கரு, இணைவு- கடிதங்கள்

ஷம்பாலா -ரோரிச்

கரு [குறுநாவல்]- பகுதி 2

கரு [குறுநாவல்]- பகுதி 1

அன்புள்ள ஜெ

கரு நாவல் இன்று மறைந்துபோய்விட்ட ஒரு உலகத்தை அறிமுகம் செய்கிறது. எண்பதுகளில் நான் மதுரை தியோசஃபிக்கல் நூலகத்தில் நிறைய வாசிப்பேன். நான் அப்போது பார்த்த பலநூறு புத்தகங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அந்தப்புத்தகங்கள் இன்றைக்கு அழிந்திருக்கலாம். அவையெல்லாமே தாந்திரீகம், யோகம், மறைச்சடங்குகள் ஆகியவற்றைச் சார்ந்தவை. அவை இன்றைக்கு பொருத்தமில்லாதவையாகக் கூட இருக்கின்றன. ஆனால் மர்மங்களையும் மறைக்கப்பட்ட ஞானத்தையும் தேடி அலைந்த மனிதர்களால் ஆன ஒரு பெரிய காலகட்டம் இங்கே இருந்திருக்கிறது

John Woodroffe

Sarat Chandra Das

Agehananda Bharati

 

பௌத்த மறைஞானம், இந்திய தாந்த்ரீக ஞானம் ஆகியவற்றில் அனைவருக்குமே ஆர்வம் இருந்திருக்கிறது. காந்திக்கு ஆர்வம் இருந்தது. அம்பேத்கரின் பௌத்தமும் அவருடைய தம்மமும் நூலை வாசிக்கையில் அவருக்கு வஜ்ராயனம் மீது ஆர்வம் இருந்தது தெரிகிறது. அயோத்திதாசர் மறைமுகச் சடங்குகள் பலவற்றைச் செய்திருக்கிறார்.

அந்தக் காலகட்டமே கதையில் முக்தானந்தர் சொல்வதுபோல வசீகரமான மர்மங்களால் ஆனது. வாழ்க்கைமுழுக்க அதை தேடி அலைய முடியும். இந்த யுகம் அந்த மர்மங்களை கடந்துவிட்டது. இது கூகிள் யுகம். அந்த காலகட்டத்தினர் நேர்வாழ்க்கைக்குச் சமானமாகவே கனவிலும் வாழ்ந்தவர்கள்

கரு அதன் மெய்ஞானம் அது சார்ந்த உருவகம் ஆகியவற்றை கடந்து இந்த ஒரு கடந்தகாலத்தின் முழுசான சித்திரத்தையும் அளிக்கிறது. ஆகவேதான் அந்த யுகத்தைச் சேர்ந்த எல்லா பெயரும் எப்படியோ உள்ளே வந்துவிடவேண்டும் என்று கதையில் முயன்றிருக்கிறீர்கள். ஆர்தர் ஆவலோன், சரத்சந்திர தாஸ், அகேகானந்த பாரதி எல்லாருமே அப்படித்தான் உள்ளே வந்திருக்கிறார்கள்

சத்யமூர்த்தி

***

நிக்கோலஸ் ரோரிச்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் கரு நாவலை இரண்டு மூன்று முறை படித்த பிறகுதான் அதன் வடிவமே ஒரு மாதிரி புரிந்தது. கதையில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரியான கரு மனதில் முளைக்கிறது. அது எப்படி அவர்களை திபெத்தை நோக்கி பயணிக்க வைக்கிறது என்பதே முதல் அடுக்கு.

ஆன்னி கிறிஸ்துவுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். திபெத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக அவர் தேவைப்படுவோர் என்று ஆணித்தரமாக நம்புகிறார். அதற்காக உயிரை பணயம் வைத்து மலையில் ஏற சித்தமாக இருக்கிறார். அவருக்குள் கருக் கொண்டிருப்பது முழு அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை.

சூசன்னா தம்பதியினர் மிஷனரிகளில் இருந்தாலும, அவள் பயணிப்பது ஒரு சாகசத்துக்கே. கைக்குழந்தையுடன் மலைப்பயணம் என்பது இந்த நாட்களிலேயே நினைத்துப் பார்க்க இயலாதது. நூறு வருடங்களுக்கு முன்பு ஆபத்தான மலைகளில் குதிரையில் பயணிப்பது என்பது மிகச் சூரத் தனமானது. அவரின் கரு தன்னுடைய எல்லைகளை தானே முன்சென்று கடப்பது. அவரின் கணவர் அதற்கு தூண்டுதலாக இருக்கிறார்.

அடுத்து வருவது ஆடம் மின் ஷம்பாலா நோக்கிய பயணம். அதற்குக் கருவாக இருப்பது அவன் அப்பா டோனாவூர் இல் இருந்து காணாமல் சென்றது. அதிலிருந்து அலைக்கழிப்பு களுடன் உள்ளான். அவனின் பயணம் ஆரம்பிக்கும் பொழுது காலம் என்னும் நதி புரண்டு ஓடி உள்ளது. முன்னோர்களின் உரைகளும்/குறிப்புகளும் ஓரளவுக்கு தான் அவனுக்கு உதவுகின்றன.

ஹெலனா ரோரிச் ஷம்பாலா செல்ல முயன்றது , அறிவதற்காக. தியாசபிகல் சொசைட்டி க்கு உரித்தான ஒரு அறிவுபூர்வமான தன்மை. கலைகளையும் அறிவியலையும் இணைக்கும் பார்வை.

நாவலின் அடுத்த அடுக்கு இவர்கள் எல்லோரையும் இணைக்கும்  புள்ளி. தெரியாதவை களெல்லாம் கொக்கி களாக மாறி மற்றொன்றுடன் கோர்ப்பது என்று ஆடம் சொல்கி றான். இதில் ஆடம் தவிர மற்ற மூவரும் வரலாற்று ஆளுமைகள். அவர்களின் பெயர்கள் காலம் என்னும் நதியில் அடித்துச் செல்லாமல் நிலையாக நிற்க பேறு பெற்றவர்கள்.

நற்றுணை கதையில் அம்மணி தங்கச்சிக்கு துணையாக வந்த யக்ஷி போல், இந்நாவலில் சார்லஸ் என்கின்ற பிரம்மபுத்திரன்  இப் பெண்மணிகள் கிராஸ் ரோட்டில் நிற்கும்பொழுது இவர்களுக்கு வழிகாட்டுகிறான். நால்வரையும் நாலு யுகத்தின் பிரதிநிதிகள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அவனைப் பற்றி இன்னும் யோசிப்பது என்பது, சாவித் துவாரத்தின் வழியாக உலகைப் பார்த்து துவாரத்தின் அளவை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிகொண்டே போவதற்கு சமானம். மேஜர் டக்லஸ் வில்லியம் போல, வெறும் பகுத்தறிவு கண்களால் பார்த்தல் ஸ்டரியோஸ்காபிக் விஷன் கிடைக்காதது போல.

நாவலின் அடுத்த தளம் தொடுவது ஷம்பாலா என்றால் என்ன? எப்படி அதை அடைவது. ஒரு சிலருக்கு அது முந்தைய யுகத்தின் எச்சம். சிலருக்கு வினை/மனம் இன்மையின் எச்சம்

ஒவ்வொருவரின் அகப்பயணம் எவ்வாறு முடிவடைகிறது?  முக்தா மற்றும் ஆடம்இன் பேச்சுகளில் ஆடமே வேதாந்தச் சொற்களை உரைக்கிறான். முக்தா கிட்டத்தட்ட திபெத்திய புத்தபிக்கு மாதிரி உள்ளார்.

“நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது

இந்த நாவலில் வரக்கூடிய சாத்தியமுள்ள மற்றொரு வரலாற்று பெண்மணி  அலெக்ஸாண்ட்ரா  டேவிட் நீல் என்ற பிரெஞ்சுப் பெண்மணி. அவரும் தியாசபிகல் சொசைட்டி சேர்ந்தவர்தான்.நான் சிக்கிமில் லா சென் சென்றிருந்தபோது இவரைப் பற்றி கேள்விப்பட்டேன். இதுநாள்வரை இவர்தான் திபெத்திற்கு முதலில் சென்ற வெள்ளைக்கார பெண்மணி என்று நினைத்திருந்தேன்

சில திபெத்திய வரலாற்று நிகழ்ச்சிகளையும் + ஆளுமைகளையும், புனைவுகளும் கலந்து spiritual பயணமாக முன்வைக்கும் நாவல். திரும்பத் திரும்பப் படித்து விரித்துக் கொண்டே போக வேண்டியதுதான். முதலில் படிக்கும் பொழுது  நாவலின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்று யோசித்தேன். உங்களின் நாவல்கள் கண்டிப்பாக விடைகளுடன் முடியாது என்று தெரியும் ஆனால் முத்தா வின் முடிவு மிக அழகான கவித்துவமானது

இந்நாவலில் வரும் சில அறிவுபூர்வமான குறிப்புகள் சுவாரசியமானவை. சுற்றிலும் முற்றாகப் பனி சூழ்ந்திருக்கும் பொழுது ஏற்படும் hallucinations. கண்களில் இருந்து மூளைக்கு செல்லும் போது காட்சி மாற்றும எதுவும் இல்லாததால்

மூளை அதுவாகவே ஏதோ ஒரு ரீல் சுற்ற ஆரம்பிக்கிறது.ஒருமுறை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது பனிச்சறுக்கு விளையாட்டில் ஏன் வெள்ளையர் அல்லாதவர்களால் விளையாட முடிவதில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தோம். பனிச்சறுக்கு gene மற்றவர்களிடம் இல்லை என்று முடித்தோம்.

நீங்கள் இப்பொழுது எழுதும் ஒவ்வொரு கதையிலும் ஒன்று மற்றொன்றை தொட்டுத்தொட்டு தொடங்கி வருகிறது. இந்நாவலின் கரு எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். கூடு(திபெத்திய புத்த மதம்) /நற்றுணை (சாதனை படைக்கும் முதல் பெண்மணிகள்)?

நாவலுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

மீனாட்சி

***

இணைவு [சிறுகதை]

போழ்வு [சிறுகதை]     

அன்புள்ள ஜெ

போழ்வு இணைவு ஆகிய இரு கதைகளையும் இருமுறைக்குமேல் வாசித்தேன். அதிலுள்ள சமகால குறிப்புகளை எல்லாம் கணக்கில்கொண்டு வாசித்தேன். அந்தக்காலகட்டம் பற்றிய வரலாற்று நாவல்களோ கதைகளோ தமிழில் மிககுறைவு. அந்தக்காலகட்டம்- பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றிய காலகட்டம்—தான் நம் வரலாற்றில் மிக முக்கியமானது. நம்முடைய இன்றைய சமூக அமைப்பு அரசியல் அமைப்பு ஆகியவை உருவாகி வந்த காலம் அது.

ஆனால் அதுபற்றிய ஒரு வரலாற்று பிரக்ஞையுடன் நுண்ணுணர்வுடன் எழுத இங்கே எவருமில்லை. ஒரு பெரிய வரலாற்று ஆராய்ச்சிப்பார்வை அதற்குத்தேவை வேறு எவர் ஏழுதமுடியும் என்று யோசித்தால் ஒன்றுமே தோன்றவில்லை

இந்த இரு கதைகளிலும் உள்ள இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவை டிஸ்டன்ஸிங் என்ற வழியை கையாள்கின்றன எங்கோ கேரளத்தில் என்றோ நடந்த கதை என்ற அளவில் வரலாற்றை தூரப்படுத்தி அதன்பின் மிக அருகே உள்ள வரலாற்றை குறிப்புணர்த்திப் பேசுகின்றன

இன்னொன்று இந்தக்கதைகளுக்குள் வரலாற்றின் போக்கு பற்றிய மிகவிரிவான அறிவார்ந்த விவாதம் உள்ளது. சேமர்ஸ் பேசுவதும் சரி முந்தைய கதையில் டாக்டர் பெயின்ஸ் பேசுவதும் சரி அப்படித்தான். ஆனால் அது கதை சொல்லவருவது அல்ல. அப்படி சிலர் மேலோட்டமாக வாசிக்கக் கூடும். அது கதையின் ஒரு சரடுதான். இன்னொரு சரடு சொல்லப்படாமல் வருகிறது. சொல்லப்படுவது நவீனப்பார்வை. சொல்லப்படாதது மரபான பார்வை. அவை இரண்டும் இணைந்து ஒரு முரண்பட்டு கடைசியில் முடிவில் ஒரு குறிப்பு அளிக்கப்படுகிறது. அதுதான் உண்மையில் கதையின் மையம்

ஸ்ரீனிவாசன்

***

அன்பு ஜெயமோகன் ,

நலம் என நம்புகிறேன் . தளத்தில் சமீபத்தில் தாங்கள் எழுதி வெளியாகும் பெரும்பாலான கதைகள் மிக்கவாறும் வரலாறு, மரபு வழிச்செய்திகள், மற்றும் நான் ஏற்கெனவே கேரள செய்தித்தாள்கள் வழி வாசித்த  (*ஓநாயின் மூக்கு) உண்மையான தகவல்களை அடிப்படையாய் கொண்டு  மிகச்சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது . தென் திருவிதாகூரில் பிறந்து வாழ்ந்தவன் என்பதாலும், அதன் சமூக வரலாற்று பின்னணியை பெரும்பாலும் அறிந்தவன் என்ற முறையிலும் உணர்ச்சிபூர்வமாகவே மிக நெருக்கமாக உணர்கிறேன்.

‘போழ்வு’ மற்றும்  ‘இணைவு ‘ இரண்டையுமே இலங்கையில்  ஈழப்பின்னணியின் நினைவின்றி வாசிக்க முடியவில்லை. குறிப்பாய் கொல்லம் போர், தொடர்ந்து தளவாய் வேலுத்தம்பியின் முடிவு, அதற்கான காரணங்கள்  மற்றும்  இக்கதை தங்கள் தளத்தில் வெளியான இந்நாள் எல்லாமாய் சேர்ந்து மனதை அமைதியிழக்க வைத்துவிட்டது . டாக்டர் அலெக் பெய்ன்ஸ் மற்றும் கர்னல் சேமர்ஸ் இருவருக்குமான உரையாடல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது . வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. நன்றி .

மாதவன் பிள்ளை ,

குவைத்.

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–67
அடுத்த கட்டுரைநிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்