
அன்புள்ள ஜெ,
இப்போதுதான் தாராசங்கர் பானர்ஜி அவர்கள் எழுதிய “கவி” படித்து முடித்தேன். நீங்கள் எழுதிய “உமா காளி” என்ற கட்டுரை மூலமாகவே இந்நாவலை பற்றி அறிந்துகொண்டேன். தமிழ் விக்கியில் கிடைத்த கொழுவியை கொண்டே Pdf-யை பதிவிறக்கம் செய்தேன். நன்றி.
தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த நிதாயிக்கு கவியாக வேண்டும் என்று விருப்பம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மணமான ஒரு பெண்மணியின் மீது காதல் கொள்கிறான். அவளும் காதல் கொள்கிறாள். அந்த காதலே அவனுக்குள் சொற்களை ஊற்றெடுக்கச் செய்கிறது. அந்த காதலே அவனை பெருங் கவிஞனாகவும் மாற்றுகிறது.
நாவல் இந்த கட்டம் வரை மிகவும் சிறப்பாக இருந்தது. காதல் எனும் பெரும் பித்தை வாசகர்களுக்கு மிக அழகாக கடத்தியிருந்தார் ஆசிரியர்.
ஆனால் அதன் பிறகு கதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு ஜீமுர் கோஷ்டியுடன் நிதாயி சென்றவுடன் இந்நாவல் தனது பழைய மிடுக்கை, உயிர்ப்பை, பித்தை இழந்துவிடுகிறது. அருமையான படைப்பாக வந்திருக்க வேண்டிய இந்நாவல், நல்ல படைப்பு என்று செல்லத்தக்க அளவிலேயே தேங்கிவிடுகிறது.
த.நா.குமாரசாமி அவர்களின் மொழியாக்கம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அவருடைய ஆழ்ந்த மொழிப்புலமை இதில் நன்கு வெளிப்பட்டுள்ளது. புலவி, திருணம், கேள்வன், எவ்வம், சுரும்பு போன்ற அரிய சொற்களை இந்நூலில் நான் கண்டடைந்தேன். ஏறக்குறைய அழிந்து போன சொற்கள் இவை. வெண்முரசில் கூட இச்சொற்களை நான் கண்டதில்லை.
– மணிமாறன்