ஆலயம் எவருடையது?
ஆலயம் ஆகமம் சிற்பம்
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
ஆலயம், இறுதியாக…
திரு ஜெ அவர்களுக்கு,
தங்கள் தளத்தில் ஆலயம் பற்றி எழுதி வருவதை தொடர்ந்து வாசித்து வருகிறேன். HVAC Engineer ஆக என் அனுபவங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் வேலை பார்க்கும் அலுவலக திருப்பதி கிளையில் இருந்து திருமலை கோவிலில் மூலவர் மற்றும் மடை பள்ளிக்கு Ventilation சரியாக இல்லை வந்து பார்க்கவும் என அழைப்பு. Aadhar card அனுப்பி பதிவு செய்தவுடன், வரும்போது வேட்டி, துண்டுடன் வரவும் என சொல்லி இருந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட நாளில் நானும் என் மேனஜரும் சென்றவுடன் நேரடியாக மூலவர் இருக்கும் முன் அறை வரை அழைத்து சென்றார்கள். மின் விளக்கு இல்லை. நெய் விளக்கு பெரிய திரிகளில் எரிந்து கொண்டு இருந்தது. அவ் வெளிச்சத்தில் தான் பக்தர்கள் தரிசனம் மூன்றாவது அறைக்குப்பின். மூலவர் அறையில் விளக்கில் இருந்து வரும் விளக்கு புகை செல்ல duct வழியாக 50 மீட்டர் தொலைவில் வெளியே சென்று fan இல் இணைத்து வெளியேறும் இடத்தில் இருந்த கோபுரம் முழுக்க கரிப்புகை.
மூலவர் அறையை தினமும் இரவில் மூடி விடுவதால் duct இணைப்பு துண்டிக்கப்பட்டு பின் காலை கதவு திறக்கும் போது தானாகவே இணைப்பது மாதிரி இருந்தது. மூலவர் அறையில் இருந்த பூசகர் எப்படியாவது சரி பண்ணுங்கள் என்று வேண்டிக் கொண்டார். வீட்டிற்கு சென்று washing basin ல் துப்பினால் 2, 3 முறை கரியாக வருகிறது என்றும் மூன்று தலை முறையாக பெருமாளுக்கு சேவகம் என்று கூறினார்.
நல்ல வேளையாக தற்போது கற்பூர ஆரத்திக்கு பதில் நெய் விளக்கில் தூபம் காட்டுகிறார்கள். பின் வலது புறம் இருக்கும் மடப்பள்ளி கல் கட்டடம் இயற்கையாகவே புதிய காற்று உள்ளே வரவும் சமையல் செய்யும் போது உள்ள வெப்ப காற்று வெளியேற எதிர் திசையில் திறப்பு இருக்கிறது. ஆனால் தற்சமயம் அது போதாமையால் forced ventilation முறையில் புதிய காற்று உள்ளே வரவும் மற்றும் வெப்ப காற்று வெளியேற தனி யாக fan, duct design செய்து கொடுத்து வந்தோம்.
தற்போது எல்லா பெரிய கோவில்களிலும் (திருசெந்தூர் முருகன் கோவில் உட்பட) AC மற்றும் Ventilation duct செல்வதை பார்க்கலாம். கோவில் கட்டப்பட்ட காலத்தில் உள்ள மக்கள் தொகையையும், தற்போது உள்ள மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டால் சுகாதாரம் கருதி இந்த வசதி தேவைப் படுகிறது.
அன்புடன்
சேது வேலுமணி சென்னை
***
அன்புள்ள சேது வேலுமணி,
ஆலயங்களில் பெருகிவரும் கூட்டத்தைக் கண்டால் வருங்காலத்தில் ஆலயங்களில் மேலும் பல வெளியேற்ற வழிகளையும், ஆபத்துகால வெளியேற்ற வழிகளையும் உருவாக்க வேண்டியிருக்கும். ஆலயங்களுக்குள்ளேயே கழிப்பறைகளை உருவாக்க வேண்டியிருக்கும். இப்போதே சிறப்புநாட்களில் நாலைந்து மணிநேரம் உள்ளே வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.
ஜெ
***
அன்புள்ள ஜெ
ஆலயம் பற்றிய உங்கள் விவாதம் முதலில் கொஞ்சம் சீண்டும்படி இருந்தது. என்னது இது ஆலயங்களுக்குள் போக கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்று சொல்கிறார் என்று தோன்றியது. ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தால் ஆலயத்தில் வழிபடுவதே கொடுமையானதாக ஆகிவிடும் என்று தெரிந்தது. ஆலயம் செல்வதே பெரிய துன்பமாக, ஆபத்தானதாக ஆகிவிடும். ஆலயமும் அழிந்துவிடும். ஆகவே நீங்கள் சொன்னவற்றைச் செய்வதே நல்லது என்று படுகிறது.
அரங்க ராமநாதன்
ஆலயம் – எஞ்சும் கடிதங்கள்
ஜெயமோகன் நூல்கள் வாங்க

