாவா என்ற அடுத்த அணுகுண்டைப் பிரயோகிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் அயரா உழைப்பை நேசிக்கும்..

பாண்டியன்ஜி
அன்புள்ள பாண்டியன்

உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன்.

என்னுடைய வாதங்களை ஏற்கனவே எழுதிவிட்டேன்

ஜெ

அண்ணா,
நீங்கள் தமிழ் மகா கவிக்குக் கம்பரை அளவுகோலாக வைத்தால் இனி தமிழில் மகா கவிகள் தோன்ற முடியும் என்று நினைக்கின்றீர்களா?
நடராஜன்

அன்புள்ள நடராஜன்

தமிழ் வறியதல்ல. அது இத்தனை பெருங்கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது. இன்னும் உருவாக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைதேர்திரும்பும் கணங்கள்
அடுத்த கட்டுரைமரணம்