தமிழ்விக்கி, இறுதிச்சொல்

தமிழ் விக்கி இணையம்

தமிழ் விக்கியுடன் தொடர்புள்ள நண்பர்களுக்கு இன்று இச்செய்தியை அனுப்பினேன்.

தமிழ் விக்கி தொடங்கப்பட்டு பத்துநாள் ஆகிறது. அவ்வளவுதான், அதைப்பற்றிய எல்லா விவாதங்களையும் முடித்துக்கொள்வோம். இனி பொதுவெளியில் எவருக்கும், எதற்கும் பதில் அளிக்கத் தேவையில்லை. இனி எவர் சொல்லும் எந்த விவாதங்களையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

இங்கே பொதுவெளியில் பேசும் மிகப்பெரும்பாலானவர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. விக்கி என்னும் சுதந்திரக் கருத்துப்பரவல் அமைப்பு பற்றியே தெரியாதவர்களின் கருத்துக்கு என்ன மதிப்பு?

பலர் பேசுவது வெவ்வேறு சொற்களில் ‘நானும் உள்ளேன்’ என்னும் ஒற்றை வரியைத்தான். அப்படி பேசுபவர்களில் ஏதேனும் துறையில் நூல் வடிவில் எழுதி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றவர்களை மட்டுமே கருத்தில் கொள்வோம்.

இனி நம் வேலை இதை முழுமை செய்வது மட்டுமே. இதைச் செய்வதில் நமக்கு பெரும் களிப்பு இருக்கிறது. சாதனையுணர்வு. கூட்டாகச் செயல்படுவதன் இன்பம். அறிதலின் கொண்டாட்டம்.

தமிழ் விக்கி சார்ந்த இணையக்கூச்சல்களை நம்மில் பெரும்பாலானவர்கள் படிப்பதில்லை. படிப்பவர் சிலருண்டு, அவர்களுக்கே இது. இன்றுடன், இக்கணத்துடன் தமிழ் விக்கி சார்ந்து எவர் எழுதும் எதையும் படிக்கவேண்டாம். எவரேனும் எந்த வம்பையேனும் நம் குழுமங்களில் பகிர்வார் எனில் பகிர்பவரை சிறிதுகாலம் விலக்கி வைப்போம்.

நூறாண்டுகளுக்கு முன் உ.வே.சாமிநாதையருக்கு எதிராக காழ்ப்புகளும் அவதூறுகளும் பெருகியபோது அவருடைய ஆசிரியர் அளித்த அறிவுரை இது என தன் வரலாற்றில் எழுதுகிறார். சாமிநாதையர் ஒரு சொல் கூட எதிர்வினை ஆற்றியதில்லை. அவர் எழுதியதெல்லாம் பிழை என்றும், அவர் பெரும் பணம் ஈட்டினார் என்றும் எழுதிக் குவிக்கப்பட்டது. அவருடைய செயலே நிலைகொள்கிறது. பேசியவர்களின் பெயர்கள் வரலாற்றில் இல்லை.

செயல் என்பது நேர்நிலையானதாகவே இருக்கவேண்டும். அப்போதே அதில் நம்மை ஆட்கொள்ளும் திளைப்பு உருவாக முடியும். நம்மை விடச் சிறியோரை நோக்கி நாம் எதிர்வினை ஆற்றலாகாது. நாம் பேசிக்கொண்டிருப்பது வருங்காலத்துடன்.

ஆகவே செயல்புரிக!

முந்தைய கட்டுரைசியமந்தகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர்