வெள்ளையானை [நான்காம் பதிப்பு] வாங்க
நாம் இதுவரை அறிந்திராத ஒரு வரலாறு அல்ல. நாம் அறிந்திடக்கூடாது என்று திட்டவட்டமாக சில பிரிவுகளால் மறைத்து வைக்கப்பட்ட வரலாற்றை மிக துல்லியமாக சரித்திர சான்றுகளுடன் ஒரு புனைவின் வழியே நம் கண்முன் படைத்திருக்கிறார் ஜெயமோகன்.
1800களில் இந்தியாவில் உலகின் பெரும் பஞ்சம் நிலவியது, இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு செத்துமடிந்தனர். அந்த கால கட்டத்தில் தலைவிரித்து அடிய மற்றுமொரு கொடூரம் தீண்டாமை. ஆங்கிலேயர்கள் இந்த தீண்டாமை பிரிவினை வாதத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டனர். உயர் சாதி மக்களை கண்காணிப்பாளர்கள் போன்ற உயர் பதவியிலும், கீழ் சாதி மக்களை கூலியாகவும், அடிமைகளாகவும் பயன் படுத்தினர்.மெட்ராஸ் மாகானத்தை வெள்ளை நகரம், கருப்பர் நகரம் என்று பிரித்து வைத்தனர். எனினும் ஆங்கிலேயர்களுள் சில நல்லுள்ளம் படைத்தவர்களால் பல இடங்களில் எளிய மக்களின் உரிமை குரல்களும் ஆங்காங்கே ஒலித்தது என்பதே இக்கதை. அதனை ஒரு ஆங்கிலேய போலீஸ் அதிகாரியான எய்டன் பார்வையில் கூறப்படுவதே இக்கதை.
நமக்கு வரலாறு சொன்னது இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தம் சென்னை பின்னி மில் சம்பவம் 1921. ஆனால், இக்கதை படி முதல் வேலை நிறுத்தம் 1878 மெட்ராஸ் ஐஸ் ஹவுஸ் வேலை நிறுத்தம் – இரு கூலி தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டதை எதிர்த்து. இந்த வேலை நிறுத்தம் ஏன் நடந்தது? தலைப்பிற்கும் ஐஸ் ஹவுஸ் நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக கொல்லப்பட்டார்கள்? ஏன் இப்போராட்டம் வரலாற்றில் பதிவாகவில்லை? இதனை எய்டன் எப்படி மேலிடம் கொண்டு சென்றான்? இதில் மேல் சாதி மிருகங்களும், ஆங்கிலேய அரசும் எப்படி சூழ்ச்சி செய்தது? அந்த போராட்டம் எப்படி முடிவுக்கு வந்தது? ஷெல்லியின் கவிதைகள் எப்படி எய்டனின் உறக்கம் தொலைக்கிறது? இந்த கேள்விகளின் பதில்கள் தான் மிக கணமான இக்கதை.
மனதை உருக்கிய வரிகள் :
- எங்கள் மொழி மீது மலநாற்றம் அடிக்கிறது. எங்கள் நீதி மீது நிரபராதிகளின் ரத்தம் வழிகிறது.
- மனம் எந்த வேசியை விடவும் தளுக்கு கொண்டது.
- இங்கே பிறக்கவிருக்கும் ஜனநாயகம் அதன் கருப்பைக்குள் செய்யும் முதல் அசைவு.
- முழுவதுமாக தோற்கடிக்கப்பட்டவனின் அமைதி பரிபூர்ணமானது.
நினைவில் நீங்கா மாந்தர்கள்
- காத்தவராயன்
- ஜோசப்
- மரிசா
- பார்மர்
- எய்டன்
பல கோடி மக்கள் ஒட்டிய உடலுடன், சுருங்கிய மார்புடன், புடைத்த எலும்புடன், கையில் தசை பிண்டங்களாக பிள்ளைகளை சுமந்து, ஒரு பருக்கைக்காக நூறு மைல் கடந்து, மானத்தை விட பசி பெரிது என்ற உண்மையறிந்து,கடவுள் என்ற கடைசி நம்பிக்கையும் இழந்து எலும்பு கூடுகளாக அலைந்தும், பிணக்குவியல்களாக கொட்டி கிடந்தும் இருந்த சாலைகளில்தான் நாம் இன்று கேலிக்கைக்காக நம் பயணத்தில் நின்று இளைப்பாருகிறோம் என்று நினைத்தால் நெஞ்சம் உலை போல் கொதிக்கிறது, பசியின் உருவம் தெரிகிறது, பச்சை ரத்தத்தின் வாசம் வீசுகிறது, தொர, தொர என்ற கூக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
– இர. மௌலிதரன்.