‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53

tigஸ்வேதனும் சங்கனும் தலைமைகொண்டு நடத்திய குலாடகுடிப் படை பதின்மூன்று நாட்கள் பயணம் செய்து பீதசிலை என்னும் சிற்றூரில் பாண்டவப் படைப்பெருக்குடன் இணைந்துகொண்டது. நெடுந்தொலைவிலேயே பாண்டவப் படை அங்கு சென்றுகொண்டிருப்பதை ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். “இப்பகுதியினூடாக பாண்டவர்கள் படை நிரந்து சென்ற செய்தியைத்தான் ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்கிறார்கள். இளைய யாதவரையும் அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் விழிகளால் பார்த்ததாக ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்” என்றான் ஒற்றன். உதடுகளில் புன்னகையை காட்டாமல் “அத்தனை பேரும் பார்த்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் பலநாட்கள் இங்கே தங்கிச் சென்றிருக்க வேண்டும்” என்றான்.

ஸ்வேதன் “ஒரு படை சென்றபின் மக்கள் மகிழ்வுரை சொல்வது மிக அரிது” என்றான். ஒற்றன் “முன்னோடிப் படையினர் சிற்பிகளுடனும் ஏவலருடனும் பன்னிரு நாட்களுக்கு முன்னரே வந்து புதர்களை அகற்றியும், மரங்களை முறித்தும், ஓடைகளையும் குழிகளையும் நிரப்பியும், சிற்றாறுகளுக்குமேல் பாலம் அமைத்தும் படைகள் செல்வதற்கான பாதையை அமைத்துள்ளனர். சில இடங்களில் சிற்றில்லங்களும் குடில்களும் அகற்றப்பட்டுள்ளன. நான்கு தேர்கள் இணைந்து செல்லும் அகலம் கொண்ட எட்டு சாலைகள் அவர்களால் உருவாக்கப்பட்டன. அவற்றின்மேல் பலகைகள் பரப்பி வலுவாக்கினர். அதன்பின்னர் படையின் முதற்குரலோர் யானைகளில் வந்து பாண்டவப்படை வருவதாகவும் செல்லும் வழியிலுள்ளோருக்கு எந்தத் தீங்கும் வாரா என்றும் அறிவித்து குடிகள் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகளை அறிவித்தனர்” என்றான்.

“பாண்டவப் படையின் முகப்பு தோன்றி அதன் முடிவு தெரிவதற்கு நான்கு நாட்கள் ஆகியிருக்கின்றன. இங்குள உணவுப்பொருட்கள் அனைத்தையும் பொன்கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். கால்நடைகளையும் ஆடுகளையும் விலைகொண்டிருக்கிறார்கள். படைகள் சென்று மறைந்தபின் சிற்பியரும் பிறருமாக சாலைப்பலகைகளை விலக்கி, பாலங்களைக் கழற்றி கொண்டுசென்றனர். இவர்கள் அதற்கிணையான பெரும்படை எதையும் பார்த்ததில்லை என்பதனால் அதை விவரிக்கும் சொற்களின்றி தவிக்கிறார்கள். அனைவருமே கங்கையில் பெருவெள்ளம் எழுந்ததுபோல என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஒரு பூசகன் மட்டும் முன்பு விண்ணளந்த பெருமான் பாதாளத்திலிருந்து வாசுகியை எடுத்தபோது வாலும் தலையும் முடிவிலியில் இருக்க முடிவிலாத மடிப்புகளாக அவன் உடல் எழுந்துகொண்டிருந்ததுபோல என்று சொன்னான்” என்று ஒற்றன் சொன்னான்.

ஸ்வேதன் புன்னகைத்தான். “இளவரசே, பாண்டவப் படை நாம் எண்ணுவதைவிட பலமடங்கு பெரிது. நூறு இணைநிரைகளாக அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறது அது. ஒன்றன்பின் ஒன்றென நூறு நகர்களை அடுக்கியதுபோல பாடி அமைகிறது” என்று இன்னொரு ஒற்றன் சொன்னான். “படையைவிட மும்மடங்கு நீளம்கொண்டது அதன் வால். ஏவலரும் பணியாளரும் தொடர்கிறார்கள். களஞ்சியங்கள் வண்டிகளில் செல்கின்றன.” ஸ்வேதன் “நாம் முடிந்தவரை விரைந்து சென்று சேர்வோம். இங்கிருந்து எத்தனை தொலைவில் அவர்கள் படை உள்ளது?” என்றான். “நாற்பது கல் தொலைவில் இன்று தங்கியிருக்கிறார்கள். நாம் விரைந்தால் நாளையே சென்றடைய முடியும். பெரும்படையாதலால் ஒவ்வொரு நாளும் கிளம்புவதும் தங்குவதும் நெடும்பொழுது எடுத்துக்கொண்டே நிகழ்கிறது. விலங்குகளுக்கு நீர்காட்டி புரவிகளை உடல் உருவிவிட்டு கூடாரங்களைக் கட்டி அந்தியை அமைப்பதற்குள் இரவு எழுந்துவிடுகிறது” என்றான் ஒற்றன்.

ஸ்வேதன் தன் படைவீரர்களை நோக்கி “வீரர்களே, மலையாறு கங்கையை அடைவதைப்போல நாம் இலக்கை அணுகிவிட்டிருக்கிறோம். அணுகுந்தோறும் விரைவெழ வேண்டுமென்பது நீரின் நெறி. நமக்கும் அவ்வாறே. கிளம்புக!” என்று அறைகூவினான். அவர்கள் குறுங்காடுகளை வகுந்தபடி விரைந்தனர். நடுவே சேற்றுப் பரப்புகளிலும் சிற்றோடைகளிலும் பலகைகளை நீட்டி அவற்றின்மேல் புரவிகளையும் வண்டிகளையும் கொண்டு சென்று விரைவை கூட்டினர். பெருவெள்ளத் தடம்போல படை சென்ற பாதையை விழிகளாலே பார்க்க முடிந்தது. யானைகளும் வண்டிகளும் போன சுவடுகள் நெடுங்காலமாக அங்கிருக்கும் சாலைகள்போல் தெரிந்தன. அடுக்கடுக்காக பலநூறு சாலைகள் என்ற விழிமயக்கேற்பட்டது.

ஒற்றன் “வண்டிகள் எட்டு இணைநிரைகளாக சென்றன. வண்டித்தடத்திலேயே யானைகளையும் கொண்டு சென்றனர். காலாட்படைகள் எட்டுபேர் கொண்ட சிறு குழுக்கள் நூறு நிரைகளாக சென்றன. படைகளின் அகலம் மட்டும் ஒரு நாழிகைப் பொழுதிருந்தது” என்றான். சங்கன் ஒவ்வொரு சொல்லாலும் உணர்வெழுச்சி கொண்டான். “எண்ணி நோக்கவே இயலவில்லை, மூத்தவரே. எண்ணுந்தோறும் உளவிழி மலைப்பு கொள்கிறது. பாரதவர்ஷத்தின் வரலாற்றில் எப்போதேனும் இத்தனை பெருந்திரள் படையென எழுந்ததுண்டா?” என்றான். ஸ்வேதன் “பண்டு விருத்திரனை வெல்ல தேவர்படை இவ்வாறு எழுந்ததென்று நூல்கள் சொல்கின்றன. தென்னிலங்கை வேந்தனை வெல்ல ராமன் கொண்டு சென்ற படையை தொல்காவியம் இவ்வாறு விரிக்கிறது. அவையனைத்தும் அணியுரைகளாகவே எஞ்சுகின்றன. மெய்யாகவே அப்படியொரு பெரும்படையை பார்க்க முடியுமென்று எண்ணியதே இல்லை” என்றான்.

சங்கன் ஒவ்வொரு அடிக்கும் பொறுமையிழந்து பின்னால் திரும்பிப்பார்த்து “விரைந்து வாருங்கள்! விரைக! விரைக!” என்று கூவினான். “படைகள் விரைவதற்கு ஓர் எல்லையுள்ளது, இளையோனே. சீரான விரைவில் செல்லும்போதே நெடுந்தொலைவை அடைய முடியும். நிலம் கருதாது விரைவு கொண்டு புரவிகளோ வண்டிகளோ சேற்றில் சிக்குவார்களென்றால் பொழுது வீணாகும்” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆனால் இவர்கள் வேண்டுமென்றே பிந்துகிறார்கள். குறுங்காடுகளை கண்டால் பக்கவாட்டில் பரவி கனிகளையும் சிற்றுயிர்களையும் கொண்டுவருகிறார்கள். தங்களுக்கு உணவில்லாமல் ஆகிவிடுமென்ற அச்சம் இவர்களை வாட்டுகிறது. எளிய மலைவேடர்கள்!” என்று சங்கன் சொன்னான். “படைகளுக்கு ஓர் கட்டுப்பாடு உண்டு. அக்கட்டுப்பாடு நிலைநிற்கவேண்டுமெனில் மிகச் சிறிய கட்டுப்பாடின்மையை நாம் ஒப்பியாகவேண்டும்” என்றான் ஸ்வேதன்.

பீதசிலையை அடையுந்தோறும் படைமுழக்கம் பேரொலியாக கேட்கத் தொடங்கியது. முதலில் அங்கு காற்று மரங்களை சுழற்றிச் செல்லும் ஓசை என்று தோன்றியது. சங்கன் திரும்பி ஸ்வேதனிடம் “அது என்ன ஓசை? அங்கு ஒரு பெருநகரம் இருப்பதுபோல” என்ற கணமே புரிந்துகொண்டு “அதுதான் படைகளின் ஓசை! ஆம், படைகளின் ஓசையேதான்!” என்றான். “இத்தனை தொலைவில் இவ்வளவு ஓசை கேட்கிறதென்றால் அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! மூத்தவரே, அங்கு என்ன நிகழ்கிறது?” என்றான். “நாம் இன்னும் சில நாழிகைகளில் அதை சென்று அடைவோம். அதுவரை சொற்களை தேக்கிவைத்துக்கொள்” என்றான் ஸ்வேதன் புன்னகையுடன். “நாம் அந்திக்குள் சென்றுவிடவேண்டும், மூத்தவரே. இப்போதே வெயில் தாழத்தொடங்கிவிட்டது” என்றான் சங்கன்.

சங்கன் தன் புரவியை குதிமுள்ளால் குத்த அது கனைத்தபடி பாய்ந்தோடியது. சிறுகற்கள் பறக்க மரக்கிளைகள் அறைபட்டு வளைந்துவீச முன்னால் நெடுந்தொலைவு சென்று நின்று திரும்பி “விரைக! விரைக!” என்று கைவீசி கூச்சலிட்டான். ஸ்வேதன் புன்னகையுடன் புரவியை பெருநடையில் நடக்கவிட்டான். படை ஒழுகி வந்துகொண்டிருப்பதை அங்கிருந்து பார்த்தபின் பொறுமையிழந்து புரவியைத் திருப்பி மீண்டும் வந்தடைந்து “நாம் ஊர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம். அங்கிருந்து பார்க்கையில் தெரிகிறது, மிக மெதுவாக ஊர்ந்து செல்கிறோம். மழைநீர் வயலை நனைத்து ஊறிப்பரவுவதுபோல் வருகின்றன நம் படைகள்” என்றான்.

“நாம் கிளம்பி பதினாறு நாட்கள் ஆகின்றன, இளையோனே. இத்தனை நாட்களில் எப்படி முன்னால் செல்வதென்று நமது படைகள் கற்றுக்கொண்டிருக்கும். புரவிக்கால்களும் பழகியிருக்கும். இதுவே அவற்றிற்கு உகந்த சிறந்த விரைவு. இதற்குமேல் விரைவை உருவாக்க வேண்டியதில்லை” என்றான் ஸ்வேதன். “நான் மட்டும் முன்னால் செல்கிறேன். நமது படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று இளைய பாண்டவரிடம் சொல்கிறேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “படையுடன் செல்லும்போது மட்டுமே உனக்கு இளவரசனுக்குரிய இடம் கிடைக்கும்” என்றான். “எந்த இடத்திற்காகவும் நான் இப்போருக்கு வரவில்லை. என் தலைவரின் அருகிருக்க வேண்டும், அவருடன் இணைந்து போரிட்டேன் என்னும் பெருமை எனக்கு வேண்டும். அதற்காக மட்டுமே” என்றான் சங்கன்.

அணுகுந்தோறும் ஓசை பெருகி வந்தது. படைவீரர்கள் அனைவரும் உளக்கிளர்ச்சி கொண்டனர். மொத்தப் படையும் பேச்சொலிகளால் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் நெடுந்தொலைவில் காவல்மாடத்தின் உச்சியில் கொடியொன்று தெரிந்தது. “அது காவல்மாடம்! அங்கு படைகள் நிலைகொண்டிருக்கின்றன!” என்றான் சங்கன். “இல்லை, அது நகரும் காவல்மாடம். வண்டிகளில் வைத்து யானைகளால் இழுத்துக்கொண்டு போகிறார்கள் என்று எண்ணுகின்றேன். நோக்குக, அது மெல்ல நகர்கிறது” என்றான் ஸ்வேதன். காவல்மாடத்தின் உச்சியில் நின்று நோக்கிய முதல் வீரன் கொம்பொலி எழுப்ப மேலும் மேலுமென கொம்போசைகள் எழுந்தன. அங்கிருந்து பதினெட்டு புரவி வீரர்கள், முகப்பில் ஒருவன் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கொடி ஏந்திவர, அவர்களை நோக்கி வந்தனர்.

சங்கன் “வருகிறார்கள்! நம்மை நோக்கி வருகிறார்கள்! நான் செல்கிறேன்” என்று புரவியை முடுக்கினான். “நில்! நாம் இங்கு காத்து நிற்போம். அவர்களுக்கு நாம் யாரென்று இப்போது சொல்ல வேண்டியுள்ளது” என்று ஸ்வேதன் சொன்னான். புரவியில் முன்னால் சென்ற சங்கன் வளைந்து திரும்பி வந்தான். அவன் புரவி பொறுமையிழந்து கால்வைத்து துள்ளி தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. அணுகிவந்த புரவி வீரர்கள் விரைவழிந்தனர். முதலில் வந்த கொடிவீரன் தன் கொடியை அங்கு நாட்டி அசைவற்று நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த படைத்தலைவன் அவனுக்கிணையாக நிற்க அவனுடன் வந்த இரு புரவி வீரர்கள் மேலும் முன்னால் வந்தனர்.

முதலில் வந்த தூதன் தலைவணங்கி “நாங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரின் படையின் பின்னணிப் பிரிவை சேர்ந்தவர்கள். உங்கள் வருகையை அங்கிருந்து பார்த்தோம். யார் நீங்கள் என்று அறிய படைத்தலைவர் விரும்புகிறார்” என்றான். ஸ்வேதன் “நாங்கள் குலாடபுரியின் படையினர். குலாடகுலத்தைச் சேர்ந்த ஸ்வேதனும் சங்கனுமாகிய நாங்கள் விராட அரசரின் மைந்தர்கள். எங்களுக்கு முறைப்படி அழைப்பில்லையெனினும் மாமன்னர் யுதிஷ்டிரர் மீதும் அவர் இளையவர்கள் மீதும் ஆசிரியர்களிடம் மாணவர்களென பெரும்பற்று கொண்டுள்ளோம். அவர்களின் படைப்பிரிவில் இணைந்து போரிட விரும்பி வந்துள்ளோம்” என்றான்.

சங்கன் நடுவே புகுந்து எழுச்சியால் உடைந்த குரலில் “நான் பீமசேனரை பார்க்கவேண்டும்! அடிபணிந்து அவருடன் நின்று போரிட விழைகிறேன்” என்றான். “தங்கள் குடியின் ஓலையையும் முத்திரைக் கணையாழியையும் அளிக்கும்படி கோருகிறேன். பின்னணிப் படையை நடத்திச் செல்பவர் பாஞ்சாலராகிய திருஷ்டத்யும்னர். அவரிடம் செய்தி அறிவித்து ஒப்புதல் பெற்று நாங்கள் மீண்டு வருகிறோம். அது வரை உங்கள் படைப்பிரிவு இங்கு நிலைகொள்க! இங்கிருந்து முன்னால் வருவீர்கள் என்றால் எங்கள் தொலைவில்லவர்களின் அம்புகளுக்குக் கீழே வருகிறீர்கள்” என்று படைத்தலைவன் சொன்னான்.

ஸ்வேதன் தன் ஓலையையும் கணையாழியையும் அளித்தான். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர். குலாடபுரியின் படை முன்னால் வந்து விரிந்து அரைவட்டமாக நிலைகொள்ள பின்னிருந்து மேலும் மேலும் வந்து செறிந்தது. சங்கன் பொறுமையிழந்து “எதற்கு இத்தனை பொழுது? என்ன பணி செய்கிறார்கள்?” என்றான். “இளையோனே, அவர்கள் சென்று தங்கள் படைத்தலைவரை பார்க்கவேண்டும்” என்றான் ஸ்வேதன். “ஒருவேளை திருஷ்டத்யும்னர் நம்மை ஏற்காமலிருக்கக்கூடும். இந்திரப்பிரஸ்தத்தின் பெண்கொடை அரசுகளில் அவர்களே முதன்மையானவர்கள். நமது படைகளும் வந்தால் விராடரின் இடம் ஓங்கிவிடுமென்று எண்ணக்கூடும். நம்மை திரும்பிச் செல்ல ஆணையிடவும் கூடும்” என்றான் சங்கன். “அவ்வாறு உரைத்தால் நான் இங்கேயே சங்கறுத்து விழுவேன்.” ஸ்வேதன் “காத்திருக்கையில் இவ்வாறு எண்ணங்களை வளர்த்துக்கொள்வது எவ்வகையிலும் பொருளற்றது” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான். “முதலில் அங்கு என்ன நிகழ்கிறது என்று நமக்கு தெரியட்டும். அதற்கு முன் நாம் சொல்வளர்ப்பது உணர்வுகளை வீணடிப்பதென்றே பொருள்.”

சற்று நேரத்தில் அவனும் பொறுமையிழந்தான். நெடுநேரமாக காத்திருப்பதுபோல் தோன்றியது. அவ்வாறு காத்திருப்பதில் ஓர் இழிவுள்ளதோ என்று ஐயம் கொள்ளத்தொடங்கினான். “இளையோனே, நாம் கொள்ள வரவில்லை, அளிக்க வந்திருக்கிறோம். பெற்றுக்கொள்வதற்கு இத்தனை பிந்துபவர்கள் நம்மை அங்கு எவ்வண்ணம் நடத்துவார்கள்?” என்றான். “அதைப்பற்றி நாம் ஏன் எண்ண வேண்டும்? நாம் அளிக்க வந்தது தலையை” என்று சங்கன் சொன்னான். “ஆம், ஆனால் நம் குடியின் மாண்பையும் நம் மூத்தோரின் பெருமையையும் நாம் விட்டளிக்கலாகாது. எங்கேனும் ஓர் இடத்தில் குடிமாண்பை குறைத்து ஒப்புக்கொண்டோமெனில் அது மேலும் மேலும் குறைவதற்கு ஒப்புகிறோம் என்றே பொருள். ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்தவர்களாவோம். அறிக, பாரதவர்ஷத்தில் ஒவ்வொரு நாளும் குடிகள் பெருமை கொண்டு எழுந்து ஷத்ரியர்களாகிக் கொண்டிருக்கின்றன! எங்கோ ஷத்ரிய குடிகள் நிலமிழந்து செல்வமும் பெருமையும் அகல தொல்குடிகளாக மாறி மறைந்துகொண்டுமிருக்கிறார்கள்” என்றான்.

சங்கன் “அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றான். “அவர்களின் துணைப்படைத்தலைவர் அளவுக்காவது ஒருவர் வந்து நம்மை நேரில் எதிர்கொள்ளவேண்டும். படைப்பிரிவை நோக்கி நாம் செல்கையில் அங்கு முரசொலி எழுந்து நம்மை வரவேற்க வேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் கொடி தாழ்த்தி நாம் படைப்பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட வேண்டும். நம்மை சந்திக்கும் பொருட்டு திருஷ்டத்யும்னர் தன் கூடாரத்திற்குள்ளிருந்து வெளிவந்து முகமனுரைத்து வணங்க வேண்டும்” என்றான். சங்கன் “இம்முறைமைகள் அனைத்தும் நூல்களில் உள்ளவை. அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அவற்றை கடைபிடிக்கின்றனவா என்று நமக்கெப்படி தெரியும்? மூத்தவரே, நாம் அங்கிருந்து கிளம்பும்போது இந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் இவர்களுடன் சேர்ந்துகொள்வதென்றா எண்ணினோம்? சேர்ந்துகொள்வதென்ற முடிவை எடுத்தோம், அதற்காகவே வந்திருக்கிறோம். மறுஎண்ணங்கள் பொருளற்றவை” என்றான். “ஆம், ஆனால் இப்போது நம் குடிமூத்தார் நீண்ட வாழ்வறிதலின் அடிப்படையில் சொன்னவற்றை செவிகொண்டிருக்க வேண்டுமோ என்று ஐயுறுகிறேன்” என்றான் ஸ்வேதன்.

சங்கன் “வருகிறார்கள்” என்றான். படையில் கொம்புகளும் முழவுகளும் முரசுகளும் எழுவதை அவர்கள் கேட்டனர். இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறக்க ஒரு படைவீரன் முன்னால் வர அவனுக்குப் பின்னால் சிறிய குதிரைப்படை ஒன்று வந்தது. அனைவரும் ஒளிரும் இரும்புக் கவசங்கள் அணிந்திருந்தனர். முதலில் வந்த படைத்தலைவன் பொன்பூசப்பட்ட தலையணி அணிந்திருந்தான். நெருங்குந்தோறும் ஸ்வேதன் உள்ளம் படபடக்க நிலையழிந்தான். “முகப்பில் வருவது யார் திருஷ்டத்யும்னரேதானா?” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சங்கன் கேட்டான். “அரசகுடிப் பிறந்தவர்களுக்கு மட்டுமே பொன்பூச்சுள்ள தலைக்கவசம் அணியும் உரிமை உள்ளது” என்றான் ஸ்வேதன். “ஆம், அவரேதான். முன்பொரு முறை அவரை எங்கோ பார்த்திருக்கிறேன்… அந்த மூக்கை” என்று சங்கன் சொன்னான். “மூடா, நீ எங்கும் பார்த்ததில்லை. கதைகளைக் கேட்டு பார்த்தாய் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்” என்றான் ஸ்வேதன். அணுகி வருந்தோறும் மேலும் தெளிவுகொண்டு உருவம் துலங்கினான் பொற்கவசம் அணிந்தவன். “அவர் திருஷ்டத்யும்னர்தான்” என்று ஸ்வேதன் சொன்னான். “பாஞ்சாலத்தின் முத்திரை தலைக்கவசத்தில் தெரிகிறது.” சங்கன் “மூத்தவரே, அவருடையது நாம் ஓவியத்தில் பார்த்த அரசி திரௌபதியின் மூக்கு” என்றான்.

கொடிவீரன் நின்று அதை மண்ணில் நாட்டினான். அதைத் தொடர்ந்து வந்த இரு வீரர்கள் கொம்பும் சங்கும் முழங்கினர். அவர்களுக்குப் பின்னால் வந்த பொன்தலைக்கவச வீரர் புரவியை நிறுத்தி அவர்களை பார்த்தார். ஸ்வேதன் தன் புரவியை முன்னால் செலுத்த சங்கன் தொடர்ந்தான். அவர் தன் இரு அணுக்கர்களுடன் புரவியில் முன்னால் வந்தார். தலைக்கவசத்தை சற்றே மேலே தூக்கியபோது திருஷ்டத்யும்னனின் முகத்தை ஸ்வேதன் தெளிவாகக் கண்டான். திருஷ்டத்யும்னன் இரு கைகளையும் விரித்து அணுகி “விராடரின் மைந்தர்களும் குலாட குலத்து இளவரசர்களுமான ஸ்வேதரையும் சங்கரையும் தலைவணங்கி பாண்டவர்களின் படைப்பிரிவுக்கு வரவேற்கிறேன்” என்றான்.

ஸ்வேதன் பேசுவதற்குள் சங்கன் உரக்க நகைத்து “வரவேற்பின்றியும் நாங்கள் வருவோம். என் தலைவருக்கு வலத்தே நின்று போர்புரியும் பொருட்டே நான் வந்துள்ளேன்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து “உங்கள் இருவரையும் பற்றி நான் இதுவரை எதுவும் கேள்விப்பட்டதில்லை. விராடர் உங்களைப்பற்றி சொல்லத் தயங்குகிறார் என்று எண்ணுகிறேன். ஆனால் இத்தருணம் என் வாழ்வில் மிக இனிது. கொடிவழியினர் நினைவில் என்றுமிருக்கப்போகும் இருவரை சந்திக்கிறேன் என்று என் உள்ளம் சொல்கிறது” என்றான். ஸ்வேதன் “தந்தை எங்களிடமிருந்து உளவிலக்கம் கொண்டிருக்கிறார். ஆனால் எங்களைப் பார்த்தால் அவர் உள்ளம் மாறுமென்று எண்ணுகின்றேன்” என்றான்.

“வருக! நம் குலதெய்வங்கள் இவ்வரவால் மகிழ்வு கொள்க! இனி இந்திரப்பிரஸ்தத்தின் படை உங்களுடையது. படை நிற்பதற்கல்ல, படைத்தலைமை கொள்வதற்கு உங்களை அழைக்கிறேன்” என்றான். ஸ்வேதன் “அது எங்கள் நல்லூழ். எங்கள் மூத்தோர் மகிழ்க!” என்றான். சங்கன் “பாஞ்சாலரே, பீமசேனர் எங்குள்ளார்?” என்றான். “அவர் எங்கிருப்பார் என்று எண்ணுகின்றாய்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம், அடுமனையில்! அடுமனையிலெங்கோ இருக்கிறார்!” என்றான் சங்கன். “உண்மையில் நானும் பெரும்பொழுதை அடுமனையில்தான் கழிக்கிறேன். மெய்யாகவே நான் நல்ல அடுமனையாளன். ஒருமுறையேனும் இளைய பாண்டவருக்கு அன்னம் சமைத்து அளிக்க இயலுமென்று எண்ணுகின்றேன்” என்றான்.

“நீ அடுமனையாளன், பெருமல்லன், கதைப்பயிற்சி கொண்டவன், பீமனை எண்ணி கதை பயின்றவன். இவையனைத்தையும் நீ நூறு வாரை அப்பால் நிற்கையிலேயே எவரும் சொல்லிவிடமுடியும்” என்று திருஷ்டத்யும்னன் சிரித்தபடி சொன்னான். திருஷ்டத்யும்னனுடன் பேசிக்கொண்டு அவன் புரவிக்கு இருபுறமும் அவர்கள் சென்றனர். சங்கன் “நமது படைகள் எப்போது குருக்ஷேத்ரத்திற்கு சென்று சேரும்? அங்கு ஏற்கெனவே நமது படைப்பிரிவுகள் சென்று நின்றுவிட்டன என்று சொன்னார்கள். நமது படைப்பிரிவுகளை ஏற்கெனவே நின்றிருக்கும் படைகளுடன் சேர்ப்போமா? இதுவே படையணிவகுப்பா? அன்றி சென்ற பின்னர் மீண்டுமொரு அணிவகுப்பு நிகழுமா?” என்று உளக்கிளர்ச்சியுடன் கேட்டான்.

“முதற்படைத்தலைவராக தங்களை தேர்ந்தெடுத்ததை அறிந்தேன். ஆனால் தாங்கள் இறுதியாகச் செல்கிறீர்கள். முதல் படைப்பிரிவிலேயே இளைய பாண்டவர்கள் அர்ஜுனரும் பீமசேனரும் இருப்பார்கள் என்று தெரிந்துகொண்டேன். நான் முதல் படைப்பிரிவில் நிற்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? எங்கள் வில்லவர்கள் மிக விரைவு கொண்டவர்கள். நாங்கள் காடுகளில் விரைந்தபடியே அம்புவிடும் பயிற்சிபெற்றவர்கள். எங்கள் புரவிகளும் விரைந்து விசைகொள்பவை. தாங்களே வேண்டுமானாலும் பார்க்கலாம். எவ்வண்ணமேனும் முதல் படைப்பிரிவிலேயே எங்களை சேர்க்கும்படி சொன்னீர்களென்றால் எங்கள் வீரம் படைப்பிரிவினர் அனைவருக்கும் தெரியும்.”

அவன் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே சென்றான். “நான் எப்போது பீமசேனரை பார்க்கமுடியும்? என்னை அவருக்கு தெரிந்திருக்காது. நான் விராடரின் மைந்தன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நீங்கள் வந்து என்னை அறிமுகம் செய்தீர்கள் என்றால் நன்று. இல்லை நீங்கள் அறிமுகம் செய்யவேண்டியதில்லை. நீங்களே என்னைப் பார்த்தவுடன் சொன்னீர்கள், நெடுந்தொலைவிலேயே நான் அவருடைய மாணவன் என்பதை கண்டுகொள்ளமுடியுமென்று. என்னிடம் பலர் நான் பீமசேனரின் மாணவனா என்று கேட்டிருக்கிறார்கள். உண்மையில் பலர் நான் பீமசேனரா என்றே கேட்டிருக்கிறார்கள். எனது தோள்கள் அவர் அளவுக்கு பெரியவை அல்ல. ஆனால் நான் அவரென்று நினைத்துக்கொள்வேன். அதனால் என் உடல் அவரைப்போல் அசைவு காட்டத்தொடங்கிவிடும்.”

திருஷ்டத்யும்னன் வாய்விட்டு சிரித்து “இளையோரே, உங்கள் வினாக்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து மறுமொழி சொல்வதற்கு எனக்கு இந்த முழுநாளும் தேவைப்படும்” என்றான். ஸ்வேதன் சிரித்தபடி “இவன் பீமசேனரின் அருகே நின்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே இப்போருக்கு வந்துள்ளான்” என்றான். “அது நன்று. உங்களை நான் அவரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “எப்போது? நாம் இப்போதே கிளம்புகிறோமா?” என்றான் சங்கன்.

“இப்படைப்பிரிவின் முதல்நிரை இங்கிருந்து நான்கு நாட்கள் பயணத்திலிலுள்ளது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அடுமனைக் களஞ்சியம் இருபுறமும் சீராக உணவு செல்லும் பொருட்டு படையின் நடுவில் இருக்கிறது. அங்குதான் இளைய பாண்டவர் பீமசேனர் இருப்பார். ஒவ்வொரு அக்ஷௌகிணிக்கும் ஓர் அடுமனைப் பிரிவு உண்டு. எங்கள் அடுமனைப் பிரிவு அப்பால் உள்ளது. இப்போது நீங்கள் கிளம்பினால் சென்று சேர்வதற்கு இரவாகிவிடும். இன்றிரவு என்னுடன் தங்குங்கள். நாளை நானே உரிய தூதனுடன் உங்களை அனுப்பி வைக்கிறேன்” என்றான். “என்னால் புரவியில் அமர்ந்திருக்க முடியவில்லை. இன்றிரவு துயில்கொள்வேன் என்றே எனக்கு தோன்றவில்லை” என்றான் சங்கன்.

ஸ்வேதன் அப்படைகளை நோக்கியபடி புரவியில் தன்னை மறந்து அமர்ந்திருந்தான். படைவீரர்கள் அனைவரும் செம்மஞ்சள் வண்ணத்திலான ஆடைகள் அணிந்திருந்தனர். அவை புழுதிபடிந்து நிறம் மங்கியிருந்தன. புரவிகளும் அத்திரிகளும்கூட புழுதியில் மூழ்கியவையாக தெரிந்தன. மிக அப்பால் எங்கோ முரசொலி எழுந்தது. அது பலநூறு முரசுகளினூடாகப் பெருகி வந்து அவர்களைச் சூழ்ந்து கடந்துசென்றது. “நிலைக்கோள் ஆணை” என்று சங்கன் சொன்னான். “அந்தி அணைய இன்னும் பொழுதிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “வெளிச்சமிருக்கையிலேயே படை அமையத் தொடங்குவது நன்று. கூடாரங்கள் அமைப்பதும் பிறவும் இருள்வதற்குள் நிகழ்ந்துமுடிந்தால் குறைவான பந்தங்கள் போதும். கொழுப்பும் நெய்யும் மிஞ்சும்” என்றான்.

படைப்பிரிவு நிலைகொள்ளத் தொடங்கியிருந்தது. முதலில் பின்னால் வந்தவர்கள் அசைவைக் குறைத்து நிலைகொண்டனர். அதன் பின்னர் அவ்வசைவின்மை பரவி முன்னால் சென்று முன்னணிப் படையினரை நிலைகொள்ள வைத்தது. நிலைகொண்டதுமே கொம்போசைகள் அவர்களை சிறிய பிரிவுகளாக்கின. அவர்கள் ஒருவருடன் ஒருவர் மெல்லிய குரலில் உரையாடியபடி கொம்போசைகளையும் கொடியசைவுகளையும் கொண்டு ஆணைகளைப்பெற்று தங்களை வடிவம் மாற்றிக்கொண்டனர். நோக்கி நின்றிருக்கையிலேயே நீள்சரடுகளாக இருந்த அப்படைப்பரப்பு சிறு வட்டங்களின் தொகுதியாக மாறியது. அவ்வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று நுரையின் குமிழிகள்போல இணைந்தும் பிரிந்தும் இயங்கத்தொடங்கின.

படைப்பிரிவிற்குப் பின்னாலிருந்து கூடாரத்துணிகளையும் தோல்பட்டைகளையும் பாடிவீடமைப்பதற்குரிய மென்மரப்பலகைகளையும் யானைத்தோல்களையும் ஈச்சைப்பாய்களையும் மூங்கில்தட்டிகளையும் நாணல்பாய்களையும் மூங்கில்கழைகளையும் கயிற்றுச்சுருள்களையும் ஏற்றிய வண்டிகள் படைகளின் மையம் நோக்கி சென்றன. ஆங்காங்கே பிரிந்து விலகி அவை நிலைகொள்ள அவற்றிலிருந்த தச்சர்களும் வீரர்களும் இறங்கி விரைந்த கைப்பழக்கத்துடன் அவற்றை இறக்கி பிரித்து சிறு சிறு குவியல்களாக பரப்பினர். ஒவ்வொருவரும் பிறிதொருவரின் ஆணையின்றியே செயலாற்றினர். இடம் தெரிவானதும் சிலர் தறிகளை அறைந்தனர். மூங்கில்கள் ஆழ ஊன்றப்பட்டன. கயிறுகளை வண்டிகளில் இருந்து அவிழ்க்கப்பட்ட எருதுகள் இழுத்து இறுக்கின.

அவர்களின் கண்ணெதிரே நூற்றுக்கணக்கான கூடாரங்களும் பாடிவீடுகளும் எழத்தொடங்கிவிட்டிருந்தன. பாஞ்சாலப் படைப்பிரிவுகள் பிரிந்து ஆங்காங்கே அமைந்தன. ஸ்வேதன் புன்னகையுடன் “ஆறு ஏரியாவதுபோல” என்று சொன்னான். திருஷ்டத்யும்னன் “நீங்கள் சூதர் கதைகளில் ஈடுபாடுள்ளவர் என்று எண்ணுகின்றேன்” என்றான். சங்கன் “ஆம், நடனமும் ஆடுவார். கூத்தராக மாறுதோற்றம் கொண்டு நடிப்பதுமுண்டு” என்றான். “மெய்யாகவா?” என்று திருஷ்டத்யும்னன் நகைத்தான். “அதனால் அவருக்கு இளைய பாண்டவர் அர்ஜுனரை மிகவும் பிடித்திருக்கிறது. வில்லவரும் கூட” என்று சங்கன் சொன்னான். “எண்ணினேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆனால் அவருக்கு இளைய பாண்டவர் பிருகந்நளையாக மாற்றுருக்கொண்டது சற்றும் உகக்கவில்லை. மீளமீள அதை எண்ணி வருந்திக்கொண்டிருந்தார்” என்றான் சங்கன். “ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். ஸ்வேதன் புன்னகைத்தான். படைகளினூடாக அவர்கள் சென்று திருஷ்டத்யும்னனின் பாடிவீட்டை அடைந்தனர்.

முந்தைய கட்டுரைஇணைகோட்டு ஓவியம்
அடுத்த கட்டுரைசிரபுஞ்சி -கடிதங்கள்