கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
இந்தக்கதைகள் மேலும் மேலும் வந்து குவிந்துகொண்டே இருப்பதனால் உண்மையில் எல்லா கதைகளையும் முழுசாக வாசித்தோமா என்றே சந்தேகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். ஒரு கதைக்குள் எப்போதுமே பல அடுக்குகள் இருக்கின்றன. அவற்றை வாசிப்பதெல்லாம் மிகப்பெரிய நுண்ணுணர்வு தேவையாகும் இடங்கள்.
ஆனால் வெறும் கட்சியரசியலுக்கு அப்பால் ஒன்றுமே வாசிக்கமுடியாதவர்கள் எல்லாம் ‘இந்தக்கதையை எப்படி வாசிக்கவேண்டும்’ என்று தன்னம்பிக்கையாக வகுப்பெடுப்பதைப் பார்க்கையில் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்தவகை அசடுகள் உலகம் எங்கும் இருக்கும். ஆனால் இந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டும்தான் வரும் என்று நினைக்கிறேன். முன்பு இந்தக் கதைகளை எல்லாரும் வாசிக்கவேண்டும் என்று நினைப்பேன். இப்போது தகுதியற்றவர்கள் வாசிக்காமலிருப்பதே நல்லது என்ற எண்ணம் வருகிறது. அவர்கள் வாசிப்புக்கு மிகப்பெரிய தடைகளை உண்டுபண்ணிவிடுகிறார்கள். பத்துலட்சம் காலடிகளுக்கு இந்தக் கூட்டம் எழுதிய கேனத்தனமான ‘ஆய்வுகளை’ வாசித்தபோது இவர்கள் உருவாக்கும் அழிவு சாதாரணமல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது
ஆபகந்தி கதையை பலகோணங்களில் வாசித்தேன். ஒன்று தொன்மங்களில் ஏன் லட்சுமியும் மூத்தவளும் சேர்ந்தே இருக்கிறார்கள்? ஏன் பாற்கடலில் மூத்தவள் முதலில் வந்தாள்? அதை நம் தியானத்துக்கான உருவகமாகச் சொல்வார்கள். நம் மனதின் ஆழங்களுக்கு நாம் போனால் அங்கே மூதேவியைத்தான் காண்போம். அழுக்கும் நஞ்சும்தான் வரும். அதுதான் தூமகந்தி. அதை ஜெயிப்பவர்களுக்குத்தான் ஆபகந்தி அமுதத்துடன் வருவாள். கட்டைவிரலால் அழுத்தி அமுதத்துடன் மேலே எழவேண்டும்
அதற்கு முடியாவிட்டால் தோண்டாதே என்று சித்தர் சொல்கிறார். அது அப்பாவுக்கும் தெரியும். ஆகவே அவரால் மேற்கொண்டு தோண்ட முடியவில்லை. ஆனால் அம்மா தோண்டுகிறாள். அமுது வருகிறது. ஏனென்றால் ஏற்கனவே அவள் மனசில் அமுது ஊறிவிட்டது. சித்தருக்கு அவள் பிச்சையிடும்போதே அது அவருக்கு தெரிகிறது. தன் பிள்ளைகளுக்காக தோண்டுகிறாள். மூதேவி வந்தால் அதை தன் பிள்ளைகளுக்காக தானே ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிட்டாள்
யோகிக்கு கிடைக்காதது அம்மாவுக்கு கிடைக்கிறது. ஏனென்றால் அம்மா செய்வதும் ஒரு தவம்தான். அவள் தன் அமுதகலத்துடன் அவளுக்குள் இருந்து எழுந்து வருகிறாள்
அர்விந்த்
***
அன்புள்ள ஜெ
ஆபகந்தி கதை பல வகைகளில் மிக முக்கியமானது. அந்த கதை இறுதியாக அகத்தே அகழ்வதை குறித்து முடிகிறது. இன்ட்ரோவர்ட்டாக இருப்பவர்களுக்கு ஏற்படும் அகச் சிக்கல் இது. தோண்டப்படுவது அனைத்தும் புதையலாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் பல சமயம் உணர்வதில்லை. அதற்கு நிகராக தோண்டியதற்குள் தாங்களே புதைவுண்டு போவதற்கும் சாத்தியமுன்டு. உண்மையில் ஒன்றில்லாமல் மற்றது இல்லை.
இன்னொரு வகையில் இதை வெண்முரசில் இளைய யாதவரின் மறைவுடனும் இணைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது. அலங்கார முழுமையில் ஒரு திருஷ்டிப் பொட்டு மூத்தவள். கதை சொல்லியின் தந்தையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாத பித்தனாகவே வருகிறார் என்றாலும் அவர் மனைவி அவரது செயலை முழுமையாக புரிந்து கொண்டவளாகவே இருக்கிறாள். கடைசியில் கைவிடப்பட்ட உச்ச அவலத்தில் புதையலை கண்டடைகிறாள்.
தியானத்தில் முற்றான இருளை அடைந்தவர்கள் உண்டு ஒளியை நம்பிப் போனவர்கள் அவர்கள் ஒரு நடுக்கத்துடன் திரும்பி வந்து கடும் கசப்பு நிறைந்தவர்களாக மாறி அனைவரையும் வசைபாடத் துவங்கி விடுகிறார்கள் யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி போல. இரண்டைக் குறித்தும் புரிதலை அடைபவர்கள் விடுதலை அடைகிறார்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் போல
சிவக்குமார் ஹரி
சென்னை
***

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நோன்புகளில் ஆமை போல தன்னை ஆக்கிக்கொள்வது கூர்மவிரதம் என்று சொல்லப்படுகிறது. ஐந்து புலன்களையும் உள்ளிழுத்துக்கொள்வது அது. முற்றாக சமூகத்தால் ஒருக்கப்படுபவர்கள் அந்த தனிமையையே ஒரு ஓடாக ஆக்கிக்கொண்டு தனக்குள் ஒடுங்கிவிடுவதை நான் நீண்டகாலமாகவே பார்த்திருக்கிறேன். இங்கே சென்னையில் அப்படி நிறையபேரை பார்க்கமுடியும். ஊரிலிருந்து விவசாயம் பொய்த்து கடன் ஏறி அவமானப்பட்டு ஓடிவந்திருப்பார்கள். பெருமபாலும் வயதானவர்கள். அப்படி இரு இறுக்கம் அவர்களிடமிருக்கும். ஆமையோடுபோல. அந்த அமைதிக்குள் வாழ்வார்கள்.நம் அப்பாட்மெண்டிலேயே வாட்ச்மேனாக இருபது வருஷம் இருப்பார்கள். நமக்கு அவர்களை எவர் என்றே தெரியாமலும் இருக்கும்.
அது ஒரு போராட்ட முறை. தன்மேல் எடை ஏறி ஏறி வர அப்படியே இறுகிவிடுவதுதானே இது? நான் உங்கள் அறம் தொகுதியில் உள்ள தாயார்பாதம் என்ற கதையை நினைத்துக்கொண்டேன். அந்தப்பாட்டியை இந்தப்பாட்டி நினைவுபடுத்துகிறாள். அந்தப்பாட்டி பிராமணப்பெண். இந்தப்பாட்டி தாழ்த்தப்பட்டவர். ஆனால் விதியும் வாழ்க்கையும் என்னவோ ஒன்றுதான்
என்.சுப்ரமணியம்
***
அன்பு ஜெ,
ஆமை என் வாழ்க்கை பயணத்தின் கதை எனக் கண்டடைந்தேன் ஜெ. ஒரு வகையில் ஓர் உயர்ந்த இலக்கை நிர்ணயித்து முயற்சித்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆமை மனிதர்களின் கதை தான் இது. அறம் சிறுகதைத் தொகுப்பில் ”நூறு நாற்காலிகள்” என்ற கதையில் வரும் காப்பான் IAS ஐ நினைத்துக் கொண்டேன். அவரும் ஒரு ஆமை மனிதர் தானே. எத்துனை துன்பங்களை, பசியை, வசவுகளை, கேளி கிண்டல்களை, துரோகத்தை, தனிமையைக் கடந்து ஒரு மனிதர் தன் இலக்கை அடைய வேண்டியிருக்கிறது. அது வரை அவன்/ள் கொரம்பைத் துறவறம் செய்ய வேண்டுமே. நீண்ட காலப் பயணத்தில், உறவுகளை விட்டே தூரம் சென்று தன்னந்தனி ஆமையாய் பயணிக்க வேண்டுமே.
“ஒரு கொரம்பை இப்டி ஒரு மாளிகையாட்டு வளரமுடியும்டே. ஆமைக்க சக்தி அதாக்கும் மக்கா, அதுக்கு வேகமில்லை , ஆனா விட்டுக்குடுக்காத பிடிவாதம் உண்டு” எனும் போது ஊக்கத்தின் உச்சிப்புள்ளியினின்று இரு கண்ணீர்த் துளிகளை கண்கள் சிந்திக் கொண்டது. எத்துனை அற்புதமான ஊக்கி வரிகளை தந்திருக்கிறீர்கள் ஜெ. ஒவ்வொரு காலகட்டந்தோரும் ஒவ்வொரு ஊக்கி வரிகள் எனக்கு இருந்திருக்கின்றன. அவற்றை கரைத்துக் கரைத்து என் அந்த கால கட்ட இலக்கை அடைந்திருக்கிறேன். இன்று, இப்பொழுதைய நிலைக்கான ஊக்கி வரியாக உங்கள் இந்த வரிகளை எடுத்துக் கொண்டேன் ஜெ. நன்றி.
நான் இப்பொழுது திருவள்ளுவர் சொன்ன ”ஆமை” குறளை நினைத்துப் பார்க்கிறேன். “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்…” இந்தக் குறளில் நான் புலனின்பத்தை அடக்க வேண்டும் என்ற செய்தி்யை மட்டுமே அடைந்திருந்தேன். பகுத்தறிவு மனது ஏழுபிறவி என்பதை தள்ளி வைத்திருந்தது. இன்றோ, கொரம்பையம்மாவைக் கொண்டு உற்றுப் பார்க்கிறேன். அது வேறோர் அர்த்தத்தைக் கொடுத்தது. கொரம்பையைக் கூடாக்கி வாழும் துறவற நிலை தலைமுறை கடந்தல்லவா பயனளித்திருக்கிறது!
அதனால் தானோ விவேகானந்தரும் “ஒரு போதும் முயற்சி செய்யாதவனை விட போராடுபவர் சிறந்தவர்” என்று விளம்பியிருக்கிறார்! இலக்கை நோக்கி தீவிரமாக செயல்படுபவர்கள் வெற்றியை அடையாவிடினும், அந்த முயற்சி அளப்பறியது. அது அடுத்த தலைமுறை வரை பயனைத் தரக் கூடியது. சிறிய இலக்குகள் விரைவில் பயன் தரவல்லன. ஆனால் ஓர் மிகப்பெரிய இலக்கிற்கு நீண்ட பயணமும் மிகப்பெரிய துன்பங்களும் நிகழ்ந்தே தீரும்.
நாகப்பன் முதலாளி, “எனக்கோ எனக்க அப்பன் பாட்டனுக்கோ எந்த சாமியும் எள்ளுமுனை அளவுக்குக் கூட குடுக்கல்ல…” எனும் போதும், ”இனியிப்ப ஏதாவது சாமி வந்து என்ன வரம் வேணும்னு கேட்டாக்கூட போடா மயிராண்டின்னாக்கும் சொல்லுவேன்… போ போ…” எனும்போதான நிலையை ஒரு முறை நானும் உணர்ந்ததுண்டு. ஒருவகையில் அவர் சொல்வது “முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்பதைத் தான். அவரை, அவர் உணர்வுகளைப் புரிய முடிகிறது. அது உண்மையுங் கூட.
ஆனால் இந்த உலகத்தில் ”நான்” அடையும் வெற்றி என்பது என்னை மட்டுமே சார்ந்ததில்லை. நான், என் அப்பா/ம்மா, அவர்களுக்கு முன்னுள்ள தலைமுறை தோறும் செய்த ஆமை முயற்சியாலே இன்று என்னால் பாயனடைய முடிகிறது. என் பூட்டன் காலத்தில் நெல்லுச் சோறே இலக்காயிருந்தது. அவருடைய பட்டப் பெயரே கூழ்பானை வேலாண்டி என்பார்களாம். அதனினின்று எத்துனை தொலைவு வேறுபட்டது என்னுடைய கனவு. கலைகளை இரசித்து இன்புறவுங்கூட தலைமுறைகள் தாண்ட வேண்டியிருக்கிறதே. (இன்னேரம் நான் உங்கள் தேனீ கதையில் வரும் சிண்முகத்தின் அப்பாவை நினைவு கூர்கிறேன்). இந்த புரிதல் நாகப்பனை விட அனக்கன் தரகனிடம் இருந்தது. அந்தப் புரிதல் உள்ள ஒருவர் கொரம்பையம்மாவைப் பற்றி சொன்னதால் தான் அது அத்துனை உணர்வுப்பூர்வமாக இருந்தது. யார் யாரைப் பற்றி சொல்ல வேண்டும் என்று ஒன்று உள்ளதே! இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும், விடயங்களும் எல்லாருக்கும் புரிவதில்லை. புரிய வேண்டுமென்பதில்லை. புரிவதற்காக அவையும் பிரயத்தனப்படுவதில்லை. அங்ஙனம் கொரம்பையம்மா யாவருக்குமானவள் அல்லவே. அவள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் யாரும் புரிந்து கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ வேண்டுமென்பதில்லை. அவள் ஆமை மனிதர்களுக்கானவள். அவள் ஓர் ஊக்கி. என் இந்த நிலைக்கான ஊக்கியாக அவளை அணைத்துக் கொண்டேன். ”ஆமைக்க சக்தி அதாக்கும்!”
அன்புடன்
இரம்யா.
***