உலகுடைய பெருமாள் கதை

காவியம் [காப்பியம்] என்பதன் இலக்கணம் நம் மனதில் எப்போதுமே செவ்வியலுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. ஐம்பெரும்காவியங்கள், ஐஞ்சிறுகாவியங்கள் என தமிழில் முறைப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் எல்லாமே செவ்வியல்நூல்கள். கோயில் என்றாலே கல்லாலான கோபுரமும் முகமண்டபமும் கொண்ட பெருங்கட்டுமானம் கண்முன் எழுவதுபோல.

ஆனால் பேராலமரத்தின்கீழ் கூரையின்றி அமர்ந்திருக்கும் நாட்டார் தெய்வமும் கோயில்கொண்டிருப்பதுதான். தமிழ்க் காவியங்களின் வரிசையில் நாட்டார் காவியங்களையும் சேர்க்கவேண்டும். தமிழ்ப்பண்பாட்டையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்ள அது மிகவும் உதவியானது

ஆனால் தடையாக இருப்பது காவியம், கோயில் போன்றசொற்கள்தான். காவியங்களுக்கு காவிய இலக்கணம் சம்ஸ்கிருத இலக்கணத்திலும், தமிழ் இலக்கணநூல்களிலும் வரையறைசெய்யப்பட்டுள்ளது. பலபடிகளாக விரியும் ஒரு பெரிய கட்டமைப்பு அதற்குரியது. ஐவகைநிலமும், நால்வகை பொருளும்,ஒன்பதுவகை சுவைகளும் பொருந்திவரவேண்டும் என்பதுபோல ஒரு தொகுப்புத்தன்மையும் அதற்கு வலுயுறுத்தப்படுகிறது. பாட்டுடைத்தலைவன் சீர்பெறு நம்பியாகவோஉயர்ந்தோர் ஏத்தும் பெண்ணாகவோ இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

கோயில் என்ற சொல் கோ+இல் என்ற பொருள்கொண்டு அரசனின், தலைவனின் இடம் என்று சுட்டிநிற்கிறது. அரசன் ஆலமரத்தடியில் அமரமுடியாது. ஆகவே நாட்டார்த்தெய்வ இருக்கைகள் சரியான பொருளில் கோயில்கள் அல்ல. அவை இறைநிலைகள், இறைவைப்புகள், இறைச்சோலைகள் என்றெல்லாம் சொல்லத்தக்கன மட்டுமே

ஆனால் ஒரு முரண்சொல்லாக்கமாக நாட்டார் தெய்வங்கள் என்றும் நாட்டார் காவியங்கள் என்றும் நாம் இவற்றை வரையறைசெய்துகொள்ளலாம். அந்த சொல்லிணைவு பெருங்கோயில்களில் இருந்தும் செவ்வியல் காப்பியங்களில் இருந்தும் நாட்டார் கோயில்களையும் நாட்டார் காவியங்களையும் ஒப்பிட்டு வேறுபடுத்த உதவும். கூடவே பொதுமையையும் சுட்டிக்காட்டி நிற்கும்.

தமிழகத்தின் நாட்டார் காவியங்களில் முதன்மையான சிலவற்றில் ஒன்று உலகுடையபெருமாள் கதைப்பாடல். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இது வாய்மொழிப்பாடல் வடிவிலேயே இருந்தது. வில்லுப்பாட்டு என்னும் கலையே இந்த வாய்மொழிக்காவியத்தை அழியாமல் நிலைநிறுத்தியது. வில்லுப்பாட்டுப் புலவர்களிடம் கையெழுத்து பிரதிகளும் இருந்தன. ஏட்டிலும் தாளிலும். பெரும்பாலும் குமரிமாவட்டத்தில் புழங்கிய நூல் இது.

குமரிமாவட்ட நாட்டாரிலக்கியங்களின் தொடக்ககாலப் பதிப்பாளரும், தமிழக நாட்டாரிலக்கியத்தின் உ.வே.சாமிநாதய்யர் என்று சொல்லத்தக்கவருமான, காலம்சென்ற ஆறுமுகப்பெருமாள் நாடார் அவர்கள் இதைப்பற்றி குறிப்பிட்டு ஒருவடிவை அச்சேற்றியிருக்கிறார். அதன்பின்னர் பேரா.நடராஜன் முழுமையான ஆய்வுப்பதிப்பாக 1981ல் அச்சேற்றியிருக்கிறார். குமரிமாவட்ட நாட்டாரியல் ஆய்வுமுன்னோடிகளான அ.கா.பெருமாள், திரிவிக்ரமன் தம்பி ஆகியோர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

திரிவிக்ரமன் தம்பி

தமிழ்க்காப்பியங்களின் பொதுக்கூறுகள் என்னென்ன? காப்பியநாயகன் அல்லது நாயகி. அனைத்துவகையான பாடல்களும் கலந்துவரும் ‘பாட்டிடையுட்ட உரையுடைச் செய்யுள்’ முறை. அனைத்துக்கும் மேலாக தத்துவத்தேடல், தரிசன வலியுறுத்தல். சிலம்பு ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாதல், உரைசால்பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுதல்’ என்னும் தரிசனங்களை முன்வைக்கவே எழுதப்பட்டுள்ளது. கவுந்தி போன்ற கதைமாந்தர் வழி தத்துவமெய்ப்பொருள் பேசப்படுகிறது

இந்தப் பொதுக்கூறுகளில் தத்துவமும் தரிசனமும் தமிழக நாட்டார்க் காவியங்களுக்கு இல்லை . அவை ஒரு கதையை, ஒரு வாழ்க்கைச்சூழலைச் சொல்கின்றன, எதையும் எடுத்து முன்வைப்பதில்லை. கதை என்பதற்கு அப்பால் பலசமயம் கொள்வதற்கு ஏதுமிருப்பதில்லை. அவற்றின் கூறுமுறை நேரடியான எளிமையான நாட்டார்ப்பாடல் வடிவம். பாட்டுடைத்தலைவனை அல்லது தலைவியை முன்வைத்து ஒரு நீள்கதையைச் சொல்கின்றன என்பதனாலேயே அவை காவியம் எனப்படுகின்றன

உலகுடைய பெருமாள் கதை அப்பெயர் சுட்டுவதுபோல உலகுடைய பெருமாள் என்னும் பாட்டுடைத்தலைவனின் வீரம், வீழ்ச்சி ஆகியவற்றைச் சொல்லும் வீரகாவியம். இரங்கல்காவியமும் கூட.

சிறந்த பாலூருடையான் குருநாதன்
சிறிது கல்வி அறிவித்தவருடைய
செந்தமிழிது ஆராய்ந்து பாடவே
நற்பாதத்தை சிரத்தில் தரித்தல்லோ
நாவலர் தங்கள் பாதத்தை துச்சியால்
எப்புவியும் புகழும் குழந்தையில்
இரவிக்காராளன் இதை செப்பினான்

என்று இக்காவியம் தன் ஆசிரியனைப்பற்றிச் சொல்கிறது.

ஆசிரியனின் பெயர் இரவி காராளன். இது கராளன், கரையாளன் என்ற சொல்லின் மரூஉ என திரிவிக்ரமன் தம்பி அவருடைய ‘தெற்கன்பாட்டுக்கள்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது பழைய ஆட்சிக்காலத்தில் நிலவுடைமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் ஒன்று. கரை என்றால் ஒரு பகுதி நிலம், அதற்கு உரிமையாளன் என்ரு பொருள். யாதவர், வேளாளர், நாடார் என மூன்று சாதியினருக்கும் இது அளிக்கப்பட்டுள்ளது

பாலூர் என்னும் சிறந்த ஊரில் பிறந்தவன் என்று கவிஞர் தன்னை குறிப்பிடுகிறார். டாக்டர் நடராஜனின் நூலில் பாலூர் என்பது மாத்தூர் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நூலில் பிற இடங்களிலெல்லாம் கவிஞன் பிறந்த ஊர் பாலூர் என்றே உள்ளது. பாலூரில் குஞ்சுவீடு என்னும் தொன்மையான இல்லம் உள்ளது. இங்கே பதினாறாம்நூற்றாண்டுமுதல் பல கவிஞர்கள் பிறந்து வாழ்ந்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் வில்லுப்பாட்டுக் கவிஞர்கள்

இவர்களில் கவி ராமன் பிள்ளை, குமாரக்குட்டிப்பிள்ளை, பாலூர் தங்கப்பன் பிள்ளை ஆகியோர் புகழ்பெற்றவர்கள். குமாரக்குட்டிப் பிள்ளை வில்லுபாட்டின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். தல்லுகவி என்னும் ஒருவகை நாட்டார் வடிவம் உண்டு. மற்போருக்குரிய பாடல். அந்த வகைப் பாடலின் முன்னோடியாக தங்கப்பன்பிள்ளை கருதப்படுகிறார். பாலூர் குமரிமாவட்டத்தில் கருங்கல் – தேங்காய்ப்பட்டினம் சாலையில் உள்ளது. இரவி காராளன் அக்குடும்பத்தவராக இருக்கலாம் என்று திரிவிக்ரமன் தம்பி கருதுகிறார்

இன்று கிடைக்கும் ஓலைப்பிரதிகளில் இருந்து இந்த நாட்டார்க்காவியம் கிபி 1559ல் [அதாவது மலையாளம் கொல்லம் ஆண்டு 735ல்] இயற்றப்பட்டிருக்கலாம் என்பது திரிவிக்ரமன் தம்பியின் கணிப்பு. பல ஏடுகளிலும் ‘ஏட்டில் இக்கதை முற்றிற்று’ என்ற எழுத்தை தொடர்ந்து 735 என்னும் எண்ணும் எண் உள்ளது.

இக்கதையின் காலத்தை கணிக்க இதன் உள்ளடக்கத்தில் இருந்து சில சான்றுகளை தேடுகிறார் திரிவிக்ரமன் தம்பி. இந்நூலில் போர்ச்சுக்கீசியர்களின் கடல்படை பற்றிய குறிப்புகள் உள்ளன.போர்ச்சுக்கீசியர் புகழ்பெற்ற கடல்கொள்ளையனாகிய குட்டி அலி மரைக்காயரை அரபிக்கடலில் வைத்து தோற்கடித்துக் கொன்றனர். அந்தப்போர் பற்றிய குறிப்பு இந்நூலில் உள்ளது

குட்டிஅலி மரைக்காயர் 1531ல் கொல்லப்பட்டார் என்பது வரலாற்றாசிரியர்களான கே.எம்.பணிக்கர், பத்மநாபமேனோன் ஆகியோரின் கணிப்பு. கேரள வரலாற்றாசிரியர்களும் இலக்கிய ஆசிரியர்களும் இந்த நூலை கருத்தில்கொண்டிருக்கின்றனர். கேரள இலக்கிய வரலாற்றை எழுதிய உள்ளூர் பரமேஸ்வர அய்யர் “கதை தொன்மையானது என்றாலும் நூலுக்கு அதிக பழமை தெரியவில்லை” என்று சொல்கிறார். அவர் இதிலுள்ள சொல்லாட்சிகள் சிலவற்றைக் கொண்டு இம்முடிவுக்கு வருகிறார். ஆனால் நாள்தோறும் புழங்கிய வில்லுப்பாட்டில் சமகால மொழிக்கலப்பு இருக்கும் என்று திரிவிக்ரமன் தம்பி கருதுகிறார்

கேரளத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவராகிய குஞ்சன் நம்பியார் [1705-1770]  தன் துள்ளல் பாடல்களிலொன்றில்

“உலகுடையபெருமாள் வாழும்காலம்
பலகுடையில்ல தரித்ரியிலெங்ஙும்”

என்கிறார். உலகுடையபெருமாள் ஆண்டபோது புவியில் பலகுடைகள் இருந்து ஆளவில்லை. உலகுடையபெருமாள் என்னும் மன்னனின் புகழ் பதினேழாம் நூற்றாண்டில் பெரிதும் அறியப்பட்டிருந்தது என்பதற்கான சான்று இது. இக்கதை தம்புரான் பாட்டு என்ற பேரிலும் அறியப்பட்டுள்ளது

இந்த பாட்டுகதை ஒரு பெருங்காவியத்தின் இயல்பு கொண்டது. மிகநீளமானது. ஏறத்தாழ 9000 அடிகள் கொண்டது. இப்போது 8000 அடிகள் கிடைக்கின்றன.இதன் கதைச்சுருக்கம் இது

பொன்பெருமாள்- மாலையம்மை தம்பதியினருக்கு ஐந்து ஆண்குழந்தைகளும் ஒரு  பெண்குழந்தையும் பிறந்தன. குலசேகரன், முகில்பெருமாள், முடிவிளங்கும்பெருமாள், வரோதயன்,மதுரவீரப்பெருமாள் என்று மைந்தர் பெயர். மகள் பெயர் பொன்னருவி. பொன்னருவியின் கதை தனியாக வேறொரு வில்லுப்பாட்டாக உள்ளது

பொன்பெருமாள் மதுரையை தலைநகரமாகக்கொண்டு ஆட்சி செய்தார். அவர்களை எதிரிகள் தாக்கி அழித்தனர்.அரசகுடியினர் சிதறிப்போயினர். எஞ்சியவர் பொன்னருவி மட்டுமே. பொன்னருவியை அவளுக்கு 12 வயதிருக்கும்போது பொன்னும்பெருமாள் என்னும் சிற்றரசன் மணம் புரிந்துகொண்டான்.

அவள் வையக்கரை என்னும் ஊரிலுள்ள அரண்மனையில் வாழ்ந்தாள். அவளை வையக்கரைத்தாயார் என அழைத்தனர். அவர்களுக்கு குழந்தையில்லை. பல பூசைகளும் செய்தனர். அந்தப்பூசைபலனாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதை உலகுடையபெருமாள் என அழைத்தனர்.

உலகுடைய பெருமாளின் பிறப்பு முதல் தொடங்குகிறது இந்த நாட்டார் காவியம். அவருக்கு இருபத்துஎட்டு கட்டுதல் [அரைநாண் அணிவித்தல்] ஆட்டப்பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்கள் நிகழ்கின்ரன. ஐந்தாம் வயதில் எழுத்துக்கு இருத்துகிறார்கள்.

எழுத்துவித்தை கற்பிக்க நீலகண்ட கணக்கன் என்பவரை வெற்றிலை பாக்கு வைத்து தூதனை அனுப்பி வரவழைக்கிறார்கள்.தூதன் செல்லும் வழி முழுக்க குமரிமாவட்டத்திலும் திருவனந்தபுரம் பகுதியிலும் உள்ள ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன.மணலெழுத்தும் சுவடியெழுத்தும் உலகுடையபெருமாள்  கற்கிறான்.பத்துவயதுக்குப் பின் ஆயுதக்கலை. துளுநாட்டுப் பணிக்கர் ஆயுதக்கலை சொல்லிக்கொடுக்கிறார்.

ஆயுதக்கலை தேர்ச்சிபெற்றபின் உலகுடையபெருமாள்ளின் திறமையை சோதனைசெய்ய  ஒரு பணியை அளிக்கிறார்கள்.ஆரியக்கரை என்ற ஊரிலிருந்து குதிரைகளைப் பெற்றுவரும்படி சொல்கிறார்கள்.உலகுடையபெருமாள் மணக்குடி துறைமுகத்தில் உள்ள போர்ச்சுக்கிசியர் [பறங்கியர்] படைக்கு பணம்கொடுத்து தன் படையுடன் துணைபோகச் சொல்கிறான். அவர்கள் ஆரியக்கரைக்கு படகுகளில் கிளம்பிச் செல்கிறார்கள். அங்கே குதிரைகளைப் பெற்று, வெடிப்பொருட்களையும் வாங்கிக்கொண்டு திரும்பி வருகிறார்கள்

வரும்வழியில் குட்டிஅலி மரைக்காயர் அவர்களின் படகுகளை மறிக்கிறார். பறங்கி கப்பித்தானுக்கும் குட்டிஅலி மரைக்காயருக்கும் வாய்ச்சண்டை நடக்கிறது. போர் தொடங்குகிறது. குட்டிஅலி மரைக்காயரை கப்பித்தான் சுட்டுக்கொன்று குதிரைகளுடன் வந்துசேர்கிறான்.

குட்டி அலி மரைக்காயர் மதுரை மன்னனுக்கு வேண்டியவர். ஆகவே மதுரை மன்னன் வெகுண்டு ‘காட்டாளர்’ படைகளை அனுப்பி கப்பித்தானையும் உலகுடையபெருமாள்யும் பிடித்துவர ஆணையிடுகிறான். அதற்குள் குதிரைப்படை ஒன்றை உருவாக்கிக்கொண்ட உலகுடையபெருமாள் காட்டாளர்களை ஓட ஓட துரத்துகிறான்

உலகுடையபெருமாள் ஏழு அழகிகளை திருமணம் செய்கிறான். மதுரைக்குச் சென்று மதுரையின் அரசனை பழிக்குப்பழிவாங்கவேண்டும் என்று எண்ணி தன் அன்னை பொன்னருவியிடம் அனுமதிகோருகிறான். அன்னை துர்ச்சகுனங்கள் கண்டமையால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உலகுடையபெருமாள் அன்னையை கட்டாயப்படுத்தி அனுமதி பெறுகிறான்

ஏழு தேவியரிடமும் தனித்தனியாக அனுமதுபெற்று உலகுடையபெருமாள் மதுரைக்குப் பயணமாகிறான். பல சிற்றரசர்களை துணைக்குச் சேர்த்துக்கொள்கிறான்.எடலாரம் என்னும் ஊரில் உலகுடையபெருமாள்ளின் படைகள் தாவளமடித்தன. மதுரைமன்னன் ஒற்றர்கள் வழியாகச் செய்தியை அறிந்து படையுடன் வருகிறான். அவர்கள் சிங்காரத்தோப்பு என்ற ஊரில் தங்குகிறார்கள்

மறுநாள் காலையில் போர் நிகழ்கிறது. மதுரைமன்னன் தோற்றுவிடுகிறான். அவன் தப்பி மதுரைக்கு ஓட உலகுடையபெருமாள் துரத்திச்செல்கிறான். மதுரையை உலகுடையபெருமாள் கைப்பற்றுகிறான். மதுரைமன்னன் மானாமதுரைக்கு தப்பி ஓடிவிடுகிறான்.  மானாமதுரையில் தன் சாதியினரின் ஆதரவைத் திரட்டிக்கொண்டு மதுரைமேல் படைகொண்டுவந்த மதுரைமன்னனை உலகுடையபெருமாள் மீண்டும் தோற்கடிக்கிறான். மதுரையின் ஆட்சியை உறுதிசெய்கிறான். பொன்னருவி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள்

மலைக்காடுகளில் போய் ஒளிந்த மதுரைமன்னன் மலைக்குடிகளை படையாகத் திரட்டி மீண்டும் வந்து மதுரையை தாக்குகிறான். மூன்றாவதுபோரில் மதுரை மன்னன் வெல்கிறான். உலகுடையபெருமாள்ளின் உடைவாள் போர்க்களத்தில் முறிந்துவிடுகிறது. முறிந்த வாளுடன் உலகுடையபெருமாள் பின்வாங்கினான். அவன் படைகளும் பின்வாங்கின

எதிரியின் கையால் அவமானப்பட்டுச் சாவதைவிட தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்த உலகுடையபெருமாள் தன் தம்பியரிடம் தன்னைக் கொல்லும்படி ஆணையிடுகிறான். அவர்கள் மறுக்கிறார்கள். தங்களைக் கொல்லும்படி கோருகிறார்கள். உலகுடையபெருமாள் தம்பியரைக் கொன்று தானும் சங்கறுத்து உயிர்விடுகிறான். அவர்களின் உயிர்கள் கைலாசம் சென்று சிவபெருமானைச் சந்திக்கின்றன

இந்தசெய்தியை மதுரை மன்னன் அறிகிறான். உலகுடையபெருமாள்ளின் மரணம் மதுரைமன்னனை துயரத்தில் ஆழ்த்தியது. அவன் உலகுடையபெருமாள்ளுக்கும் அவன் தம்பியருக்கும் முறைப்படி ஈமக்கடன்கள் செய்து நடுகற்கள் அமைத்து வழிபடுகிறான்

இதிலுள்ள தகவல்களைக்கொண்டு சில ஊகங்களை திரிவிக்ரமன் தம்பி செய்கிறார். ஆரியக்கரை என்பது போர்ச்சுக்கல் ஆட்சியின்கீழிருந்த கொல்லம் கடலோரப்பகுதி என ஊகிக்கிறார். உலகுடையப்பெருமாள் என்ற பேரில் எவரும் மதுரையை ஆட்சிசெய்ததாகவோ, மதுரையை கைப்பற்றியதாகவோ, மதுரை அரசருக்கு எதிராக கலகம்செய்ததாகவோ எந்த ஆவணமும் இல்லை.

இன்னொன்று, இக்காலகட்டம் ஓரளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஏசுசபை பாதிரியார்கள் மதுரை- திருவிதாங்கூர் பகுதியில் பரவலாக பயணம்செய்து குறிப்புகளை எழுதிய காலகட்டம் இது. அவர்கள் இப்படியொரு படைஎடுப்பின் கதையைச் சொல்லவில்லை. இது செவிவழிச்செய்திகளைக்கொண்டு பெரும்பாலும் கற்பனையாகப் புனையப்பட்டதாக இருக்கலாம் என்று திரிவிக்ரமன் தம்பி எண்ணுகிறார்

தமிழக வரலாற்றின் ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளைக்கொண்டு பார்த்தால் 1531ல் மதுரை நாயக்கர் ஆட்சியின்கீழ் இருந்தது. ஆனால் நாயக்கர் ஆட்சி வேரூன்றவில்லை. வரலாற்றுச் சித்திரம் சற்று குழப்பமானது

சுருக்கமாக இச்சித்திரத்தைச் சொல்லலாம். 1335ல் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் மதுரையை கைப்பற்றினார். பாண்டிய அரசர்களான வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் இருவரையும் அவர் வென்றார்.தன் படைத்தளபதிகளை மதுரைக்கு அரசர்களாக நியமித்துவிட்டுச் சென்றார்

1335 முதல் 1378 வரை நடைபெற்ற மதுரை சுல்தான்களின் ஆட்சி தமிழகவரலாற்றிலேயே கொடிய ஒரு காலகட்டம். மதுரை சுல்தான்கள் அரசகுடியினர் அல்ல. ஆகவே அவர்களின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு இல்லை. ஒவ்வொருவரும் இன்னொருவரைக்கொன்றனர். வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகளில் எட்டு ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கிறார்கள். உதௌஜி என்னும் அலாவுதீன் ஷா சிலமாதங்களே ஆண்டார், மருமகனாலேயே கொல்லப்பட்டார்.

மதுரை சுல்தான்கள் எதிரிகளால் சூழப்பட்டிருப்பதாக எண்ணி அஞ்சினர். ஆகவே அவர்கள் இந்துக்களை கொன்றொழித்து, அச்சுறுத்தி அவர்கள் அணிசேராதபடி பார்த்துக்கொண்டனர். ஒவ்வொருநாளும் கொடூரமான படுகொலைகள் நடந்தன.உலகவரலாற்றில் எங்கும் அப்படிப்பட்ட கொடிய கூட்டுப்படுகொலைகளைக் கண்டதில்லை என இபின் பதூதா என்னும் மொரோக்கோ நாட்டு இஸ்லாமியப் பயணி பதிவுசெய்தார்

1378ல் விஜயநகரத்தை ஆட்சிசெய்த குமாரகம்பணனின் படைகள் மதுரைமேல் படையெடுத்துவந்தன.மதுரை சுல்தான் சிக்கந்தர் கானை தோற்கடித்து மதுரையை கைப்பற்றின. சிதைந்து கிடந்த மதுரைப்பேராலயம் மீட்டு கட்டப்பட்டது. குமரிமாவட்டத்தில் ஆரல்வாய்மொழி அருகே ஒரு சிறு ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மீனாட்சியின் சிலை மீண்டும் மதுரைக்குக் கொண்டுசெல்லப்பட்டது

இச்செய்தியைச் சொல்லும் மதுராவிஜயம் என்னும் சம்ஸ்கிருத நூலை குமாரகம்பணனின் மனைவி கங்கம்மா தேவி இயற்றினார். காஞ்சீபுரத்தை வென்று சம்புவராயரை திறைகொடுக்கச் செய்து அங்கே தங்கியிருந்த குமாரகம்பணனை ஒரு விந்தையான பெண் வந்து சந்தித்து அவள் அனாதையாக இருப்பதாகச் சொல்கிறாள். அது மதுரை மீனாட்சிதான். குமாரகம்பணன் அவள் ஆணைப்படி மதுரையை கைப்பற்றி இஸ்லாமிய சுல்தான்களை வென்று மதுரையை மீட்டான்

இந்நூலின் சுவடி குமரிமாவட்டத்தில் பார்த்திபசேகரபுரத்தில் தனியார் சேகரிப்பில் இருந்து 1916ல் என்.ராமஸ்வாமி சாஸ்திரியால் கண்டெடுக்கப்பட்டு அச்சிடப்பட்டது.

மாலிக் காபூரால் மதுரை கைப்பற்றப்பட்டபோது பாண்டிய மன்னர்கள் சிதறி தெற்கே பல இடங்களில் குடியேறினார்கள். கயத்தாறு, தென்காசி, சேரன்மாதேவி, களக்காடு, வள்ளியூர் ஆகிய ஊர்களில் அவர்களின் குடிகள் அமைந்தன. அங்கே அவர்கள் சிற்றரசர்களாக ஆட்சிசெலுத்தினர்

குமாரகம்பணன் ஆர்க்காடு ஆட்சியாளரான சம்புவராயரிடம் மதுரையின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான். பின்னர் பாண்டிய வம்சாவளியினரிடமே மதுரை ஒப்படைக்கப்பட்டது. அவர்களில் பலர் விஜயநகருக்குக் கப்பம் கட்டி மதுரையை ஆட்சிசெய்தனர்.

1528ல் மதுரையை ஆண்டசந்திரசேகர பாண்டியனை சோழநாட்டை ஆண்ட வீரசேகர சோழன் என்பவன் தாக்கி மதுரையை பிடித்துக்கொண்டான். சந்திரசேகர பாண்டியனுக்கு உதவ விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஒரு படையை அனுப்பினார். அப்படையை கொண்டுவந்தவன் நாகமநாயக்கன். அவன் மதுரையை கைப்பற்றி தானே அரசன் என அறிவித்துக்கொண்டான்

நாகமநாயக்கனை வெல்ல அவன் மகன் விஸ்வநாத நாயக்கனை அனுப்பினார் கிருஷ்ணதேவராயர். கிருஷ்ணதேவராயரின் அணுக்கமான படைத்தளபதியாக இருந்தான் விஸ்வநாத நாயக்கன். அவன் தந்தையை வென்று சிறைப்பிடித்தான். அந்த விசுவாசத்துக்குப் பரிசாக கிருஷ்ணதேவராயர் மதுரையின் ஆட்சியுரிமையை அளித்தார்.

இது. 1529ல் விஸ்வநாத  நாயக்கர் மதுரையில் அரசமைத்தார். அவருடைய அணுக்கமான படைத்தலைவர் அரியநாத முதலியார் அடுத்த ஐந்தாண்டுகளில் கயத்தாறு, தென்காசி பாண்டியர்களை வென்று முழுப்பாண்டியநாட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். நாடு பல பாளையங்களாக பிரிக்கப்பட்டது. பாளையக்காரர்களின் ஆட்சி தொடங்கியது

உலகுடையபெருமாள்கதைப்பாடலில் நாயக்கர், வடுகர் போன்ற சொற்கள் இல்லை. பாளையக்காரர்கள் பற்றிய குறிப்பும் இல்லை. ஆகவே இந்தக்கதையின் காலம் 1528க்கு முன்பு என்று ஊகிக்கலாம். குட்டி அலி கொலைசெய்யப்பட்டது அப்போதாக இருக்கலாம். அல்லது பின்னர் நிகழ்ந்த செய்தி அக்கதைக்குள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம்.

விஸ்வநாதநாயக்கரின் ஆட்சிக்கு முன் மதுரையை ஆட்சிசெய்த சந்திரசேகரபாண்டியனையே மதுரை ஆட்சியாளன் என்று இந்நூல் சொல்கிறது என ஊகிக்கலாம். மதுரையை சுல்தான்கள் கைப்பற்றிக்கொண்டபோது தெற்கே சிதறிவந்த அரசகுடியினரில் ஓர் ஆட்சியாளரின் கதையாக இது இருக்கலாம்.

1378 முதல் 1528வரையிலான தென்னக வரலாறு இன்னும் எந்தச் சுவடுகளும் அற்ற ஒன்றாகவே இருக்கிறது. அந்த நூற்றைம்பது ஆண்டுகளில் மதுரையில் வெவ்வேறு பாண்டியர்கள் விஜயநகருக்குக் கப்பம் கட்டி ஆட்சி செய்தார்கள். பாண்டியநிலம் எங்கும் பல சிற்றரசர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் சுதந்திரமானவர்களாகவும் ஒருவருக்கொருவர் போரிடுபவர்களாகவும் இருந்தனர். மதுரையுடனும் அவர்கள் போரிட்டனர். அச்சூழலில் நிகழ்ந்த கதை இது என படுகிறது

இந்த ஆட்சியாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு மதுரை பாண்டியர்களின் அரசகுடித் தொடர்பு இருந்தது. அது பெண் எடுத்து வந்ததாகவோ, குடிவழித்தொடர்பாகவோ, தாயாதிமுறையாகவோ இருந்தது. அனைவருமே பாண்டியர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். பின்னாளில் அரியநாத முதலியார் கயத்தாறின் பஞ்சவழுதிகள் உள்ளிட்ட பல பாண்டியர்களை வென்றிருக்கிறார். தென்காசி, களக்காடு பாண்டியர்களின் ஆட்சியை அவர்தான் அழித்தார். கயத்தாறு பாண்டியர்களில் வெட்டும்பெருமாள் போன்று சிலருடைய பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தென்காசி பாண்டியர்களில் அதிவீரராம பாண்டியன் போன்ற புலமைகொண்ட சிற்றரசர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரின் கதை இது.

உலகுடையபெருமாள் கதை பெரும்பாலும் குமரிமண்ணிலேயே நிகழ்கிறது. உலகுடையபெருமாளைப் பெற அவன் அன்னை பொன்னருவி ஆரியங்காவிலுள்ள சாஸ்தாவை தவம்செய்கிறாள். நாகர்கோயில் மறவன்குடியிருப்பு முதல் நெல்லை நாலுமாவடி , குரும்பூர் வரையிலான நிலப்பகுதிகளிலேயே உலகுடையபெருமாள் கோயில்கள் உள்ளன. இவை தம்புரான் கோயில்கள் என்று என்றும் சொல்லப்படுகின்றன. பாண்டிய அரசகுடியில் ஒரு கிளையான வள்ளியூர் பாண்டியர் குடியைச் சேர்ந்தவர்கள் உலகுடையபெருமாள்ளின் குலத்தவர் என்று சொல்லமுடியும்.

நெல்லைப்பகுதியில் சரியகுலச் சாமி கதை என இன்னொரு பாடல் உள்ளது. அது உலகுடையபெருமாள் கதைக்கு இணையானது. சரியகுலப்பெருமாள் உலகுடையப்பெருமாளின் தம்பி. மதுரைப்போரில் உலகுடையப்பெருமாளுடன் உயிர்துறந்தவர். இவரைப்பற்றிய பாடல் வில்லுப்பாட்டாக நெடுங்காலம் இருந்துள்ளது. காவியப்பண்புகள் ஏதுமற்ற நாட்டார்ப்பாடல்

வீரன் சரிய குலநயினார்  மெய்விளங்கும் காவியத்தை
பாடும் மெந்தன்று நன்பியந்தன்  பெருமாள் சொன்ன சொல்படியே
பண்பினுடன் பொன்னணஞ்சவனு

என்று அப்பாடலில் அதை எழுதியவர் பெயர் பொன்னணைஞவன் என்று சொல்லப்படுகிறது. சரியகுல நயினார் குரும்பூரில் பாதகரைசாமி என அழைக்கப்படுகிறார்.17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரியகுலநயினார் வில்லுப்பாட்டு முழுக்கமுழுக்க நாடார்குலத்தின் பெருமையையும், அவர்கள் ஆட்சிசெய்த நிலங்களையும் சொல்கிறது.

உலகுடையபெருமாள் காவியத்தை மிகைசொல்லும் ஒரு காவியமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். வரலாற்றுச்செய்திகளை எழுதப்பட்ட வரலாற்றில் பொருத்தி ஆராயவேண்டும். எல்லா காவியங்களையும்போல இது வரலாறும் கனவும் கலந்துறையும் ஒரு மொழிப்பரப்பு.

ஒரு மீனவ மன்னனின் புகழ்
எழுத்து தொடாக் காவியம்
நகர்நடுவே நடுக்காடு
முந்தைய கட்டுரைகோவையில் வெண்முரசு
அடுத்த கட்டுரைநீலம் மலர்கள்