ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒவ்வொரு புத்தகமும் தனக்கான வாசகரை தேர்தெடுத்துக்கொள்ளும் என்பது எவ்வளவு உண்மை என்பதை இந்த புத்தகம்(ஆரோக்கிய நிகேதனம்) என்னிடம் வந்து சேரும்போதுதான் உணர்ந்தேன். இதற்காக இரண்டு வருடங்களுக்குமேல் காத்திருந்தேன், மின்சுட்டி வழியே எந்த இணையக்கடைக்கு சென்றாலும், எப்பொழுதும் இப்புத்தகம் அச்சில் இல்லை என்பதே நான்கண்ட நிலை. ஒருவழியாக புக்-மை-புக் வழியாக என் தவத்திற்கு ஒரு முடிவு வந்தது. ஒரு பொக்கிஷத்தை திறப்பது போலவே திறந்தேன், உண்மையில் பொக்கிஷம்தான். எனக்கு  இந்த அற்புதமான அனுபவத்தை கொடுத்ததற்காக தங்களுக்கு என் பணிவான நன்றி. இதில் வரும் மனிதர்களின் பெயர் மற்றும் வழக்கத்தில் இல்லாத சொற்களால் முதல் வாசிப்பில் சில இடர்களை சந்தித்தது என்னமோ உண்மைதான். ஆனாலும் மீள்வாசிப்பில் இவ்விடர்கள் எளிதில் மறைந்தன (மனிதர்களின் பெயர்களை முன் அட்டையில் எழுதினேன், வழக்கத்தில் இல்லாத சொற்களுக்கு இணை சொல் இட்டேன்). மீள் வாசிக்க வேண்டும் என்றெண்ணி அதை உடனே செய்த புத்தகமும் இதுவே!

ஆரோக்கிய நிகேதனம் வெறும் ஆரோக்கியகூரை மட்டும் சொல்லி செல்லும் நாவல் இல்லை, அதற்குமேல் இது தரும் வாழ்வனுபவம், அவ்வனுபவத்தினுடே சொல்லிச்செல்லும் வாழ்வின் ஆகச்சிறந்த சிந்தனை நோக்கு இதன் சிறப்பம்சமாகும். குறிப்பாக, இன்றய மருத்துவ உலகம் தவறவிடும் முக்கியமான ஒன்றை இன்நாவலில் காட்சியாக தொடர்ந்து வரும். அது, இதில் வரும் அணைத்து நோயும், நோயுற்றவர்கள் அருந்தும் உணவோடும் அவர்களின் குணதின் போக்கோடும் சேர்த்தே பார்க்கப்படும் என்பதே, அதற்கு ஏற்றாற்போல் நோய்க்கான தீர்வும் சொல்லப்படுகிறது, தீர்வு என்பதைவிட எப்பொழுதும் ஒரு ஒழுங்கை கடைப்பிடிக்க கோரும் சொல்தான் அவை, இவை அனைத்தும் உற்றுநோக்கும் நாடியினாலே அமைகின்றது. மேலும், மரணத்தை பெரும் கருணையோடு இணைபதுமட்டுமின்றி அதை அவரவர்களின் ஊழ் அல்லது அவர்களின் தீயகுணத்தோடு சம்பந்தப்படுத்தி நிறுவுகிறது.

ஜீவன்தத் தன்னை சூழ்ந்த தேவபுர மற்றும் நவகிராம மக்களுக்கு காட்டும் பெரும்கருணையே இந்நாவலின் பிம்பம், கருணை இருப்பினும் அவரிடத்தில்  ஒரு பற்றற்ற நோக்கு இருந்துகொண்டே இருக்கிறது, அது செல்வம் ஈட்டும் வேட்கையாகட்டும் (அல்லது) வாழ்வை அறியும் தன்மையாகட்டும்.. அனைத்திலும் இந்த பற்றற்ற நோக்கை காணமுடிகின்றது. மேலும் அவரிடத்தில் மரணத்தை பற்றிய கேள்வியும் அதன் போக்கை பற்றிய தேடலும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.

நாவலின் சித்திரம் இப்படி துவங்கும், ஜீவன்தத்தின் தந்தை அவர் நண்பரான தாகூரிடம் சொல்லுவார், “எவ்வளவு தானம் வழங்குகிறேனோ அவ்வளவு அது பெருகும்” இப்படியே அந்த உரையாடல் செல்லும், முடிவில் ஜகத் பந்த் “லாபங்களுள் சிறந்தது – நோயற்ற வாழ்வே” என்பார். இதை தொடர்ந்து ஆரோக்கிய நிகேதனம் உருவாகும் சித்திரம் ஒன்று உருவாகும், அவ்ளோதான் நாவல் முழுவதும் ஜீவன்தத்தின் மூன்று தலைமுறையின் நாடி ஞான ஓட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

வெளிகதை சற்று சிறியதுதான், ஜீவன்தத் மருத்துவம் படிக்கச் செலுத்தல், அத்தருணத்தில் மஞ்சரியை கவர முயலுதல், காலசுழற்சியால் மருத்துவ படிப்பை தொடரமுடியாமல் வீடு திரும்பி தந்தையின் ஆரோக்கிய நிகேதினதிலே தன்வந்தரி(ஆயுர்வேத) தொழிலை கற்றல், நோயினால் ஏற்படும் உடல் உபாதை மற்றும் அதன் தீவிரம் அனைத்தையும் நாடியின் ஓட்டத்தை கொண்டே கணித்தல். மேலும் குல நாடி ஞானதின் அறிவை கொண்டே நோயாளியின் இறுதி நாட்களையும் சரியாகவே கணித்தல்.

இதற்கிடையே மஞ்சரி, மஞ்சரியின் தாய், பூபி இவர்களின் சூழ்ச்சியால் ஜீவனை தவிர்த்து மஞ்சரி பூபியை மணக்கிறாள். அறிந்தும் அறியாமலும் ஏற்பட்ட இந்த  சூழ்ச்சியின் ஒரு வேகத்தில் ஜீவனின் தந்தை ஆத்தர்பௌவை ஜீவனுக்கு திருமணம் செய்கிறார். அதன் பின் ஜீவன் தன் வளச்சியை மஞ்சரி-பூபி முன் காண்பிக்க நினைத்தாலும் அவர்களை தன் இறுதிக்காலம் வரையிலும் சந்திகேவே இல்லை. தந்தை இறப்பிற்குப்பின் தன் ஆற்றாமையினால் ரங்காலால் டாக்டரிடம் சேர்ந்து மீண்டும் மருத்துவம் கற்க நினைத்தல், ஆனால் அதுவும் ஒருகட்டத்தில் ஒவ்வாமை தரவே, மீண்டும் குல தொழிலுக்கே திரும்புகிறார்.

ஜீவன்தத் தந்தையின் நாடி வைத்தியமுறையை நன்கு கற்று தேறி ஊர் மக்களுக்கு பெரும்பாலும் இலவசமாகவே வைத்தியம் செய்கிறார். இதன் இடையே ஜீவனின் நாடிகணிப்பு முறையில் டாக்டரான பிரத்யோத் மற்றும் பிற மருத்துவர்களுக்கும் ஒருவகையான ஒவ்வாமை ஏற்படுகிறது. இருப்பினும் ஜீவன் எவ்வித வேற்றுமை இல்லாது அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்துகொண்டே தனது சிகிச்சையை எல்லோருக்கும் செய்கிறார். ஒருகட்டத்தில் ஜீவனின் முறையை ஏற்காத  பிரத்யோத் டாக்டரின் மனைவிக்கே ஜீவன் உதவும் சூழல் ஏற்படுகிறது, அதையும் எந்தவித பற்றும், வெறுப்பு, சஞ்சலமும் இல்லாமல் ஜீவன் குணமாகிறார். அப்போது பிரத்யோத் மனைவியின் தாய் மூலம் மஞ்சரியை ஜீவன் மீண்டும் வாழ்வின் இறுதி தருணங்களில் சந்திக்கிறார், இருவருக்குமே காலசுழற்சி அவர்களின் இளமை சந்திப்பை மங்கலாக காட்டுகிறது. இந்த சந்திப்புக்குபின் மஞ்சரி இறக்கிறாள், அதற்கும் ஜீவனே உதவுகிறார். சில தினங்களுக்குப்பின் பின் ஜீவனும், உடன் ஆத்தர்பௌவும் இறக்கிறார்கள்.

ஆத்தர்பௌ ஜீவனை முழுமையாக புரிந்துகொள்ளாத மனைவியாகவே இருக்கிறாள், ஒரு கட்டத்தில் தன் நண்பர் கிஷோரிடம் திருமண செய்த்துக்கொள்ளுதல் பற்றிய சிந்தனை இவ்வாறு வரும் “மணந்து கொண்டால் ஒரு பெண்ணை அடையாளம். ஆனால் எதற்காக மணந்து கொள்கிறானோ மனிதன் அந்த லட்சியத்தை அவன் அடைய முடிவதில்லை. பெண், பிரகிருதி (இயற்கை) இந்த இரு உண்மைகளும் ஒன்றே. இரண்டே நாள் இன்பம்; மார்பில் மிதித்து ஏறித் தம் வழியே சென்று விடுகிறார்கள். சில சமயம் தம் தகப்பன் வாயாலேயே கணவனை பற்றிய நிந்தையைக் கேட்டு உயிரை விடுகிறாள்.  எப்போதாவது கணவன்மீது மாறாக் காதல் கொண்டு, திருப்தியும் அமைதியும் நிரம்பி விளங்குகிறாள். இப்படி ஒரு பாக்கியம் செய்யக் கொடுத்து வைத்தவர்களுக்கு எதுவும் தேவையில்லை. புகழ், பெயர், பாராட்சி ஏன் மோட்சம்கூட இவர்களுக்கு தேவையில்லை. இதைவிட சிறந்த பாக்கியம் ஒன்று உண்டா? ஆனால் இது யாருக்குமே கிடைப்பதில்லை!”. அதை ஜீவனும் சிலாத்திக்கிறார். இப்படி பல தருணங்களில் போகிறபோக்கில் கொட்டும் ஞானங்கள், அவற்றுள் சில தான்சந்திக்கும் நோயாளிகளின் நோயை குணப்படுத்தும்போது இவ்வாறு சொல்லிச்செல்கிறது.

– கனவுகள் நம் மனக்கண்முன் தோன்றாமல் இரா

– இந்த நாட்டில் சன்யாசிகள் சம்பிரதாயத்தார் பயிலும் சிகிச்சை முறையொன்று வழக்கில் இருந்தது

– நெருப்பு நூறு வைத்தியனுக்கு சமம்

– இனி பிழைத்து என்ன ஆகவேண்டும்? எவ்வளவோ பார்த்தாச்சு, கேட்டாச்சு, அனுபவித்து ஆச்சு, நோயால் கஷ்டப்பட்டுமாச்சு; இருப்பவர்களை பற்றி கவலைப்படவேண்டியதில்லை

– அவள் உடம்பில் எத்தனையோ விதமான வியாதி குடிகொண்டுள்ளது. அந்த எலும்பில் பட்ட அடி அதை வெளியே கிளப்பிவிட்டது

– ஆனால் விதியினால் நோய்யுற்றால், அதற்கு மருந்தே இல்லை, சிகிச்சையும் இல்லை

– தான் செய்த பாவத்தினாலேயே தன் வாழ்நாளை ஒருவன் எதிர்பாராதவிதமாக குறுக்கிக் கொள்கிறான்

– பணம் படைத்தவனுக்கு பணநோய் இருப்பது நியாயம். பிறருக்கு உதவி செய்வோர் பிறர் கையாளும் விதிமுறைகளை கவிழ்த்துவிடவும் உரிமை இருக்கிறது

– பிணிகள்தாம் மரணத்துக்கு இட்டுச்செல்லும் பெரும்பாதை

வாழ்வின் இறுதி சொற்களை ஒருவர் தம் இளமையில் உரைப்பது பெரும் பேரு, அது அவ்வளவு எளிதில் கிடைக்க பெறாது. ஏனென்றால், பெரும்வாழ்வனுபவம் பெற்ற ஒருவராலேயே அப்படிபட்ட சொற்களை உறக்கமுடியும், அப்படிப்பட்ட அனுபவத்தை ஒரு நல்ல நூலோ (அல்லது) அப்படி வாழ்ந்த மனிதருடன் அருகமைந்தோ பெறக்கூடிய ஒன்று. இந்நூலின் வழியே வாழ்வின் முதிர்ச்சியை ஒருவர் அனுபவமாக பெறமுடியும். பல்வேறு முறை தாங்கள் இந்நூலைப்பற்றி சுடுவதன்முலமே இந்நூலை நான் கற்க நேர்ந்தது, நீங்கள் செய்வது என்றென்றுக்குமான தம்மம், மிக்க நன்றி.

கார்மேகம்
பெங்களூர்

ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்கள்,2021
அடுத்த கட்டுரைகேளாச்சங்கீதம்- கடிதம் 5