ரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்- சுசித்ரா

அன்புள்ள ஜெ,

ரோம் பயணம் முடிந்தது. மீண்டுக்கொண்டிருக்கிறேன். மிக அரிய கண்டடைதல்கள் சிலவற்றை இந்தப் பயணம் வழியாக அடைந்தேன் என்று சொல்லத் துணிவேன். அதை என்னவென்று ஒரு கடிதத்தில்  சொல்லமுடியுமா தெரியவில்லை. தீவிரம் பற்றிக்கொண்டு  எழுதிக்கொண்டிருக்கிறேன். விரிவாகவே பதிவுகள் வருகின்றன. காலம், வரலாறு, கலை, தெய்வீகம்… எழுத எழுத அந்த ஏழு நாள் கனவிலிருந்து நானே விரவி விரவி எழுந்து வளர்வது போன்ற உணர்வை அடைகிறேன்.

*

இந்தப் பயணத்தில் என்னை மிகவும் சலனத்துக்குறுவாக்கிய ஒரு விவாதம் நடந்தது. பழைய கிரேக்க பாணி ரொமானிய பளிங்கு சிற்பங்களையும் அதன் தாக்கத்தின் உருவான ராஃபேல்  மைக்கலாஞ்செலோ உள்ளிட்டோரின் கலை பெருக்குகளையும் நேரில் தரிசிப்பதென்பது என் நெடுநாள் கனவுகளில் ஒன்று. பல இடங்களில் நின்று காலம் இடம் மறந்து கண்ணீர் மல்கினேன். அந்த உணர்வெழுச்சியின் தாக்கத்தை எனக்குள் ஆறாத் தீவிரத்துடன் சுமந்துகொண்டிருந்த வேளையில் ஒரு பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது.

அமெரிக்காவில் என் அறிவியல் நாட்களில் அறிமுகமானவன். அவனும் இந்தியன். இப்போது ரோமின் புறநகரில் ஓர் ஆய்வகத்தில் பணியில் இருக்கிறான். அவனுக்கு சிந்தனையில் ஆர்வம் உண்டு. பௌத்தத்தின் சில பகுதிகளை முறையாக படித்திருக்கிறான். நாங்கள் முன்பு விவாதித்திருக்கிறோம். அவன் சிந்தனைப்பாணியில் எப்போதுமே ஒரு இறுக்கத்தை நான் உணர்ந்ததுண்டு. அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. புரியவில்லை என்பதனாலேயே நான் அதில் சென்று உற்சாகமாக மோதியிருக்கிறேன்.

பிறகு தொடர்பு விட்டுப்போனது. அதன் பின்னரே நான் தீவிரமாக வாசிக்க எழுதத் தொடங்கினேன். சென்ற வாரம் சந்தித்தபோது அன்றைய மனநிலையின் உச்சத்தில் நான் என் பரவசங்களை எல்லாம் சொல்லத் தொடங்கினேன். அல்லது என்னை மீறி அவை வெளிப்பட்டன.

ஆனால் நான் பேசப்பேச அவனுக்கு நான் சொல்வதில் ஏதோ கடுமையாக உவக்கவில்லை என்பதை கவனித்தேன். ஒற்றை வார்த்தைகளில் பதில் சொன்னான் கண்களை திருப்பிக்கொண்டே இருந்தான். என் உற்சாகம் வற்றியது. ஏதும் தவறாக சொல்கிறோமா என்று புரியவில்லை.

பேச்சை சமூகமாக்க “நீ இங்கே தானே இருக்கிறாய்? கலைக்கூடத்துக்கு நிறைய வருவதுண்டா?” என்று கேட்டேன்.

அவன் “நான் ரோம் நகரத்துக்குள்ளேயே வருவதில்லை. எனக்கு இந்த நகரமே பிடிப்பதில்லை,” என்றான்.

“ஏன்?” என்றேன்.

அவன் சொன்னான். “இந்த நகரம் என்னை மிகவும் அசௌகரியப்படுத்துகிறது. கிரேக்க ரோமானிய கலாச்சாரமும் அதை அடுத்து உருவான கலை அறிவியல் வளர்ச்சிப்பாடுகளும் சாராம்சத்தில் மனிதனுக்கு என்ன நன்மையை செய்ததென்று எனக்கு விளங்கவில்லை. மனிதனை வலிமையானவன் என்று அது கட்டமைக்கிறது. சரி. ஆனால் தன் பலத்தை உணரத் தொடங்கியதும் மனிதன் அதிகாரத்துக்கு ஆசைப்படத் தொடங்குகிறான்.  அராஜகங்களை செய்கிறான். அது மிக அசிங்கமான ஒரு நிலை, உண்மையில் அது மனிதனுக்கு ஒரு வீழ்ச்சி தான். இங்கே சுற்றி விரவிக் கிடக்கும் இந்த மாபெரும் இடிபாடுகளைப் பார். நீ சிலாகிக்கும் மைக்கெலாஞ்செலோ கட்டி வைத்திருக்கும் ராட்சச உருவங்களைப் பார். ஆபாசமாக இல்லை?

“மனிதனின் அதீதங்களை அராஜகங்களை அடிமை போல் போற்றும் இந்த பண்பாடை விட கிறித்துவமே மனிதனுக்கு மேலும் பல மடங்கு உதவியிருக்கிறது. ஏன், உன் கிரேக்க ரோமானிய புத்துயிர்ப்புக்கால பேராசான்களை விட உண்மையான புதிய புரட்சி கருத்தை மனிதனுக்கு கொடுத்தவர் யார் என்றால் கிறிஸ்து என்று தான் சொல்வேன். தன்னை சித்திரவதை செய்ய வருபவனை,  கொல்ல வரும் ஒருவனைப் பார்க்கிறான். ‘தந்தையே அவனை மன்னியும், அவன் செய்வதறியாது பாவம் செய்கிறான்’ என்று அவன் மீட்புக்காக மன்றாடுகிறான். அதுவல்லவா வலிமை? அதுவல்லவா புரட்சி? மாறாக கிரேக்க ரொமானிய கலாச்சாரம் மனிதனுக்கு அப்படி என்ன புதுமை செய்தது? அவனை அராஜதத்துக்கும் அழிவுக்கும் தானே கொண்டு போனது? உடனே கலை என்பாய். கலை மனிதனின் உணர்ச்சிகளால் உருவாகி உணர்ச்சிகளை தூண்ட மட்டுமே உதவுகிறது. அதனால் ஆன்மீகமாக அவனுக்கு ஏதாவது பயன் உண்டா?” என்றான்.

அவன் பேசப்பேச எனக்குள் இனம் புரியாத வெறி மூள்வதை உணர்ந்தேன். மூச்சு வாங்கியது. நாங்கள் வெண்ணிற மேஜை விரிப்புகள் கொண்ட சிறிய மெழுகுவர்திகள் ஏற்றப்பட்ட உயர்குடி இத்தாலிய உணவகத்தில் இருந்தோம். ஃபோர் கோர்ஸ் மீலில் இரண்டு கோர்ஸ் முடிந்திருந்தது. மஞ்சள் வெளிச்சத்தில் மேஜைக்கரண்டிகளின் மெல்லிய கிண்கிணி ஒலிகளுக்கு மத்தியில் நேர்த்தியாக உடையணிந்த ஐரோப்பியர்கள் சின்னஞ்சிறு மிடர்களில் வைன் பருகியபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சுக்குரல்கள் ஏரிக்கரையில் அவ்வப்போது வந்து உடையும் சிறிய அலைகளைப் போல இதமாக ஒலித்தன. எனக்கோ கத்த வேண்டும் போல இருந்தது.

என்னை மிகுந்த பிரயத்தனத்தோடு சமநிலைபடுத்திக்கொண்டு பதில் சொன்னேன். “நீ சொல்வதை என் தலைவன் டால்ஸ்டாய் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான். அதெல்லாம் பழைய விவாதம்,” என்றேன். அது வெறும் தட்டிக்கழிக்கும் கூற்று பதில் அல்ல என்று சொல்லும் போதே உணர்ந்தேன். அவன் தலைக்குனிந்து சாலட்டை குத்திக் குத்தி வாயில் அடக்கிக்கொண்டிருந்தான். சொற்கள் எனக்குள் பீரிக்கொண்டு வந்தன. அவன் உபயோகித்த மொழி என்னை மிகவும் சீண்டியிருந்தது.

“என்ன சொன்னாய், கிரேக்க ரோமானிய பண்பாடு மனிதனுக்கு என்ன கொடுத்தது என்றா. நீ அறிவியல்வாதி தானே. அறிவியலின் முறைகள் எங்கிருந்து வந்தது? கிரேக்க கலாச்சாரம் தானே மனிதனுக்கு அறிவுவாதத்தை – ரேஷனலிசத்தை – புகுட்டியது? சாக்ரெட்டிக் டையலாக் என்பதே ஒரு விஷயத்தை பகுத்து ஆராயும் முறை தானே? அப்புறம் ஜனநாயகம்? அது பண்டைய கிரேக்கர்களின் கொடை இல்லையா? ஒரு விஷயத்துக்கு ஓர் ஐடியல் வடிவமுண்டு என்ற பிரக்ஞையை யார் அளித்தது? ஒரு பொருளை தூய அழகனுபவமாக்கி அதை அறியலாம் என்பது மனிதனுக்கு எவ்வளவு பெரிய வரம்? ப்ளாட்டோ தானே அதைச் சொன்னார்? இந்த பிரபஞ்சத்தை கால-வெளியில் அருவமாக உருவகிக்கக் கற்றுக்கொடுத்த கணித மேதைகள் – பித்தகோரஸ், யூக்ளிட், சீனோ – எல்லாம் எந்த பண்பாட்டில் வந்தவர்கள்? எப்படி ஒட்டுமொத்தமாக மனிதனுக்கு என்ன கொடுத்தது என்று உன்னால் கேட்க முடிகிறது?” – இப்படிப் பொறிய வேண்டும் என்று தோன்றியது. சூழல் கருதி கொஞ்சம் நாகரீகப்பூச்சோடு சொன்னேன். ஆனால் சொல்லச்சொல்ல எனக்குள் கோபம் மேலும் மூண்டது. “டெமாகிரசியும் தியரி ஆஃப் ஃபார்ம்ஸும் உன் தகப்பனா கண்டு புடுச்சான்?” என்று தான் எனக்கிருந்த கோபத்துக்கு நான் நியாயமாக கேட்டிருக்க வேண்டும்.

அவன் என் கண்களை சந்திக்கவில்லை. நிதானமாக, “நீ சொல்லும் விஷயங்கள் எதுவும் எந்த ஒரு பண்பாட்டின் சொத்து இல்லை. மனிதன் வெவ்வேறு பண்பாடுகள்ல தனித்தனியா இந்த விஷயங்களை எல்லாம் கண்டடஞ்சிருக்கான். மெசப்பொடேமியாவுல, பண்டைய இந்தியாவுல எல்லாம் ப்ரோட்டோ-டெமாகிரசியோட வடிவங்கள் இருந்திருக்கு. தர்க்கம், ரேஷனல் தாட், எல்லாமும் மற்ற பண்பாடுகள்ல இருந்ததே. பௌத்தர்களோட நியாயவாதம் மிக நுட்பமானது இல்லையா? அதான் நான் சொல்றேன். இதெல்லாம் மனுஷனோட சக்தி. மேதமை. சூழல் சரியா இருந்தா  உபரி வளம் இருந்தா எந்த பண்பாட்டிலும் அந்த மேதமை வெளிப்படும். ஆனால் அதைக் கட்டுப்படுத்த மனுஷன்ட்ட ஒண்ணுமில்ல. அதனாலே அப்படியே மேலப்போய் அதையே பலமாக்கி அராஜகங்கள பண்ணி தன்னையே அழிச்சுக்குவான். ஆனால் கிறிஸ்து சொன்னது மாதிரி ஒரு இன்சைட் உலகத்துல வேற எங்கேயும் உருவாகல இல்ல? அது மாதிரி ஒண்ணு தானே மனுஷன தன்னோட அராஜகத்துலேருந்து காக்குற வல்லமையோட இருக்கு? அது வெறும் மேதமை இல்ல. ஒப்புநோக்க இந்த கிரேக்கோ ரோமானிய கலாச்சாரத்துலயோ வேற எந்த கலை அறிவு சித்தாந்தத்திலேயோ எனக்கு பெரிய அப்பீல் தெரியல. அததான் சொல்றேன்,” என்றான்.

நான் பேசாமல் ஆனேன். அவன் சொன்ன விஷயங்கள் எனக்குள் ஒரு புயலைக் கிளப்பத் தொடங்கியிருந்தது.

“அராஜகம் என்றால் அதில் கிறித்துவ திருச்சபை தானே முதலிடம் வகிக்கிறது?” என்றேன். “இங்கே ரோமில் மட்டும் என்னென்ன அராஜகங்கள் நடந்துள்ளது என்று பட்டியலிட்டாலே போதுமே? கிறிஸ்துவின் ஞானம் கிறித்துவ மத அமைப்புக்கே உதவவில்லை என்பது துரதிருஷடவசமானது.” என்னிடம் வேறு ஆயுதங்கள் இல்லை ஆகவே என் குரலில் ஏளனம் நுழைந்தது. ஆனால் அவன் அதற்கும் நிதானமாக பதில் சொன்னான்.

“உண்மை தான் அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கும் மருந்து கிறிஸ்து மாதிரி தூய்மையான ஓர் ஆன்மீக நிலை தான். அதை அவர்களே தீண்டவில்லை என்பது ஓர் அவலம். ஆனால் அதனால் அந்த உயர் விழுமியத்துக்கு எந்த கேடும் உருவாகவில்லை. மாறாக அதன் விழுமியங்கள் அங்கே தான் உள்ளன. நாம் அவற்றை தியானிக்கிறோமா கடைப்பிடிக்கிறோமா நம் வாழ்வை அதன் படி அமைத்துக்கொள்கிறோமா என்பதில் தான் நாம் நிற்கிறோம்,” என்றான்.

நண்பன் கிறித்துவன் அல்ல, இந்து. ஆகவே அவன் சொன்னவை மதப்பற்றின் விளைவு என்று நான் நினைக்கவில்லை. மேலும் இத்தனை ஆண்டுகளில் அவன் அனுபவங்கள் என்ன சிந்தனை எப்படி மாறியிருக்கிறது என்று எதுவும் தெரியாது. இருந்தாலும் நான் இருந்த மனநிலையில் அவன் பேசியவை என்னை மிகவும் பாதித்தது.

அன்று மாலை மீண்டும் அந்த விஷயத்தை பேசவில்லை. எனக்கு மேலும் அந்த பேச்சை வளர்க்க விருப்பமில்லை. ஆனால் அவன் கேள்வி எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் காலை கீட்ஸ் மற்றும் ஷெல்லியின் கல்லறைகளைச் சென்று பார்த்தேன். அது எனக்கு கிட்டத்தட்ட ஒரு புனிதயாத்திரை. உண்மையில் என் ரோம்பயணமே அந்த ரொமாண்டிக் காலக் கவிஞர்களின் காலடிக்ளை பின் தொடரும் ஒரு முயற்சி என்று கூட சொல்லலாம். வரலாறையும் கலையின் அழகுச்சங்களையும் கண்டடைய மேற்கொண்டது. ஆனால் என் நண்பனின் கேள்வி மொத்தமாக எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுவிட்டது.

*

நண்பன் சொன்னதில் ஒரு மிடர் உண்மை இருந்ததா? ஒரு வகையில் இந்தக் கேள்வியை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். தூய அறிவியல்வாதத்தோடும் டெக்னாலஜி போக்கோடும் எனக்கு இருந்த பிணக்கின் புள்ளி இது தான். ஆனால் கலை? கலையை அப்படி ஒதுக்கிவிட முடியுமா? அவதானம் வழியாக தூய உள்ளுணர்வு வழியாக பெறப்படும் அறிவு எதுவாக இருந்தாலும் அது தன்னளவிலேயே ஓர் ஆன்மீகத்தை கொண்டதல்லவா?

எனக்கு பின் தொடரும் நிழலின் குரல் நினைவுக்கு வந்தது. அந்த நாவலை படித்த நாட்களில் இவன் கிறிஸ்துவின் இடத்தைப் பற்றிச் சொன்ன தர்க்கங்களை தர்க்கமாக அல்லாமல் உணர்வுகளாக அடைந்திருக்கிறேன். அந்த நாவலில் கிறிஸ்து வெளிப்படும் உணர்ச்சிகரமான இடங்களை நினைத்துக்கொண்டேன். ஆம், இது சரி, இது சரி என்று எந்த தர்க்கத்தை விடவும் வலுவான ஒரு குரலாக எனக்குள் ஆமோதிப்பை கண்டுகொண்ட பொழுதுகள் அவை. அதைப்போல் எத்தனை கிறிஸ்துக்கள். தஸ்தாயேவ்ஸ்கியின் கிறிஸ்து, தல்ஸ்தாயின் கிறிஸ்து, செல்மா லாகர்லொஃபின் ஜார்ஜ் எலியட்டின் கிறிஸ்து. மிகச்சிறிய வயதில் என்னுடைய அம்மா அவர் சொன்ன படுக்கைய்றைக் கதைகள் வழியாக எனக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினார். அம்மாவுக்கு விவிலியத்தின் சிலப்பகுதிகள் மனப்பாடமாகத் தெரியும். அந்த பழைய வார்த்தைகள் என் இளம் மனதில் அவர் தொடுகையின் ஸ்பரிசத்தோடு இணைந்து வரைந்த கனவாக ஒரு கிறிஸ்து எனக்குள் இருக்கிறான். குழந்தையாக இளைஞனாக தேவனாக.

ஆனால் அந்த பிம்பங்கள் ஒவ்வொன்றும் கதைகள் கலைகள் வழியாகத்தானே என்னை வந்து அடைந்தன? மானுடக் கற்பனையின் மேதமை என்று ஒன்று இல்லையென்றால் கிறிஸ்து இவ்வளவு பெரிய உருவாக எனக்குள் வளர்ந்திருப்பானா? நம் அகத்தின் ஆடியில் அல்லவா அவனை கண்டுகொள்கிறோம்?

அவனை இந்த ரோம் நகரில் எங்கே கண்டேன்? மைக்கெலாஞ்சலோவின் ‘தி லாஸ்ட் ஜட்ஜ்மெண்ட்’ ஓவியத்தின் மைய்யத்தில் வலிய அரசனாக. அந்த ஓவியத்தின் பிரபஞ்ச சுழலுக்கு அடியில் சிலுவையில் அறையப்பட்ட மெல்லிய இளைஞனாக. பியெட்டாவில் மரியன்னையின் கரங்களில் சிசுவைப்போல் ஏந்தப்பட்ட நெடிய நொருங்கக்கூடிய மனித உடலாக.

அவனை விட மேரியை மேலும் அணுக்கமாகக் கண்டேன். ரோமில் அவள் தான் எங்கும் வீற்றிருக்கும் அரசி – மடோனா, ரெஜினா, விக்டோரியா. ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒவ்வொரு ரூபம் சூடுகிறாள். கிரேக்கர்களின் மினர்வாவைப்போல் அவள் வலிமையின், மேதமையின் தெய்வமாக கருதப்படுகிறாள். எகிப்தியர்களின் ஐசிஸ் போல் அவளே வான் நட்சத்திரங்களை சூடிக்கொண்ட ஆதித்தாயாக விளங்குகிறாள்.

காலம் காலமாக கலைஞர்கள் அவனையும் அவளையும் வடிவங்களிலிருந்து வடிவங்களாக உருமாற்றித் திரட்டிக் கண்டடைந்திருக்கிறார்கள். கலையின் ஆன்மா வழியாகவே தெய்வங்களும் அவை சுட்டும் உயர் விழுமியங்களும் என்னை வந்துத் தீண்டியுள்ளன. கலைஞன் ஞானியரிடமோ, இறையியலாளனிடமோ அல்லது தத்துவவாதியிடமோ தன் தரிசனத்தைப் பெறலாம். ஆனால் என் வரையில் கலைஞனே உயிரை அளித்து பூமியில் ஒரு தெய்வத்தை – அல்லது விழுமியத்தை – படைக்கிறான்.

“தந்தையே அவர்களை மன்னியும்” என்று சொன்னது இயேசுவா அவரை எழுதிய கவிஞனா என்று நாம் பிரித்தறிய முடியுமா என்ன? ஒரு கவிஞனால் அந்த கூற்றின் ஆற்றலை அடைய முடியுமென்றால் அது எவ்வளவு பெரிய நிலை?  ஆம் அது வலிமை தான் ஆனால் வலிமை என்பதாலேயே அது ஆன்மீகமற்றதாக ஆகிவிடுமா? ஆன்மீகம் என்றாலே எளிமையும் சரணாகதியும் சுய ஒடுக்குதலும் சுத்தீகரணமும் மட்டும் தானா? ஆன்மீகத்தின் நிறம் தூய வெள்ளையாக அன்றி இருக்க முடியாதா?

இப்படியே கேள்விகள் எனக்குள் சுழன்றன.

*

ஏன் எனக்குள் இத்தனை போறாட்டம்? நான் வலிமையை வழிபடுகிறேனா? சிந்தித்துப்பார்த்தேன். கிரேக்க ரொமானிய பாணி சிற்பங்களில் உள்ள நாட்டம் என்பது என்ன? மிகத்துல்லியமான மனித வடிவத்தை மிக வலிமையான உச்சக்கணங்களில் தசைகள் முறுக்கி வெளிப்படும் வடிவமாகவே அந்த காலத்து மாஸ்டர்கள் வனைந்திருக்கிறார்கள். அந்த ஒருமையும் தீவிரமுமே அழகாக வெளிப்படுகிறது.

ஆம் வலிமையான அனைத்துமே அழகானவை. ஆபத்தாக அராஜகமாக இருக்கும்போதும் அழகானவை. நாகப்பாம்பின் படம் அழகானது. பாயும் புலியின் இறுகிய தசைகள் அழகானவை. இரவின் அத்தனை மர்மங்களும் அழகானவை. அதைத்தான் சப்ளைம் என்கிறோம் அல்லவா? அதன் ஆபத்தை மீறியும் அதன் அழகில் என் மனம் லயிக்கும் கணம் நான் தூய ஒன்றை காண்கிறேன். அங்கில்லாமல் ஆகிறேன், உயர்த்தப்படுகிறேன். இயற்கையின் முன்னாலும் பெருங்கலைகள் அளிக்கும் தூய அனுபவம் முன்னாலும் என் உள்ளம் ஸ்தம்பிப்பதை எப்போதும் ஓர் உயர்ந்த நிலை என்றே அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

அது ஓர் ஆன்மீகமான நிலை தான் என்றால் அந்த ஆன்மீகத்துக்கும் கிறிஸ்துவின் ஆன்மீகத்திற்கும் என்ன வேறுபாடு?

*

வலிமையில் ஆன்மீகம், அராஜகம் இரண்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.

என் நண்பன் சொன்னது போல் வலிமையும் அராஜகமும் பல சமயம் ஒன்றிப்போகத்தான் செய்கின்றன. ரோமானிய இடிபாடுகளை சொன்னான். அவற்றை பூதங்கள் கட்டியது என்று மத்தியக்கால ஐரோப்பியர்கள் எண்ணியதாக ஒரு கூற்று உண்டு. எனக்கு புனித பீட்டர் தேவாலயத்தைக் கண்டபோதும் அதே உணர்வு தான் ஏற்பட்டது. இது ராட்சசர்கள் கட்டிய கூடம் என்று. அதன் பூதாகர நிர்மாணத்தில் என் தேவனை என்னால் காண முடியவில்லை. அது ரோம் நகரின் இயல்பு. ரோமின் அமைப்பில், அதன் கலை வெளிப்பாடுகளில், அந்த ராட்சசத்தனம் கண்டிப்பாக உள்ளது.

அந்த இணைப்பை உணர்ந்தபோதெல்லாம் நானும் அசௌகரியம் அடைந்திருக்கிறேன். மானுட மனத்தில் அதிநிலை வெளிபட்ட மனங்கள் பலதும் ஃபாசிசத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளது என்ற அசௌகரியமான வரலாற்றுப் பாடம் கண் முன்னால் உள்ளது. ஆகவே தான் நண்பனின் தடித்தனமான “ஆட்டிடியூட்” என்று நான் உணர்ந்ததை மீறி அவன் சொன்ன புள்ளியோடு இவ்வளவு தீவிரமாக மல்லுக்கட்டுகிறேன்.

உண்மையைச் சொன்னால் ரோமின் அந்த ராட்சசத்தனம் எனக்குள் இரண்டு எதிரெதிரான உணர்வுகளை மாறி மாறித் தீண்டியது. ஒரு பக்கம் அந்த அப்பட்டத்தன்மை, அராஜகமான அளவிலான மிகை வெளிப்பாடு, என்னை அருவருக்கவே செய்தது. எத்தனை நிர்மாணங்கள் எத்தனை கட்டடங்கள் எத்தனை இடிபாடுகள். பிளந்து ரத்தம் வழிகிற காயத்தோடு மல்லாந்து விழுந்து கிடக்கும் பூதாகர உடல் போல அந்நகர் தோன்றியது.

ஆனால் மறுப்பக்கம் அதன் அளவும் எடையும் வயதும் “இதோ நான்” என்ற கம்பீரமும் என்னை ஸ்தம்பித்து நிலையிழக்கச் செய்தது. எத்தனை பார்த்துவிட்டது. எவ்வளவு பெரிய சாட்சி. மகத் என்ற வார்த்தை எனக்குள் விழுந்துகொண்டே இருந்தது. Magnificent. எத்தனை மகத்தானது. எத்தனை மகத்தானது.

விவிலிய மரபில் நகரங்களை பரத்தையர் என்று கூறும் வழக்கமிருந்ததாக பின்பு வாசித்தேன்.

*

இதுவரை சொன்னதை தொகுத்து சொல்வதென்றால் –

கிரேக்க-ரொமானிய மரபையும் அதன் வரலாற்றையும் கலைச்செல்வங்களையும் அறியும் பிரதானமான நோக்குடன் நான் ரோம் போனேன். அதன் வழியாக மனிதனை, ‘மானுடம்’ என்று நான் கூட்டாக சொல்லும் ஒன்றை புரிந்துகொள்ள எண்ணினேன். “We are all pilgrims in search of Rome” என்று கதே சொன்ன ஒரு வாக்கு உண்டு. அவர் “We” என்று கலைஞர்களை சொல்கிறார். பழங்கால தீர்த்தயாத்திரீகர்கள் புனிதர்களின் relic-களை தரிசிக்கச் செல்வது போல் ஒரு கலை மாணவியாக நான் ரோமின் ஆன்மாவை அதன் கலை வெளிப்பாடுகள் வழியாக தரிசிக்கச் சென்றேன். அந்த நகரின் பழமையை அனுபவ ஆழத்தை தொட்டுணர முற்பட்டேன்.

அங்கே நண்பன் கேட்ட கேள்வி என்னை நிலையிழக்கச் செய்தது. அவன் கேள்வி கலையின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கியது. அவன் மானுடத்துக்கு எந்த கலை அறிவியல் அரசியல் தரிசனத்தை விட கிறிஸ்துவின் தரிசனமே முக்கியமானது என்றான். கலை உட்பட மானுடத்தில் மற்ற மேதமைகள் அராஜகங்களையே உருவாக்கும் என்றும் கிறிஸ்துவின் தரிசனமே (அல்லது அதற்கு நிகரான ஓர் ‘ஆன்மீகமே’) இறுதிச்சொல்லாக மீட்புக்கு வழிவகுக்கும் என்றான்.

இதில் ‘ஆன்மீகம்’ என்ற விஷயமே என்னை தொந்தரவு செய்கிறது. எனக்குத் தெரிந்த ஆன்மீகம் கலை வழியாக அழகு வழியாக வெளிப்படும் ஒன்று. கிறிஸ்துவின் தரிசனத்தையே கூட நான் கலை வெளிப்பாடுகள் வழியாகவே அடைந்தேன்.

அப்படி இருக்க ஆன்மீகமாகச் செல்ல அப்படி இரண்டு பாதைகள் இருப்பதாக சொல்லப்படுவது – அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தா பயணங்கள் என்று உணர்த்தப்படுவது – என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவற்றை ஒருங்கிணைந்து புரிந்துகொள்ள வழி உள்ளதா என்ற கேள்வி நோக்கி நகர்த்துகிறது.

(மேலும்)

சுசித்ரா ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைஇரண்டாயிரம் குதிரைகள் கொண்ட தேர்!
அடுத்த கட்டுரைமரபிசையும் கிறிஸ்தவமும், கிருஷ்ணன் சங்கரன்