வாசகன் அடிமையா?
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எழுத்தாளர்களை சந்திப்பதில் எனக்கு எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கிறது. எனக்கு இருப்பது நீங்கள் கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல முட்டாக்கு போட்டுக் கொண்ட ஆணவமல்ல. தாழ்வு மனப்பான்மையும் அல்ல. படைப்பாளிகள் ஒரு வித படைப்பு மனநிலையில் இருப்பார்கள். நமது இருப்பு அந்த மனநிலையை சீர்குலைத்து விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வு என தோன்றுகிறது. எரிச்சலூட்டி விடுவோமோ என்ற பதற்றம் எப்போதும் எனக்கு உண்டு. திருவண்ணாமலையில் தங்களை சந்தித்தபோது எல்லோருடனும் சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தீர்கள். உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது. உங்களிடம் சார் நான் உங்கள் தீவிர வாசகன் என்று மட்டுமே சொல்ல முடிந்தது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் பிரபஞ்சனை அருகிலேயே பார்த்தேன். இருப்பினும் சென்று பேச முடியவில்லை. இத்தனைக்கும் அவரது வானம் வசப்படும் நூலை அப்போது வாசித்துக் கொண்டிருந்தேன். திருவண்ணாமலையில் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகிறேன். பவாவை அதற்கு முன்பே தெரியும். பல முறை அருகிலேயே பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சந்தித்து பேசினேன். அவரிடம் இந்த தயக்கத்தைப் பற்றி சொன்னேன். சிரித்துக் கொண்டே தோளில் தட்டி அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்.
அன்புடன்
தண்டபாணி.
அன்புள்ள ஜெ
சந்தித்த்தவர்கள் சந்திக்காதவர்கள் கட்டுரை கண்டேன். ஆளுமைகளைச் சந்திப்பதிலுள்ள முக்கியமான சிக்கலென்பது பெரும்பாலான எழுத்தாளர்கள் அவர்களுக்கு வெளியே ஒரு பிம்பம் இருப்பதாம நம்புவதும் அதை தக்கவைக்க நடிப்பதும்தான். புகழ்பெற்ற ஒரு சினிமாக்கவிஞர் பற்றி ஒரு பேச்சு உண்டு. அவருடைய கட்டவுட்டை மட்டும்தான் அவர் வெளியே கொண்டுவருகிறார். இன்னொரு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குநரின் நெற்றியையும் மூக்கையும் மணிக்கட்டுக்கு பிறகுள்ள கைகளையும் மட்டும்தான் தமிழகம் பார்த்திருக்கிறது. அவர்கள் வெளியே வந்ததுமே நடிக்க ஆரம்பிக்கிறார்கள். நேரில் பார்ப்பதென்பது மிகவும் சோர்வளிப்பது.
நாம் ஒருவரைச் சட்ந்ஹிக்கும்போது அவர் நம்மை உபசரிக்கவோ நமக்கு அறிவுபுகட்டவோ வேண்டியதில்லை. அவர் இயல்பாக இருந்தாலே போதுமானது. நமக்கு நிறைய அறிதல்கள் கிடைக்கும். நாம் அவரை அறிந்தபிறகுதான் அவரைக் காணச்செல்கிறோம். தமிழின் புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள் வாசகனிடம் நடிப்பவர்கள் என்பதும் கோபதாபங்கள் நிறைந்தவர்கள் என்பதும் நேரில் அறிமுகமானவர்களுக்கு தெரியும். ஆதவன் இப்படி ஓர் விமர்சகரைச் சந்திக்கப்போய் ஏமாந்ததைப் பற்றி எழுதியிருப்பார்.
ரவீந்திரன் மாரிமுத்து