அய்யா,
நான் காலேஜ் படிக்கும் போது நான் தனியாக வெட்ட வெளியில் அமர்ந்து தியானம் பண்ணினேன். அதில் நிறைய பரவச நிலைகளையும் அதீத வலி தரும், பிரளய நிலைகளையும் தரும் நேரங்களையும் கடந்தேன்.
இந்த நிகழ்விற்கு பிறகு எனக்கு சித்த பிரமை நிலை இருந்தது. இப்போது வரை என் உள்உணர்வுகளுக்குள் பல தடுமாற்றங்கள், பல வித சிக்கல்களுடன் வாழ்கை வாழ்கிறேன்…. உங்களுக்கு இதை பற்றி ஆராய விருப்பம் இருந்தால் ஒத்துழைப்பு தர விரும்புகிறேன்…
வி
***
அன்புள்ள வினோத்,
நான் முன்னரும் இத்தளத்தில் எழுதியிருக்கிறேன். உளப்பிரச்சினைகள், உணர்வுக்கொந்தளிப்புகள் இருக்கும்போது தியானம் செய்யக்கூடாது. அது ஆபத்தானது. தியானம் அவற்றை பலமடங்காகப் பெருக்கிவிடும்.
தியானம் என்பது கூர்தல். எதை கூர்வது என்பது அதில் முக்கியம். ஐயமும் அச்சமும் குழப்பஙகளும் சோர்வுகளும் கொண்டவர்கள் தியானத்தில் அவற்றையே கூர்வார்கள்.
ஆகவேதான் முறையான தியானப்பயிற்சி அளிக்கும் அமைப்புகளில் தத்துவார்த்தமான ஆழ்ந்த பயிற்சிக்குப் பின்னரே தியானத்தை கற்பிக்கிறார்கள். தன் உணர்வுச்சிக்கல்களை அறிந்து அவற்றை சமப்படுத்த கற்றவர்களே மேற்கொண்டு தியானம் செய்ய முடியும்.
ஆகவே நீங்கள் தியானப் பயிற்சி எதையும் செய்யலாகாது. தியானம் வலுவான உள்ளம் கொண்டவர்களுக்குரியது. உங்களுக்குரியது செயல். அது உடலால் செய்யப்படும் தொழிலாக இருந்தால் நல்லது. சீராக நாள் முழுக்க செய்யப்படும் செயலாக அது இருக்கவேண்டும். அவ்வாறு செய்யும் தொழிலின் சீரான ஒழுங்கு உங்களுக்குள்ளும் அமைவதைக் காண்பீர்கள்.
ஜெ