செந்நா வேங்கை -கடிதம்

அன்புள்ள ஜெ

கடந்த வாரம்தான் செந்நாவேங்கை முடித்தேன். வெண்முரசின் வாசிப்பில் மிகவும் பின் தங்கியுள்ளேன், மன்னிக்கவும். முதற்கனலில் முதல் நாளில்  உங்கள் எழுத்தை என்னால் பின் தொடரமுடியவில்லை. இந்தவகையான செறிவான எழுத்துக்கு தக்க வாசிப்பு பயற்சி எனக்கு அப்போது இல்லை. நாவல் புத்தகங்களாகவரும் வரைக்கும் காத்து நின்று படிக்க தொடங்கினேன்.

இப்பொழுது நினைத்து பார்த்தல் முதற்கனல் ஒருவகையில் எனக்கு சரியான வாசிப்பு பயிற்சியை தந்தது என்றே சொல்வேன். ‘நீலம்’ வாசித்து அந்த தமிழைசுவைத்த நாட்களை இன்றும் இனிமையாக நினைத்துக்கொள்கிறேன். அதில் உள்ள ஆன்மிக, யோக, தத்துவார்த்தமான தளங்களை நான் தொடமுடியவில்லை தான்னா. ஆனாலும் அந்த பித்து பிடித்தது போன்றகவிதைதன்மை, கதை இறுதியில் வரும் அந்த நாடகீயதருணம் நெஞ்சில் எப்பொழுதும் நிற்பது.

ஒரு  வாசகனாக நான் பெருமைக்கொள்ளும் புத்தகம் அது. இருந்தாலும், இது ஆமை நடைதான். அப்படி வந்துசேர்ந்ததுதான்… செந்நாவேங்கை. ‘குருதிச் சாரல்’ பாரதத்தை பிள்ளைகளின் பார்வையில் சொன்னால்… செந்நாவேங்கை தந்தையரின்பார்வையில் தொடர்கிறது. ஸ்வேதனும், சங்கனும் விதிவிலக்கு என்றாலும் அது விராடரின் பிறழ்வுகளைநுணுக்கமாக சொல்லி செல்கிறது.

முதல் அத்யாயம் சாத்யகியில் இருந்து. அவர் கண்ணனுக்கு என்னதான்அணுக்கமானவராக இருந்தாலும்… உள்ளுக்குள் தானொரு சேவகன் என்றே நினைப்பவர். தனது தலைவனுடன்தனக்கு இருக்கும் அந்த அண்மை காரணமாக பிள்ளைகள் ஆணவம்க்கொண்டு விடுவார்களோ என்றுபயப்படுகிறார். யாதவ கிராமத்தில் இருந்து வந்த பட்டிக்காட்டு பிள்ளைகளுக்கு இங்குள்ள ராஜ நடைமுறைகள்தெரியாது என்ற பதட்டத்தின் கீழ் இருப்பது அந்த பயம்தான். திருஷ்டத்தியும்னனின் மகளுக்கு தனது மகனைமுடித்து வாய்க்கும் தருணங்களிலும் அந்த நெஞ்சு படபடப்பு கேட்கமுடிகிறது. ‘யுத்தத்தில் இந்த பிள்ளைகள்வாழ்வார்களா. இந்த நல்வாழ்த்துக்களில்தான் எத்தனை அபத்தம்!’ என்ற  உண்மை மனதைஅறைந்துக்கொண்டே இருக்கிறது.

நாவேலில் பூரிஸ்ரவஸின் பிள்ளைகள் தோன்றும் இடங்களிலும் இதேநெருடல். பிறகு பாரதத்திற்க்கே பெரும் தந்தையாக பால்ஹிகர். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாசிறுபிள்ளை மனதுடன் அஸ்தினபுரியில் நுழைகிறார். இங்கு குண்டாசி திருதராஷ்டிரரின் மீது கசப்பையெல்லாம்கொட்டி வைக்கிறான். துரியனின் மீதும். அவனும் தந்தை வடிவம் தான் என்பதனால் தானா? ஏனோ தெரியவில்லை வெண்முரசுவின் நாயகன் துரியன் என்றே தோன்றும் எனக்கு. துகிலுறிப்பின்சந்தர்பத்தில் தவிர வேறு எங்கும்   கீழ்மை அண்டாவாதவனாகதான் வருகிறான். மாசிலா கருமணியாக. சுத்ததங்கமாக. அந்த மெருகு இந்த நாவலில் மேலும் கூடி இருக்கிறது.  ஒரு பாச தெய்வமாகவே மிளிர்கிறான்.

அரவானை பார்க்கும் வேளையிலும் சரி, சகதேவனை சந்திக்கும் நாளிலும் சரி… துரியனின் அந்த தந்தைக் குணம்விம்மலை வரவழைத்து விட்டது. பானுமதியை துரியன் சந்திக்கும் நிகழ்வு அலாதி. ஆண் பெண் நுண்ணிய ஆடலை பற்றி  எவ்வளவு  சொன்னாலும் உங்களில் ஒரு கடல் அளவிற்கு மிச்சம் இருக்கும் போலும்.  ‘பின் தொடரும் நிழலின் குரல்’, விஷ்ணுபுரம்,  வெண்முரசின் எல்லா நாவல்களிலும் சொற்கள் இல்லாத இந்த ஆடலை காண்பித்துக்கொண்டேவருகிறீர்கள். பானுமதி-துரியனின்  சந்திப்புக்கு ஒரு படி மேலாக துச்சாதனன்- அசலையின் சந்திப்பு. பெரும்கொந்தளிப்பாக, கண்ணீர் அரற்றலுடன் நிகழவேண்டியது மிக மென்மையாக புன்னகையுடன் கடந்துசெல்கிறது. முக்கியமாக அந்த இறுதி வரிகள்…

முன்பே சொன்னதைப்போல ‘நம் பிள்ளைகளில் வாழ்பவர்கள் யார், வீழ்பவர்கள் யார்…’ என்ற தந்தையரின்கொந்தளிப்பாகவே இந்த நாவலை நான் பார்க்கிறேன். அதற்கு உச்சம் அரவானின் சுயபலி. ஸ்வேதனின்கண்கள் வழியாக எவ்வளவு துல்லியமாக அவனை காண்பித்து இருப்பீர்கள்! அரவம் மாதிரியே நளினம்… ஆனாலும் உள்ளுக்குள் ஆலாகாலத்தின் அனல். மனிதர்களை முதல் முறையாக பார்க்கும் குழந்தையின் தவிப்புஅவனில். அர்ஜுனனிற்கு முதல் பார்வையிலேயே தெரிந்து விடுகிறதா அவன் முடிவு அதுவென்று?

அரவானின்கதை கேள்விப்பட்டது தான்! ஆனால், அந்த உச்ச நிகழ்வுக்கு கொண்டு செல்ல நீங்கள் சமைத்திருக்கும்நிகழ்வுகள், காரண காரியங்கள்   இது புனைவல்ல… வரலாறு என்று நினைக்கும் அளவிற்கு தர்க்கங்களுடன்அமைந்து இருக்கின்றன. யார் கண்டது நாளை எவரேனும் வெண்முரசு நிகழ்வுகளையே ’மூடி மறைக்கப்பட்டபாரத வரலாறு’ என்று எழுதலாம்! நாவலின் கடைசி அத்தியாயத்தில் பெரும் தந்தை என்ற தன் அடையாளத்தை வீசி எறிகிறார் பீஷ்மர்! இளம்குழந்தைகளின் குருதியில் திளைக்கிறார். தந்தைகளில் கரந்து உறங்கும்  அந்த வஞ்சத்துடன் நாவல்முடிகிறது.

‘திசை தேர்வெள்ளம்’ சித்தமாக இருக்கிறது. இதில் துரியனின் இறப்பு நிகழ்ந்து விடுமோ என்று பதைப்பாகஇருக்கிறது.

வெண்முரசில் ஒரு நிகழ்வு மனதில் நீண்ட நாட்களாக தங்கி இருக்கிறது. துரியனும் பானுவும் கர்ணனின் தாய் தந்தையர் வீட்டுக்கு வருவார்கள். அங்கு, கர்ணனின் தந்தை அஸ்வ சாஸ்திரத்தைபற்றி விலாவரியாக சொல்லிக்கொண்டு இருப்பார்.  நகைச்சுவையான காட்சிதான் ஆனால் மரியாதை கருதி பானுவுக்கு அங்கு நகைப்பது பிடிக்காது. சிரிக்காவிட்டாலும் துரியோதனின் முகத்தில் புன்னகை. ஏன் அப்படிஎன்று கேட்பாள் பானு. சற்று கடுகடுப்புடன். ‘என்ன செய்ய எல்லாரும் நகைக்கும் பொழுது முகம் அப்படி ஆகிறதே!’ (மன்னிக்கவும் உங்கள் சொற்கள்அல்ல. என் மனதில் உள்ளவை  இவை) என்பான் துரியன் வெள்ளந்தியாக. எனக்கு வெண்முரசு காட்டும் துரியோதனன்   அவன் தான்!

ராஜு

முந்தைய கட்டுரைசிரிக்கும் ஏசு
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 2